கொட்டி போல் ஆம்பல் போல் தன்னை விட்டு விலகாது இருந்து தன்னுடன் உறவாடிய ஒரு தலைமகனை வல்வைத் தாய் இழந்துவிட்டிருக்கின்றாள். ஆறு தசாப்தங்கள் பல்துறைகளில் பாதமலர்களைப் பதித்த ஒரு சர்வகலாவல்லவனை சகலகலாவல்லி பறிகொடுத்திருக்கிறாள். இலங்கையில் ஓய்வூதியம் பெறும் அகவை 55. ஆசிரிய அரும் பணிக்கு அதிரூபசிங்கம் மாஸ்டர் தன்னை அர்ப்பணித்த கால எல்லையும் ஏறக்குறைய அதுவேதான் !
வல்வை சிறாரின் அறியாமை இருளகற்ற இரவுப்பாடசாலையை ஆரம்பித்தவர்களுள் முதன்மை பெற்றவர் பேராசிரியர் சபா.ராஜேந்திரன். முதல் அணியில் அதிரூபசிங்கம் அவர்களிடம் தமிழ் படித்தவர்களில் யானும் ஒருவன். அன்றைய எங்கள் ஆசிரியர் கல்வித் தகமைகளைப் பெரிதாக பெற்றிருந்தவர் அல்லர். இவர் கொடுமையிற் கொடுமை என்று ஔவை குறிப்பிடும் வறுமை காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பைப் பறிகொடுத்தவர். இதன் விளைவாக ஈழத்தமிழ்க் கலையுலகம் ஒரு தமிழ்ப் பேராசிரியனை இழந்திருக்கிறது என துணிந்து நான் சொல்வேன். எங்கள் இந்த "சுப்பர்ஸ்டார்" கூட பேருந்து நடத்துனராகத்தான் தன் வாழ்வினைத் தொடங்கியவர். பின்னாளில் ஒயாத உழைப்பால் உயர்ந்தவர், தன் வாழ்வில் தொழில் துறையிலும் உயர்ந்தவர், கல்வித்தகைமைகளையும் அடைந்தவர். அதிரூபசிங்கம் சொற்சிலம்பாட்டத்தில் மட்டுமல்ல மல்யுத்த, சிலம்பாட்டக் கலைகளிலும் சிறந்து விளங்கியவர். ரேகு மைதானத்தில் நடந்த ஒரு மல்யுத்த போட்டியில் வல்ல மல்யுத்தவீரன் வைரவநாதனை இவர் வெற்றிகொண்டார். சூழ்ந்து நின்று மாணவர் நாங்கள் செய்த ஆரவாரம் இவருக்கு சோமபானம் ஆகியிருக்கலாம்.
கண்ணதாசன் குறிப்பிடும் ஆசை தரும் "ஓசைநடை" யை எனக்கு பயிற்றியவர் இந்த தமிழ் ஆசான். இவர் நான் இடைநிலை மாணவனாக இருக்கையில் வடமாகாண ஆசிரியர் சங்கம் நடத்திடும் பேச்சுப்போட்டிக்காக "சுகம் எங்கே?" என்ற தலைப்பில் எனக்கு விடயப் பொருள் எழுதித் தந்திருந்தார். அதைப் பேசிய எனக்கு வடமாகாணத்தில் இரண்டாம் கிடைத்தது.
வல்வையின் நடுநாயகமாக அமைந்திருக்கும் வல்வை சனசமூக சேவாநிலையம் 1968ம் ஆண்டில் விமரிசையாக அதன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. அதனை ஒட்டி "வல்வையின்இன்றையநிலை" என்ற மகுடத்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் முதல்மூன்று இடங்களைப் பெற்றோர் முறையே ஆ.அதிரூபசிங்கம், ச.கமலரங்கன், வ.ஆ.தங்கவேலாயுதம். 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எனக்கு முதலிடம், 2ம் 3ம் இடங்களை ந.அனந்தராஜ், ந.நகுலசிகாமணி பெற்றார்கள். இளையவர் எமக்கு இயக்குநராக இருந்தவர் அமரர் ஆ.அ அவர்களே.
