எமது தலையங்கம் – தரமான தவிசாளரை தக்கவைக்க தவறிவிட்ட வல்வை நகரசபை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/12/2021 (புதன்கிழமை)
எமது தலையங்கம் – தரமான தவிசாளரை வல்வை நகரசபை இழந்துள்ளது
நகரசபை பதவி ஏற்று இரண்டே மாதங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளார் திரு.செல்வேந்திரா அவர்கள்.
பட்டயக் கணக்காய்வாளார், முன்னாள் வல்வை பிரஜைகள் குழுத் தலைவர், மும்மொழிகளிலும் பரிச்சயமானவர், அரசியற் தொடர்புகளை கொண்டுள்ளவர், 90 களில் தீருவிலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இயக்கத்தின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்தவர், நல்ல அனுபவம் வாய்ந்தவர்...... என நீண்ட சாதகமான புள்ளிகளைக் கொண்டவர். தவிசாளராக தொடரவிட்டிருந்தால் நீண்ட காலத்தின் பின்னர் நல்ல ஒரு தவிசாளரைப் பெற்ற பெருமையை வல்வை நகரசபை பெற்றிருக்கும்.
முன்னாள் வல்வை நகரசபை தலைவரின் 3 ½ வருடங்களுடன் ஒப்பிடும் போது, செல்வேந்திரா அவர்கள் 2 மாதங்களில் முன்னெடுத்திருந்த திட்டங்கள் ஒப்பீட்டளவில் மிக அதிகம். "மரங்களை மட்டும் நட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் இலங்கை அரசிடம் நேரடியாகக் கேட்காமல் அமைச்சர் தேவானந்தாவிடம் கையேந்துகின்றார் இவர்" என்றார்கள்.
இலங்கை அரசு என்பது யாவர்?. அமைச்சர் தேவானந்தாவை இவர் சந்தித்தது இது முதற் தடவையல்ல. கடந்த வருடமும் கொழும்பில் உள்ள அமைச்சர் தேவானந்தாவின் அலுவலகத்தில் சந்தித்திருந்தார் - இந்த முறை கதைத்த – அதே ஆதிகோவில் நங்கூர தளம் சம்பந்தமாக கதைப்பதற்கு.
வல்வை நகரசபை கட்டடத்தை நாடா வெட்டி திறந்து வைத்ததே அமைச்சர் தேவானந்தா தான். இப்பொழுது செல்வேந்திரா அவர்கள், அமைச்சர் தேவானந்தாவை சந்தித்தை பிழையாகக் கூறுபவர்கள், அமைச்சர் தேவானந்தா நாடா வெட்ட வரும்போது ஏன் மெளனியாக இருந்தார்கள்.
3 ½ வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் செயற்திட்டங்களை முன் எடுக்காமல், திரு.செல்வேந்திரா அவர்களைத் தவிசாளராகத் தொடர்ந்து செயற்பட, இன்னும் குறைந்தது 4 மாதங்கள் தானும் அனுமதித்திருக்க வேண்டும். அல்லது தோற்கடிப்பதற்கு தரமான குற்றச் சாட்டுக்களை முன் வைத்திருக்க வேண்டும். இவை எதுவுமே இன்றி, ஏதோ 7+2 பெரும்பான்மை உள்ளது – ஆளைத் தோற்கடி – என்ற ரீதியில் நடாத்தி முடித்துள்ளார்கள்.
என்ன நோக்கத்திற்காக தாம் உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பதையும், ஊர் அபிவிருத்தியில் நகரசபையின் பங்கு என்ன என்பதையும் மறந்து விட்டார்கள் போலும்.
ஒரு வேளை இரண்டு மாதங்களே கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் தவிசாளராக செயற்பட, அவரை செல்வேந்திரா அணியினர் தோற்கடித்திருந்தாலும், அதுவும் தவறுதான்.
வேடிக்கை என்னவென்றால் வென்ற பக்கத்தில், அதாவது கூட்டமைப்பின் பக்கத்தில் ‘இன்னார் தான் அடுத்த தவிசாளர்’ என்று அறிவிக்கக்கூட முடியாதநிலையில் அமைந்த மும்முனைப் போட்டி என்கிறார்கள். பார்ப்போம் யார் அடுத்த தவிசாளர், அவரின் 'Vision + Mission' எப்படி இருக்கப் போகின்றது என்று?.
