யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலை பாடிய கவிஞனுக்கு பெயர் கணியன், அதனுடைய கருத்து கணிதத்தில் சிறந்தவன் என்பதாகும்.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று உலகம் அதிசயிக்கும் வாழ்க்கைக் கணக்கை பாடலாகப் படியவனும் அவனே.
தீது என்றால் கழித்தல் நன்று என்றால் கூட்டல் இந்த இரண்டும் மற்றவர்கள் தருவதால் வருவதல்ல.. அதை உருவாக்குவது நாம்தான் என்று பாடிய உலகின் முதல் கணித மேதை.
வரவுக்காக உழைப்பதும் நாமே மீண்டும் அதை செலவு செய்வதும் நாமே என்று கூறி, மற்றவரை குறைகூறி பயினில்லை எல்லாவற்றுக்கும் நமது கணிப்பே காரணம் என்று கணிதத்தால் வாழ்க்கையை விளக்கியவனும் அவன்தான்.
அதே கணியன்தான் ஒன்றே உலகம் என்றும் கூறியவன், ஏனென்றால் உலக நாடுகளில் மொழி முதல் அரசுகள், மதங்கள் வரை அனைத்தும் வேறுபடுகின்றன, ஆனால் உலகம் முழுவதிற்குமே கணிதம் ஒன்றுதான், அதன் குறியீடுகளுக்கு வெளியால் உலகம் இல்லை.
கறுப்பன் வெள்ளையன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் அனைவரையும் ஒரே கயிற்றால் கட்டிப் போடுவது கணிதம்தான்.
எதிர்கால உலக மனிதர்களிடம் இரண்டு பிரிவுகளே இருக்கும் கணிதம் தெரிந்தவன் அது தெரியாதவன் என்ற பேதமே அதுவாகும், மற்றைய பேதங்களை காலம் தோற்கடிக்கும்.
சென்ற தடவை வல்வையில் நடந்த கணிதப்போட்டி பரிசளிப்பில் பேசியபோது நம்மிடம் 0 முதல் 9 வரைதான் இலக்கங்கள் உள்ளன, மாற்றுக் கிரகத்தில் இருந்து வரும் கிரகவாசிகள்; இந்த இலக்க முறையை உடைத்தால் தோல்வியடைய நேரிடும்.
ஆகவே நாம் போருக்கு தயாரில்லை சமாதானமாகவே வாழ விரும்புகிறோம் என்ற செய்தியை விண்வெளிக்கு அனுப்பினார் கார்ள் சாகன் என்ற விஞ்ஞானி என்ற தகவலைக் கூறியிருந்தேன்.
கிரகங்களுக்கிடையே மோதல் வரும்போது வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது கணிதம்தான் எந்தக் கிரகவாசியிடம்
ஆற்றலுள்ள கணித முறை இருக்கிறதோ அவனே பிரபஞ்சத்தை வெல்வான்.
இதை அறிந்தால் கணிதத்தின் மேன்மையை நாம் புரியலாம்.
இவற்றை ஆதார தகவல்களாக வைத்து, இந்த ஆண்டு நடைபெறும் கணிதப் போட்டிப் பரீட்சையும் சிந்திக்கிறேன். இப்போட்டியானது அமெரிக்கா முதல் நியூசிலாந்துவரை நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிதம் என்ற காரணத்தால்தான் உலகத்தை ஒன்றிணைக்க முடிந்திருக்கிறது, அதற்கு உதாரணம் கணிதத்தைபெயராகக் கொண்ட ஒரு தமிழ் புலவனின் சிந்தனையில் உலகத்தை ஒன்றாகக் காணும் ஞானம் பிறந்த அதிசயமேயாகும்.
அந்தவகையில் இந்தப் போட்டி பரீட்சை இன்று இலங்கைத் தீவுடன் உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது.
இன்று தமிழ் மொழி வெளிநாடுகளில் சிந்தனை மொழி என்ற இடத்தில் இருந்து பின்வாங்கி பிள்ளைகளின் சிந்தனையில் இரண்டாம் மூன்றாமிடத்திற்கு பின்வாங்கிவிட்டது.
எனவேதான் தமிழால் இணைவோம் என்ற காலத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம், நாம் தமிழர் என்று தமிழால் இணைவதற்கு நமது பெரும்பாலான இளைய தலைமுறையினரிடம் இன்று தமிழ் இல்லை.
