பன்முக ஆளுமை கொண்ட சிறந்த செயல் வீரனை, சமுதாயப் பற்றாளனை, தலைவனை இழந்து தவிக்கின்றோம்.- சிவாஜிலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2017 (வியாழக்கிழமை)
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் வல்வை மண்ணில் பிறந்து இறக்கும் வரை பன்முக ஆளுகை கொண்ட சிறந்த செயல் வீரனாக சமுதாயப் பற்றாளனாக, தலைவனாக வாழ்ந்து வந்தவர். அன்னாருடைய இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமது சிறிய வயதிலேயே தந்தையை இழந்து பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து தம்பியாருடன் சேர்ந்து தாயாரின் அரவணைப்பில் வல்வெட்டித்துறை தொண்டைமானாறு ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தார்.
ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டு வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பின்னர் கல்லூரியில் பழைய மாணவர் சங்க நிர்வாகியாக, செயற்பாட்டாளராக நீண்ட காலம் செயல்பட்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்.
மாணவர் பருவம் தொடக்கம் தமிழ்த் தேசிய அரசியலில் தொண்டனாக, பிரச்சாரப் பீரங்கியாக விளங்கியவர்.
மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதிலேயே குறிப்பாக தமிழ் மொழியைப் போதிப்பதிலே தமது வாழ் நாளில் நீண்ட கால சேவை செய்த காரணத்தினாலேயே அதிரூபசிங்கம் ஆசிரியர் (மாஸ்ரர்) என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (C.T.B) நடத்துனராக பணிக்குச் சேர்ந்து பிரதி செயல்பாடு, நிர்வாக பொறுப்பு உத்தியோகத்தவர் பதவி உயர்வு பெற்று கடைமையாற்றி ஒய்வு பெற்றவர். இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நடாத்துனராகக் கடமையாற்றிய காலத்தில் கூட்ட நெரிசல் உட்பட பல்வேறு நெருக்கடிகளை மிக நேர்த்தியாகக் கையாண்டதன் மூலம் பெயர் சொல்லக் கூடிய ஆளுமை மிக்க ஊழியராக அடையாளம் காணப்பட்டிருந்தார். பொதுமக்கள் மத்தியிலும் பெறும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
சேவையில் இருக்கும் பொழுதே பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவனாகத் தோற்றி கலை இளமானிப் பட்டத்தையும் ( B.A) பெற்றிருந்தார்.
பொதுச் சேவையில் ஈடுபாடு காட்டியது மாத்திரமல்லாமல் கலை, இலக்கிய, நாடக், விளையாட்டு, சமயத் துறையிலும் தமது முத்திரையைப் பொறித்தவர். தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் நீண்ட காலம் தொண்டு புரிந்தவர்.
ஊரில் எந்த விழாவாக இருந்தாலும் அதிரூபசிங்கம் ஆசிரியர் அறிவிப்பாளராக மக்களின் பேராதரவுடன் கடமையாற்றியதை எண்ணிப் பார்க்கின்றேன்.
நான் சிறு குழந்தையாக இருந்த வேளையில் எமது அயல் வீட்டில் அமரர் அதிரூபசிங்கம் குடியிருந்த காலகட்டத்தில் என்னைத் தூக்கி வைத்திருந்த நினைவுகளை என்னிடம் அடிக்கடி பகிர்ந்து கொண்டிருந்தார்.
எனது இளமைக் காலத்திலே பொதுச் சேவைகளில் ஈடுபட்ட பொழுது, எதிர்காலத்தில் பெரிய பதவிகளிலும் பெறக் கூடிய திறமைகள் இருப்பதாக தீர்க்க தரிசனத்துடன் கூறியதை எண்ணிப் பார்ப்பதோடு, பல பதவிகளைப் பெற்று பொழுது பெரு மனதுடன் என்னைப் பாராட்டியதையும் நினைத்துப் பார்க்கின்றேன்.
வல்வை சனசமூக சேவா நிலையத்தில் நீண்ட காலமாக தலைவர் உட்பட பல பதவிகளை சிறப்பாக அலங்கத்திருந்தார். அமரர் 1978 ஆம் ஆண்டு தலைவராக இருந்த காலத்தில் வல்வெட்டித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்தி பிரதம விருந்தினராக நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தனை அழைத்து பரிசளிப்பு விழாவை வல்வை ரேவடிக் கடற்கரையில் மிகவும் சிறப்பாச நடாத்தியிருந்தோம்.
பரிசளிப்பு விழாவில் அறிவிப்பாளராக கடமையாற்றிய அதிரூபசிங்கம் அவர்கள் கொழும்பில் இருந்து வந்த குத்துச் சண்டை வீரர்களை எமது உள்ளூர் வீரர்கள் எதிர் கொண்ட பொழுது சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல் என வர்ணித்ததையும், அப்போட்டிக்கு தான் விளையாட்டுச் செயலாளராகக் கடமையாற்றியதையும் நினைத்துப் பார்க்கின்றேன்.