1965 மார்ச் இல் ஒரு பொதுத் தேர்தல். இரு தினங்கள் வடமராட்சி கிழக்கில் தங்கி திரு.க.துரைரத்தினம் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட 20 தொண்டர்களைக் கொண்ட ஒரு குழு பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது. அதில் 16 வயது நிரம்பிய கேர்ணல் கிட்டுவின் அண்ணா காந்திதாசன், நகுலசிகாமணியுடன் நானும் இருந்தேன். என் வீட்டிற்கு வந்து அதிரூபசிங்கம் ஆசிரியர் பொறுப்பேற்றதினால்தான் என் பெற்றோரின் அங்கீகாரம் எனக்குக் கிட்டியது,
03 -03 -1963ம் ஆண்டு பாக்கு நீரிணையைக் கடந்து மகோன்னத சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு ஒரு வாழ்த்து வைபவம் வல்வை ரேகு மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய 18 வயது விழா நாயகனுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய 24 வயது இளைஞனின் வழமையிலும் வழக்கிலும் இல்லாத பெயர் அதிரூபசிங்கம். அவனது அன்றைய வரவேற்புரை பாரிய வரவேற்பைப் பெற்றது. மறு தினம் தனது ஆசிரியத் தலையங்கத்தில் அன்றைய ஈழநாடு இதழின் பிரதம ஆசிரியர் ஹரன் அவனது பெயரைக் குறிப்பிடாது பின்வரும் குறிப்பைச் செய்திருந்தார். ''அந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய இளைஞன் அழகான தமிழில் அற்புதமான ஒரு பேச்சினை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்திருந்தார்."
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜனாப் அப்துல்காதர், ஒரு யாழ் வாசி அவர் தனது பட்டப்படிப்பிற்கு தமிழையும் ஒரு பாடமாகத் தேர்ந்தவர். ஒரு தமிழறிஞர். நல்ல தமிழ் ஆர்வலர். நான் தொழில் வாழ்வின் நுழைவாயிலில் இருந்த காலகட்டத்தில் கொலை வழக்குகளில் தமிழில் தொகுப்புரைகளை நிகழ்த்திய என் போன்ற இளம் சட்டத்தரணிகளை தட்டிக் கொடுத்த ஒரே ஒரு நீதிபதி அப்துல்காதர் அவர்களே !
எனை ஒத்தவர்களுக்கு மட்டுமல்ல அப்துல்காதர் போன்ற தமிழ் அறிஞர்களுக்கும் ஆசிரியர் அதிரூபசிங்கம் அவர்கள் ஆசிரியப்பணி செய்த ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்லி என் மடலை மடக்கவுள்ளேன்.
ரேகு விளையாட்டுக் கழக வருடாந்த மெய்வல்லுநர் போட்டி வெகு சிறப்பாக நடை பெறுகின்றது. அதே ரேகு மைதானத்தில்த்தான் ! நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அதே அதிரூபம் கொண்ட சிங்கம் தான்! அந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பைப் பெற்றிருந்தவர் அன்றைய பரு. மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அவர்கள். அன்னார் தன் தலைமை உரையில் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட கூற்று...
அறிவிப்பாளராகப் பணியாற்றிய அதிரூபசிங்கம் தன் பணியை மிகக் கவர்ச்சிகரமாகச் செய்கிறார். அவர் அடிக்கடி வீராங்கனைகள் என்ற சொல்லைப் பாவித்தார். அச்சொல்லை நான் இதற்கு முன்னர் கேட்டதில்லை. அவரிடம் இன்று நான் ஒரு புதிய தமிழ்ச்சொல்லைப் படித்திருக்கிறேன். அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகின்றேன்.
நல்ல - வல்ல - பயனுள்ள ஒர் அற்புதக் கலவையை - ஒர் அரும் பொருளை எமக்களித்ததற்காக பரம்பொருளுக்கு நாமும் நன்றி கூறக் கடமைப்பட்டவர்களே !
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.