தமிழழே இல்லை என்னும் போது தமிழால் இணைவது எப்படி, ஆகவேதான் கணிதத்தால் இணைக்கலாம் என்ற
கோட்பாடு இயல்பாக மேலெழுந்துவரக் காண்கிறோம், அது இலகுவாகவும் இருக்கிறது.
இன்று வளர்ந்த நாடுகளில் நடத்தப்படும் பீஸா என்னும் கல்வி ஆய்வானது விஞ்ஞானத்தை பெரிதாக வலியுறுத்தவில்லை தாய்மொழியும், கணிதமும் என்ற கோட்பாட்டையே அழுத்திப் பேசுகிறது, எதிர்கால உலகத்தை வெல்ல தாய்மொழிக்கு அடுத்ததாக கணிதமே முக்கிய இடம் பிடித்திருப்பது இதன் அடையாளமாகும்.
21ம் நூற்றாண்டின் உலகமயமாக்கல் தொழில் துறை போட்டா போட்டிகள் நாடுகளை இல்லாதொழித்து உலகத்தையே நாடாக்கும் சந்தைக்குள் சுனாமி வெள்ளமாக இழுத்துச் செல்கிறது.
பங்குச் சந்தை சுட்டெண்ணே எதிர்கால உலகம்..
அதனால்தான் உலகத்தை வெல்ல கணிதமே பிரதான அஸ்திரம் என்பதை உலக நாடுகள் கண்டுபிடித்து, அதை முன்னெடுத்துள்ளன, அந்தவகையில் சிதம்பரா கணிதப்போட்டி இம்முறை உலகளாவிய கணிதப் போட்டியாகிறது.
சென்ற ஆண்டைவிட அதிக மாணவர்கள் பங்கேற்க இருப்பதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன, கணிதம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததும் கணியனின் ஒன்றே உலகக் கொள்கையும் கூடவே எழுந்து வருவதுதான் எத்தனை சிறப்பு.
சென்ற ஆண்டு கணிதப் போட்டி பரிசளிப்பு விழாவிற்கு டென்மார்க்கில் இருந்து ஐந்து பேருடனும், தமிழகத்தில் இருந்து மூன்று பேருடனும் சென்றிருந்தேன், வல்வை முத்துமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபம் நிறைந்துவிட்டது.
இருப்பதற்கே இடமில்லாமல் வெளியே நின்று கொண்டிருந்தோம், முதல்வர் வந்து மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கியபோது இப்படியொரு வாய்ப்பு நமது காலத்தில் கிடைக்காமல் போய்விட்டதே என்ற கவலை மனதை வாட்டாமலும் இல்லை.
பல பாடசாலை ஆசிரியர்கள் அதிபர்களுடன், மாணவர்களுடனெல்லாம் உரையாடினேன், அவர்களில் ஒருவர் புலிமறவன் என்ற ஆசிரியராகும், அவர் அங்குள்ள கணித நிலை பற்றி என்னிடம் விளக்கமாகவே பேசினார், இப்போது அவர் நம்மிடையே இல்லை என்பதுதான் கவலை தரும் விடயமாக இருக்கிறது.
இலங்கையில் நான் பாடசாலை ஆசிரியராக இருந்த காலத்திலே ஒரு வகுப்பிற்கு பரீட்சை நடத்துவதே அக்காலத்து ஆசிரியர்களுக்கு பெரும் பாடாக இருக்கும், ஆனால் இங்கிலாந்தில் இருந்து இப்படியொரு பெரிய முயற்சியை முன்னெடுத்து அதை தொடர்ந்து வளர்பிறைபோல வளர்த்து செல்வதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
திட்டமிடல், ஒருங்கிணைத்தல், செயற்படுத்துதல் என்ற மூன்று விடயங்களையும் நன்கு ஆளுமைப்படுத்தி இதை நடத்துவதை காணமுடிகிறது.
சென்ற ஆண்டு வெளி நாடுகள் உட்பட இலங்கையில் பாடசாலைகள் எல்லாம் மாணவர்கள் கணிதப் பரீட்சைக்காக சென்ற வேகத்தையும், உற்சாகத்தையும் பார்த்தபோது, இந்த ஆண்டு எழுச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என்றே உணரத் தோன்றுகிறது.
