கனடா ரொரன்ரோ புளுஸ் விளையாட்டுக்கழகத்தின் புளுஸ் நைற் 2016 நிகழ்வு 10.12.2016 ஆம் திகதி சனிக்கிழமையன்று மிசுசாக்கா டெரி றோட்டில்டில் உள்ள வார்டி கொஸ்பிற்றலரி சென்டர் மண்டபத்தில் பி.ப. 6.30 மணியளவில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விருந்துபசாரம், பரிசளிப்பு, இசை நிகழ்ச்சி என்று அன்றைய இரவுப்பொழுது மும்முனைகளில் களைகட்டியது, கனடாவிலும் வெளிநாடுகளிலும் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும், ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனின் உதவிகள் வழங்கப்பட்டமை போன்றன விழாவின் உச்சப்பெறுமானங்களாக இருந்தன.
இதற்கு முன்னதாக கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வழங்கிய உதவிகள் தாயகத்தில் வழங்கப்பட்டன, போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கையை இழந்த கிளிநொச்சியில் வாழும் சந்ரு என்பவருக்கு வளர்ப்பு மீன் குஞ்சுகள், கோழிக்குஞ்சுகள், மாஸ் என்பன வேண்டிக் கொடுக்கப்பட்டதுடன் கையில் 10.000 ரூபா பணமும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வல்வையில் போரினால் பாதிக்கப்பட்டு ஒரு கையையும், ஒரு காலையும் இழந்த முன்னாள் கடற்புலி போராளியான கம்பிகளின் மொழி பிறேமிற்கு மூன்று சில்லு கொண்ட மோட்டார் சைக்கிள் வழங்கும் வைபவம் வலை சந்தியில் சிறப்பாக நடத்தப்பட்டது.
வல்வை புளுஸ் தாபகர்கள் முன்னிலையில் இந்த மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது, மேலும் அடுத்த கட்ட பொருளாதார நடவடிக்கைகளை விஸ்தரிக்குமுகமாக வவுனியாவில் ஐந்து ஏக்கர் காணியும் வேண்டப்பட்டது, இதற்கான பணிகள் சென்ற வாரம் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
இவற்றையெல்லாம் இணைத்து கனடா புளுஸ் நைட் மிகவும் உற்சாகமாக களைகட்டியது.
அனைத்துப் பணிகளையும் கச்சிதமாக முடித்து, மக்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கி நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து மலர்ந்தது நிகழ்வு.
தாயகத்தில் உள்ள மக்களுக்கு சரியான முறையில் சேதாரம் இல்லாமல் உதவ முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதிலை செயல் மூலமாக தமக்கு காட்டியது பெரு மகிழ்வு தருவதாக விழாவிற்கு வந்திருந்தோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.
இசைப்பாடல்களின் மகிழ்வினிடையே பரிசளிப்புக்களும் புதிய நம்பிக்கை வழங்கின, அவ்வப்போது தாயகத்தில் இருந்து தருவிக்கப்பட்ட காணொளிகள் திரையில் காண்பிக்கப்பட்டன.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனுக்கு தெரிவிக்கும் நன்றிகள், அவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் வாக்குறுதிகளுடன் எழுதப்பட்ட ஒப்பந்தத்தை வழங்கி கையொப்பம் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உதவிகள் ஆறு மாத காலத்திற்கு கண்காணிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது அதை தாயகத்தில் உள்ள ரியூப்தமிழ் இளைஞர்கள் பொறுப்பேற்றது யாவும் புதிய பரிமாணமாக இருந்தன.
இதன் ஓரங்கமாக டென்மார்க்கில் தமிழ் பெண் விமானியாக பணியாற்றிவரும் அர்ச்சனா செல்லத்துரையும் இந்த நிகழ்வில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
பிரபல புளுஸ் விளையாட்டு வீரர் எஸ்.ஜெயபாலசிங்கம் வழங்க திரு. ராஜ்குமார் அதை அர்ச்சனா சார்பில் பெற்றுக்கொண்டார், அர்ச்சனா வழங்கிய நன்றியுரையின் காணொளியும் காண்பிக்கப்பட்டது.
அரங்கு நிறைந்த மக்கள் கரகோஷத்துடன் நிகழ்வு பாடல், பரதநாட்டியம், நடனங்கள், உரைகள் என்று பல கோணத்தில் ரசிகர்களைக் கவர்ந்தன, நன்கு அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் இரவுப் பொழுது தாயகத்தையும் இணைத்து, உள்ளுர் சாதனையாளர்களை பெருமைப்படுத்தி உலகளாவிய ஓர் இன்பமான பொழுதாகக் கரைந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.