வடமராட்சியில் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவு வணக்க நிகழ்வு
பிரசுரிக்கபட்ட திகதி: 20/04/2026 (திங்கட்கிழமை)
அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணம் - வடமராட்சியின் நெல்லியடி - கொடிகாமம் வீதியில் அணிஞ்சிலடியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உடுப்பிட்டி தொகுதி அலுவலகத்தில் 19.04.2026 ஞாயிற்றுக் கிழமை மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் முன்னெடுக்கப்பட்டது.
உடுப்பிட்டி தொகுதித் தலைவர் திரு. கிருஷ்ணபிள்ளை பிரகலாதன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பொதுச் சுடரினை மாவீரர் குயில் அவர்களின் தாயார் திருமதி. தெய்வேந்திரம் வனிதாமணி அவர்கள் ஏற்றி வைத்தார்.
தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரும் தமிழத் தேசியப் பேரவையின் வல்வெட்டித்துறை நகர பிதாவுமாகிய மதிப்பிற்குரிய திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின உத்தியோகபூர்வ பேச்சாளர் சட்டத்தரணி க. சுகாஷ்,
சட்டத்தரணி க. மகிந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் திரு. ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து அன்னைக்கு வணக்கம் செலுத்தினர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வல்வெட்டித்துறை நகரசபை உப தவிசாளர், முன்னாள் உப தவிசாளர்கள், பருத்தித்துறை நகரசபை கௌரவ தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அன்னை பூபதி அவர்களுக்கு தமது மலர் அஞ்சலிகளைச் செலுத்தினர்.
தமிழினத்தின் உரிமைக்காகவும், இந்திய அமைதி காக்கும் படையினரின் அநீதிகளுக்கு எதிராகவும் அறப்போர் புரிந்து தன்னுயிரை ஈகம் செய்த அன்னை பூபதியின் தியாகம் இந்நாளில் நினைவு கூரப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.