வல்வெட்டித்துறை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பெருமை - விக்னேஸ்வரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 29/05/2017 (திங்கட்கிழமை)
கின்னஸ் புகழ் வீரர் அமரர் குமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) ஞாபகார்த்த நீச்சல் தடாகத்திற்குரிய அடிக்கல் நாட்டும் வைபவம் கடந்த 26 ஆம் திகதி வல்வெட்டித்துறை ரேவடிப் பகுதியில் இடம்பெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார் வடமாணசபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம் வருமாறு, .
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலங்களிலேயே வெளிநாட்டு வர்த்தகத்தின் பிரபல இறங்குதுறையாக விளங்கிய வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் நாம் அனைவரும் இணைந்து இன்று குமார் ஆனந்தனின் நினைவாக ஒரு நீச்சல் தடாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடாத்துவது வல்வெட்டித்துறை மக்களுக்கு மட்டுமல்ல, யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல, இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு பெருமையையும் கௌரவத்தையும் கொடுக்கின்ற ஒரு நிகழ்வாக அமைகின்றது.
1971 இல் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருக்கும் கோடிக்கரை எனும் ஊரிற்கு அவர் நீந்திக் கரை சேர்ந்தார். இவருக்கு முன் இதே ரேவடி கடற்கரையில் இருந்து 1954ம் ஆண்டில் அமரர் நவரத்தினசுவாமி அவர்கள் பாக்கு நீரிணையை முதன் முதலாக நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.
இவரின் இந்த சாதனையை அக்காலத்தில் வீரகேசரி குழுமம் 'ஆழிக்குமரன் கோடிக்கரையினிலே' என்ற தலையங்கத்துடன் மிகச் சிறப்பாக வர்ணித்திருந்தது மட்டுமல்ல அதனைப் புரிந்த குமார் ஆனந்தன் அவர்களுக்கு 'ஆழிக்குமரன் ஆனந்தன்' என்ற சிறப்புப் பெயரையும் வழங்கிக் கௌரவித்தது.
அதற்கும் மேலாக கோடிக்கரையில் இருந்து மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பி வந்த போது பல்லாயிரக்கணக்கான மக்கள் அக்கால அரசியல் தலைவர் தந்தை செல்வாவின் தலைமையின் கீழ் கடற்கரையில் நின்று அவரைக் கௌரவித்து வரவேற்பதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டமை அவரின் பெருமையை உலகறிய செய்தது.
ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் 20ற்கும் மேற்பட்ட சாதனைகளை புரிந்த போதும் அவற்றில் 07 சாதனைகள் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. எனினும் முதலாவது சாதனையாக 1963ல் வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரை வரை நீந்திக்கடந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை.
1. முதன்முதலாக தலை மன்னாரில் இருந்து இந்தியாவில் உள்ள தனுஸ்கோடி எனும் ஊரிற்கு 1971ம் ஆண்டில் நீந்திச் சென்று அங்கு பத்தே நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின் (சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப) மீண்டும் அங்கிருந்து தலை மன்னாருக்கு மொத்தம் 51 மணித்தியாலங்கள் 35 நிமிடங்களில் அவர் நீந்திக் கடந்தார்.
2. 1979ம் ஆண்டு மே மாதத்தில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் 187 மணித்தியாலங்கள் மிதிவண்டியில் தொடர்ந்து இடைவிடாது பிரயாணம் மேற்கொண்டார்.
3. 1979ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 136 மணித்தியாலங்கள் 28 நிமிடங்கள் பந்தொன்றை தொடர்ந்து கைகளால் அடித்து சாதனை படைத்தார்.
4. 1980ம் ஆண்டு மே மாதத்தில் 165 ளுவை ரிள களை 2 நிமிடங்களில் செய்து ஒரு புதிய சாதனையை நிலைநாட்டினார்.
5. 1979ம் ஆண்டு மே மாதத்தில் 33 மணித்தியாலங்கள் தொடர்ந்து ஒற்றைக்காலில் நின்று சாதனை புரிந்தார்.
6. 1980ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் உயர உதைத்து 9100 உதைவுகளை 7 மணித்தியாலம் 51 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
7. 1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில் தொடர்ந்து 80 மணித்தியாலங்கள் பாதங்களால் தவளை போல் நீரை உதைத்துக் கொண்டிருந்தும் சாதனை படைத்தார்.
இன்றைய இந்த நிகழ்வு சிறப்பாகவும் அந்நியோன்னியமாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எம்மிடையே வேற்றுமை இல்லை. மாறாக சிந்தனைத்தெளிவு உண்டு. இந்த நாட்டின் இனங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமை உணர்வுகளும் சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையாகும்.
இதனை இல்லாதொழிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதை இந்தக் கூட்டு கட்சி அரசாங்கத்தினால்;த்தான் முடியும். இதற்காக நாம் அனைவரும் இன, மத, மொழி பேதமின்றி ஒன்றாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து முன்னெடுக்க வேண்டும். தவறான சிந்தனைகள் மாறினால் நாட்டின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.
வடமாணசபை முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.