2 வருடங்கள் முன்பு தேவை ஒன்று கருதி காணி ஒன்று வாங்கினேன். அதன் பின்னர் கடந்த சில பல மாதங்களாக காணியின் பெயரை மாற்ற முயற்சிக்கிறேன், இதுவரை முடியவில்லை. கொஞ்சம் இழுபடுவதற்கு நானும் காரணம் - கப்பலில் நிற்கும் போது தொடர் முடியாத Follow Up.
சம்பந்தப்பட்ட அலுவலகம் இருப்பது – எங்கள் வீடு – சுவர் – அதற்கு அப்பால். தற்போதைய தவிசாளர் “நான் அறிந்த ஊரின் சேவகர் திரு.சிவாஜிலிங்கம்” அவர்கள். அலுவலகத்தில் பணி புரிபவர்களில் பலர் தெரிந்தவர்கள். காணியை எழுதியவர் சட்டத்தரணி தம்பி மயூரன், சபையின் உறுப்பினர், எமக்காக நேரடியாக வந்தும் கதைதுள்ளார். இன்னும் பெயர் மாற்றம் முடிந்த பாடில்லை.
குறித்த காணியை வாங்க “2 கோடி ரூபா உழைக்கக் கூட நான் இவ்வளவு நொந்தது இல்லை” என்று கூட அலுவலகத்தில் ஒரு நாள் நொந்து கூறினேன்.
குறித்த விடயத்தில் எனது மனதை நெருடும் 2 விடயங்கள்
1 – தனிப்பட்ட ரீதியில், ஏதாவது காரணங்களுக்காக இழுதடிக்கிறார்களோ என்பது, மற்றையது
2 – ஒரு பெயர் மாற்றத்துக்கே எவ்வளவு நீண்ட இழுதடிப்பு என்றால், அனுமதி பெற்று – மதில் கட்டி, கட்டடம் கட்டி, ஊரில் ஒரு தொழில் தொடங்குவது என்பது இலக்கு தானா என்பது?
அதே கடந்த மாதம் ஊரில் இருந்த வந்து, கொழும்பில் TIN (Number) சம்பந்தமாக ஒரு Verification தேவை என செய்தி வர, நேரேயே கொழும்பு – 2 இல் உள்ள Revenue Department இன் தலைமை அலுவலகத்துக்கு போனோம். விடயத்தைக் கூற கணனியில் பார்த்துவிட்டு எமக்குரிய கிளை அலுவலகத்தில் இருந்து OK பண்ணப் படவில்லை என்று கூறி அங்கு போகச் சொன்னார்கள்.
உடனடியாகவே ஆங்கு சென்றோம். கணனியில் பரிசோத்திது விட்டு, எனது IC இல் பழைய விலாசம் இருப்பது தான் பிரச்சனை என்றார் சம்பந்தப்பட்ட அலுவலர்.
தற்போதைய முகவரிக்குரிய ஏதாவது ஒரு Proof எடுத்து வரச் சொன்னார். OK என்று திரும்பும் போது அவருக்குக் அருகில் இருந்த பெண்மணி குறித்த சக அலுவலரிடம், “Online Proof ஏதாவது இருக்கக்கூடும் தானே அதைக் கேட்கலாம் தானே” என்றார்.
அலுவலர் உடனே எம்மைக் கூப்பிட்டு “Online Proof ஏதாவது தற்போது இருக்கின்றதா” என்றார். “நிறைய உள்ளது” என்றேன். அவர் ஒன்று போதும் எனக் கூறி பெற்றுக்கொண்டு, கணனியில் Update செய்து விட்டு, கீழே போய் TIN ஐ பெற்றுக் கொள்ளும்படி கூறினார்.
TIN Number எடுத்து Frank போட்டு Hard Copy யும் தந்தார்கள். மனைவியிடம் இருந்த Soft copy தான். அதையும் கதைத்து மனைவிக்கும் TIN இன் Hard copy பெற்றுக் கொண்டேன்.
அன்று வரை மகளுக்கும் TIN பதிவதில் சிக்கல் இருந்தது. இன்னுமொரு பிரிவில் அதையும் சரி செய்தார்கள்.
4 மணித்தியாலத்தில் வீட்டுக்கு வந்து விட்டேன். இது ஒரு உதாரணம் தான்.
