வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம், புயலாக மாறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2016 (புதன்கிழமை)
வங்காள விரிகுடாவில் மீண்டும் தீவிர தாழமுக்கம் (Depression) ஒன்று உருவாகியுள்ளது. வங்காள விரிகுடாவின் தென் மேற்காக, இன்று மாலை இந்திய நேரப்படி 1730 ற்கு தமிழ் நாட்டின் தலைநகர் சென்னைக்கு தெற்கு தென் கிழக்குத் திசையில் சுமார் 95 கடல் மைல்கள் தொலைவில் (பருத்தித்துறைக்கு வடக்கு வட கிழக்காக சுமார் 250 கடல் மைல்கள்) நிலை கொண்டிருந்த தீவிர தாழமுக்கம் தற்பொழுது வடக்கு வட கிழக்காக நகர்ந்து வருகின்றது.
நாளை மாலை புயலாக (Cyclone) மாறவுள்ள இந்த தீவிர தாழமுக்கம் எதிர்வரும் 21 ஆம் திகதி பங்காளதேசின் துறைமுக நகரான சிற்றாகோங்கை (Chittagong) புயலாக தாக்கவுள்ளது.
குறித்த தாழமுக்கத்தினால் யாழ் தீபகற்பத்திற்கு நேரடியான பாதிப்புக்கள் இல்லாதபோதும், யாழ் தீப கற்பத்தின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் ஆழி அலையின் (Swell) தாக்கத்திற்கு உள்ளாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 13 ஆம் திகதி இலங்கைக்கு கிழக்காக உருவாகியிருந்த தாழமுக்கம் ஆனது தீவிர தாழமுக்கமாக மாறி (புயலாக மாறாமல்) தமிழ் நாட்டின் பாம்பனுக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பகுதியை நேற்று காலை கடந்து வலுவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கீழே படத்தில் தற்பொழுது புயலின் மையம் மற்றும் எதிர் பார்க்கப்படும் பாதை என்பன காட்டப்பட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.