சிதம்பரா கணித போட்டிப் பரீட்சை என்பது கல்வியே கண் என்ற கோட்பாட்டில் இருந்து ஊற்றெடுத்து உலகமயப்பட்டுள்ளது.
உலக அரசுகள் தம்மை பின்தள்ளி உலகமயமாகும் வேளையில் நாமும் கணிதத்தால் நமது இனத்தை உலகமயப்படுத்துவது காலம் நமக்கிட்ட கட்டளையாகக் கருத வேண்டும்.
மேலும் கணிதப்பரீட்சை, தமிழர் அதிகம் வாழும் தமிழகத்திலும், மலேசியா, சிங்கப்பூர், மொறீசியஸ் போன்ற நாடுகளுக்கும் விஸ்த்தரிக்கப்பட வேண்டும்.
இந்த முயற்சி மேலும் மேலும் வளரும் உலகத்தமிழரை அரசியலால், மொழியால், சமயத்தால், சித்தாந்தங்களால் என்று எதனாலும் இணைக்க முடியவில்லை என்று களைத்தோர்க்கெல்லாம் கணிதத்தால் இணைக்கலாம் என்ற செய்தியை இந்தப் பரீட்சையால் சொல்ல வைக்கலாம்.
டென்மார்க்கில் ஒரு புதிய மதம் இருக்கிறது, அது விஞ்ஞானமே எல்லாம் என்று கூறுகிறது, அதை வழிபடுவோர் இப்போது பெருகிச் செல்கிறார்கள்.
அதற்கான ஆலயம் மிகப்பிரமாண்டமான தோற்றத்துடன் எழுந்து நிற்கிறது, கடவுள்கள் கோட்பாடுகள், இஸங்கள் யாவும் கடந்த அறிவியல் சமயமாக அது தன்னை அடையாளம் காட்டுகிறது.
நாடுகள் மதங்கள், மொழிகளுக்கு அப்பால் உலகின் அறிவுள்ள மக்களை இணைத்துச் செல்கிறது விஞ்ஞானக்கடவுள்,
அதன் வேதமாக இருக்கிறது, அனைவரும் அறிந்த கணிதம்.
கணிதமே எதிர்கால வாழ்வு..
இன்றைய உலகில் உழைத்த பணத்தை சரிவர செலவு செய்யத் தெரியாமல் ஏழைகளாக இருப்போரே அதிகம்.
கையில் எடுக்கும் சம்பளத்தை கணித நுட்பம் தெரிந்தால் அதன் பெறுமதியை பல மடங்காக உயர்த்தி சிறிய வருமானத்தில் பெரிய வெற்றியை காண முடியும் அதற்கு கணிதத்தில் தெளிந்த அறிவு வேண்டும்.
ஒரு கணித மேதை ராமானுஜர் சொன்னதை இன்றும் உலகம் புரிய முடியாமல் தடுமாறுகிறது, அதுபோன்ற மேதைகள் இன்று இல்லை, அத்தகையோர் உருவாக்கப்பட வேண்டும்.
மாணவனின் உள்ளத்தில் புதுமையை உருவாக்குவது கணிதம், அல்லும் பகலும் கணிதத்தை சிந்தித்தால் டிமென்சியா என்னும் மறதி நோய் வராது என்கிறார்கள்.
இளமையாக இருக்க வேண்டுமா அல்லும் பகலும் மனதில் மனக்கணக்கை ஓடவிடுங்கள் கணிதம் போல நீங்களும் இளமை பெறுவீர்கள் என்கின்றன தன்னம்பிக்கை நூல்கள்.
ஏழ்மை துயரமல்ல தான் ஏன் ஏழையாக இருக்கிறேன் என்பதை அறிய முடியாது ஒரு மனிதன் புவியில் வாழ்வதே பெரும் துன்பம் என்றான் பாரதி..
ஏழ்மை முதல் அத்தனை துன்பங்களின் காரணங்களையும் கண்டறிய ஆணிவேராக அமைவது கணிதமே..
வெற்றி மட்டுமே முக்கியமல்ல தோல்வியும் முக்கியமே.. தன்னம்பிக்கை நூல்கள் தோல்வி என்பது பெரிய வரம் என்று கூறுகின்றன.
பரீட்சையில் அடையும் தோல்வியே புதிய தேடலுக்கு தூண்டுதலாகும், வெற்றியும் தோல்வியும் சமமானவையே.. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்றாலும் அதுதான் கருத்தாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.