2 வருடம் முன்பு, புது கம்பனிக்கு மாறும்போது, Police Clearance தேவை என்றார்கள். “என்னடா தலையிடி” என்று Police Station சென்றேன். சுமார் 10 நிமிடங்களில் தகவல்களைப் பெற்று, நாளை விசாரிக்க வீடு வருவதாகக் கூறினார்கள். வந்தார்கள். அடுத்த 2 நாட்களில் Clerance தயார்.
ஒரு நாடு, இரு தேசம் – 2
கொழும்பில், கொழும்பிலிருந்து வவுனியா வரும் போது பஸ் நிறுத்தும் இடங்களில் உள்ள பல உணவுச் சாலைகள் எப்படி உள்ளன என அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும். சுமார் 10 வருடங்கள் முன்பு, அப்போது புதிதாக பதவியேற்ற சுகாதார துறை அமைச்சர், தனது முக்கிய Agenda வில், நெடுந்தூர பஸ் தடங்களில் உள்ள உணவுச்சாலைகளின் தரத்தை முன்னேற்றுவது முக்கியமான ஒன்று என அறிவித்திருந்தார். அப்படி நடக்கவில்லை என்பது வேறு விடயம். ஆனால் அவரின் முக்கிய Agenda க்குள் அது இருந்தது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, ஏனெனில் அந்தளவுக்கு உணவுச் சாலைகளின் தரம்.
பிரதான காரணம் தென் பகுதிகளில், உள்ள PHI மார்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அலுவலகங்களின் செயற்றிறன்கள்.
பொது சுகாதாரம் கருதி, கொழும்பில் பல வருடங்களாக நான் உணவுச் சாலைகளில் உண்பது என்பது மிகக் குறைவு.
தென் பகுதியில் நிலைமை இப்படியிருக்க, யாழ்பாணத்தில் நிலைமை 180 பாகை எதிர்.
காலாவதியான பொருட்கள் வைத்திருந்த கடைகள், சுகாதாரத்துக்கு கேடு விளவிக்கும் வகையில் இயங்கிய உணவகங்கள் பல - தண்டம், வழக்குகள் என சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
ஊரில், வீதியோர கடை ஒன்றில் தோசை சுட்டு விற்கும் அன்ரியிடம், “தோசையை தாருங்கள் சாப்பிட்டுவிட்டு போகின்றேன்” என்று அண்மையில் கேட்ட போது மறுத்துவிட்டார். காரணம் PHI என்றார். இவ்வளவுவற்றுக்கும் அன்ரி தெரிந்தவர், அயலவர்.
எனக்கு மணி அடித்த விடயம் – PHI எங்கள் வீட்டுக்கும் Red Notice ஒன்று தந்தது தான்.
சீமந்து தரையில் பைப் ஒன்று வைப்பதற்காக முறையாக் வெட்டப்பட்ட சிறிய குழி ஒன்று மூடப்படாமல் இருந்தது. அதற்குள் நீர் தேங்கலாம் என பதியப்பட்டது.
பறவைகள் சிலது வாங்கவென நீர்கொழும்பில் உள்ள பெரும்பான்மை இனத்தவர் ஒருவரின் வீட்டுக்கு சென்றேன். பார்ப்பதற்கு சுகாதாரமற்ற முறையில் கூடு – வீடு இருந்தது. “PHI பிரச்சனை இல்லையா” என்று கேட்ட போது, “அவர்கள் ஏன் வீட்டுக்கு உள்ளே வரப்போகிறார்கள். கடைகளில் ஒழுங்கைகளில் தானே அவர்களுக்கு வேலை” என்றார்.
அதற்கு நான் “யாழ்பாணத்தில் PHI வீடு அல்ல, வீட்டுக்கு உள்ளேயும் வந்து பார்ப்பார்கள்” என்றும் எனக்கு Red Notice வந்ததையும் கூற ஆச்சரியத்துடன் சிரித்தார்.
எங்கள் பகுதிகளில் PHI காரணமாக சிலர் பாதிக்கப்பட்டாலும், சுகாதாரம் குறிப்பாக நானும் உன்னிப்பாக கவனிக்கும் உணவில் முன்னேற்றம் ஏற்படுவது நல்ல விடயம் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு நாடு, இரு தேசம் – 3
3 வருடங்கள் முன்பு ஊரில் நின்ற போது, காசு எடுக்க என்று, ஊரில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்றேன். ATM Card என்னிடம் இல்லாத படியால், வங்கி புத்தகத்தை கொண்டு சென்றேன்.