நகரசபை உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள். சுயமாக சிந்த்தித்து முடிவெடுங்கள். மேலிடம், கீழிடம் நடவிடம் என்று இடங்களுக்கு இடையில் மாட்டாதீர்கள். நியாயமாக உழைத்தால் மீண்டும் நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தவறினால் அடுத்த முறை தவறவிடப்படுவீர்கள்.
வேதனையான விடயம் வல்வை நகரசபை மக்கள் + புலம் பெயர் மக்கள், – இவை ஏதோ 17 உறுப்பினர்கள் மற்றும் கட்சிகள் சார்ந்த விடயம் என்று ஒதுங்கி இருப்பதுதான். நகரசபைக் குழப்பங்களால் 'தாங்கள் தான் பாத்திக்கப்படுகின்றார்கள்' என்பதை புரிவதற்கு தவறி வருகின்றார்கள். ஆனாலும் பெரும்பாலானோரின் முணுகல் - அடுத்த உள்ளூராட்சி தேர்தலில் நல்லதொரு பாடத்தை கற்றுக் கொடுக்கும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
வெற்றி (UK)
Posted Date: December 03, 2021 at 15:46
ஆதவன் அவர்களுக்கு,
நீங்கள் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாக ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அறிகின்றோம். அதை நீங்கள் ஏன் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கவில்லை.
அதை எம் வல்வை மக்களுக்கு தெரியப்படுத்துவீர்களா?
நன்றி
செ.வெற்றிவேல்
NAGULASIGAMANY NADANASIGAMANY (Canada)
Posted Date: December 01, 2021 at 22:44
புலம்பெயர்ந்த மக்கள் பலரும் பெரும்பான்மையான மக்களைச் சார்ந்தவர்கள் நகரசபைத் தலைவராக வருவதைத்தான் விரும்புகின்றனர். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அங்கையனும் ஊறணியில் அடிக்கல் நாட்டினார். நகரசபைத்தலைவரும் டக்கிளஸ் இடம் சென்றார். எவரிடம் சென்றாலும் எமது வல்வை நகர் அபிவிருத்தி அடைய வேண்டும். நகரசபை நூல் நிலையமும் சொந்தக் கட்டிடத்தில் அமையவேண்டும்.
நன்றி
ந.நகுலசிகாமணி
Rajkumar (Canada)
Posted Date: December 01, 2021 at 21:35
உயிருக்கு உயர் அச்சுறுத்தல் நிலவிய அந்த நாட்களிலேயே ஏற்றபொறுப்பிலிருந்து இறங்காமல் உண்மையாக ஊருக்கும், ஊர்மக்களுக்கும் சேவை செய்தவர். நீண்ட நாட்களுக்குப்பின் நகரசபைக்குக் கிடைத்த நல்ல மனிதரின் சேவையை வல்வை இழந்திருக்கிறது.
ஊரின் வளர்ச்சியில் உண்மையாக அக்கறைகொள்ளும் அனைத்து வல்வைமக்களின் ஆசையை அரசியலைக் கடந்து நிறைவேற்ற, உரியவர்கள் வழிவிடவேண்டும்.
அதுதான் இப்போதய யதார்த்த நிலையில் ஊரை உயர்த்தி நிற்கும் செய்வார்களா?
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: December 01, 2021 at 20:55
மிகுந்த வேதனை ஆழுமைமிக்கவரை தோற்கடித்து ஊருக்கும் மக்களுக்கும் என்ன நன்மையை செய்யபோகின்றார்களோ ?? ஊரின் நலனை மக்களின் முன்னேற்றத்தை விடவும் சுயநலமும் பதவிபோட்டிக்காகவும் தற்பெருமைக்ககவும் சிந்திப்பவர்களால் ஊருக்கோ ஊர்மக்களுக்கோ எந்த பயனும் இல்லை அப்பட்டி பட்ட எண்ணம் கொண்டவர்களை மக்கள் பணியில் இருந்து வெளியேற்ற படவேண்டியவர்கள் தள்ளிவைக்கபடவேண்டியவர்கள் .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.