வல்வெட்டித்துறை விளையாடுத்துறைக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிய அமரர் அதிரூபசிங்கம் வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தில் பல்வேறுபட்ட நிலைகளிலும் குறிப்பாகத் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாகக் கடமையாற்றியது மாத்திரமல்ல இறக்கும் வரை கழகத்தின் காப்பாளராகவும் செயல்ப்பட்டவர்.
ரேவடி கடற்கரைப் பகுதி இராணுவ முகமாக இருந்ததையிட்டு, மனம் வருந்தி இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனது கோரிக்கையை நாம் எல்லோரும் வலியுறுத்த வேண்டும் என அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.
அதைப் போலவே இடம் மாற்றப்பட்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தார். இன்று ரேவடிக் கடற்கரை மிகவும் அழகாக அபிவிருத்தியடைந்தையிட்டு மன நிறைவு அடைந்திருந்தார்.
ரேவடிப் பகுதியில் நீச்சல் தடாகம் ஆரம்பிக்கப் பட போவதை ஆர்வத்துடன் வர வேற்றது மட்டுமல்லாமல் நீச்சல் தடாக வேலைகளைத் துரிதப் படுத்துமாறு எனக்கு அன்புக் கட்டளை இடுவார்.
வல்வெட்டித்துறை.ஒஆர்ஜி இணைய சேவைக்கு தனது தீவிர பங்களிப்பைச் செய்ததோடு மட்டுமல்லாமல், வல்வை சனசமூக சேவா நிலையத்தில், வல்வெட்டித்துறையில் இருந்து 1938 ஆம் ஆண்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற அன்னபூரணி பாய்மரக் கப்பலின் வடிவை நிரந்தரமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியமை எமது வராலாறுகளை இளையோர் எண்ணிப் பார்க்க உதவியாக இருந்து வருகின்றது.
வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இயங்கிவரும், அன்னை தெரேசா முன்பள்ளியின் தலைவராக கடமையாற்றியது மட்டுமல்லாமல், அடிக்கடி முன்பள்ளிக்குச் சென்று, நேரில் பார்வையிட்டு ஆசிரியர் குழந்தைகளுடன் பேசி மகிழ்வதை அடிக்கடி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தமது பிள்ளைகளுக்கு மாத்திரமல்லாமல் பேரப் பிள்ளைகளுக்கும் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி தனது தமிழ்ப் பற்றை வெளிக் காட்டியவர்.
அன்னாரின் போது வாழ்வு, மனைவியின் பூரண ஒத்துழைப்பு இருந்தமையால் வெற்றிகரமாகச் சென்றதை எம்மால் பார்க்கக் கூடியதாக இருந்தது.
தனது நான்கு பிள்ளைகளில் 2 ஆண் பிள்ளைகளையும் வெளிநாட்டு வணிகக் கப்பல்களில் தலைவனாக (கப்டன்) கடமையாற்றுவதற்கு உதவியாக இருந்தவர். மூத்த மகள் திருமணம் முடித்து கனடாவில் வாழ்ந்து வந்தாலும் அவரின் நினைவுகள் பிள்ளைகளின் குடும்பங்களைச் சுற்றியே வந்ததை அன்னாரின் உரையாடல்களின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. அது மாத்திரமல்லாமல் போர்க் காலங்களிலே யாழ்பாணம் – கொழும்பு பயணம் மிகவும் பயங்கரமாக இருந்த சூழலில் தனது இளைய மகளை கிளாலி கடலிலே பறி கொடுத்ததை அடிக்கடி வேதனையுடன் எண்ணிப் பார்த்ததையும் பிள்ளைப் பாசம் அவரை வாட்டியதையும், போரின் கோர முகத்தால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டதையும் வெளிச்சம் போட்டு காட்டி நின்றது.
அமரரின் நினைவாக கலை இலக்கிய நாடகப் படைப்புக்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் – கல்வி, விளையாட்டு, சமூகப் பணிகளையும் அவரது பிள்ளைகள் ‘அதிரூபசிங்கம் அறக்கட்டளை’ என்னும் பெயரில் செயற் படுத்த முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.
குடும்பத் தலைவரை இழந்து தவிற்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், தம்பி, மருமக்கள், பேரப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, சகல கலா வல்லவன் ஒருவனை இழந்து தவிக்கும் எமது மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அமரர் அதிரூபசிங்கத்தின் ஆத்மா சாந்தியடைய வல்வை முத்துமாரி அம்பாளும், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகனும் அருள் புரிய வேண்டும் என பிராத்திக்கின்றேன்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.