“கை எழுத்து ஒரே மாதிரி இல்லை” என்று காசாளர் பணம் தர மறுத்து விட்டார். Maneger இடமும் கதைத்தேன். கடைசி மட்டும் காசு தரவில்லை. வெறும் கையுடன் திரும்பும் போது “10 லட்சம் காசு வரவில் போட கொண்டு வந்திருந்தால், கையெழுத்து பாத்திருப்பீர்களா” என்று கேட்டேன். பதில் கூறவில்லை
HSBC மூடப்படுவதாக அறிந்து + அந்த (கொழும்பு) வங்கியில் எனது கணக்கு பல வருடம் செயற்படாமல் இருந்தாலும், கணக்கை புதுப்பித்து, மீண்டும் மூடி, இருந்த பணத்தை எடுக்கச் சென்றேன். அங்கேயும் “கையெழுத்து ஒரே மாதிரி இல்லை” என்று கூறி, எனது பழைய கை எழுத்தை கணனியில் காட்டி அதே மாதிரி போடச் சொன்னார்கள். ஓரளவு போட்டேன் காசை தந்து விட்டார்கள்.
இவ்வாறு ஒரு முறையல்ல பல முறை கொழும்பில் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் நடந்தது. காரணம் கணக்குகள் ஆரம்பித்து 20, 30 வருடங்கள். எனது கை எழுத்து மாறிவிட்டது. இது சாதாரணமாக சராசரி அலுவலருக்கு விளங்க வேண்டிய ஒரு விடயம்.
(சிங்கப்பூரான சிங்கபூரில் கூட ஒரு முறை கை எழுத்து மாறிவிட்டது எனக் கூறி, கணனியை காட்டி, பழைய கை எழுத்தைப் பெற்று காசை தந்தார்கள்)
ஒரு நாடு, இரு தேசம் – 4
முக நூல்
பறவைகள் விற்பது சம்பந்தாமாக எதுவும் போடக் கூடாது என்று Community Standard இல் உள்ளது.
பொதுவாக நான் விதிகளில் கவனம்.
மிகக் கவனமாகவே எங்கள் பறவைகளுக்கு என முகநூலில் ஒரு Page திறக்க வெளிக்கிட்டேன். அவ்வாறு திறக்கின்ற போது - Profile details போடுகின்ற போது சில “Caution” கள்.
“Jaffna Exotic Birds” என்று Jaffna வையும் சேர்க்கும் போதே உள்ளூர ஒரு உணர்வு – கவனமாக இருக்க வேண்டும் என்று.
Page ஐ திறந்த பின்னர், சில பறவைகள் படங்கள் மற்றும் விபரங்கள் போட்ட போதும் – “கவனமாக செயற்படு” என்று ஏதோ வந்தது, சரியாக ஞாபகம் இல்லை.
அதிகம் வாசகர்களைக் கொண்ட ஒரு யாழ் முகப்பக்கம் ஒன்றில் எனது சில பறவைகளின் படங்கள் போட்டு “உண்டு” என்று போட்டேன். அடுத்த கணமே அதை அகற்றி – “கவனம்” என்று பதில் ஒன்று வந்தது.
நான் இதுவரை பறவைகள் “For Sale” என்று வாசகத்தை முகநூலில் பாவித்ததே இல்லை.
ஆனால் தென்னிலங்கையை தளமாகக் கொண்ட, பறவைகள் சம்பந்தமான பல முக நூல் பக்கங்களில் ஒவ்வொரு நாளும் பறவைகள் விற்பனைக்கு – “For Sale” என்று மிகத் தெளிவாகக் போடுகிறார்கள், சற்று முன்னர் வந்த ஒன்று தான் கீழே.
ஒரு நாடு, இரு தேசம் பற்றி இன்னும் விரிவாக எழுதலாம். தனி நபர் தாக்குதல், சட்ட சிக்கல், மேலும் தாமதங்கள், தடங்கல்கள் போன்றவற்றை தவிற்பதற்காக சிலவற்றை மட்டும் இங்கு பதிவிட்டுள்ளேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.