இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு பெரிய மாநிலங்கள் உள்ளடங்கிய கூட்டமைப்பே பிரித்தானியா, நான்கு மாநிலங்களுக்கும் தனித்தனிக் கொடிகள் இருந்தபோதும், நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய பிரித்தானியாவுக்கென தனியான கொடியும் வேறாக உள்ளது. இந்த நான்கு மாநிலங்களில் மிகப்பெரிய நிலப்பரப்பினையும், சகல வசதிகளையும் கொண்டுள்ள அழகிய மாநிலமான இங்கிலாந்தில் நிறைய வேலை வாய்ப்புக்கள் உள்ளதனைக் கருத்திற்கொண்டு உலகின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் நிரந்தர குடியேற்றத்திற்காக இங்கே வருகிறார்கள். வரும் மக்கள் எதிர்பார்ப்புக்கேற்றபடி வளமாக இருக்கிறார்கள் என்பதுவும் உண்மையே.
ஸ்கந்தவேல் ஆலயத்தின் ஸ்தாபகர் ஒரு இலங்கையரே. பதுளை மாவட்டத்தின் ஒரு கிராமத்து சிங்கள குடும்பத்தாருக்கு மகனாகப் பிறந்தவா் அவர். தந்தையர் பதுளை மாவட்டத்தின் பிரபல வைத்திய அதிகாரி ஆவார். கதிர்காமம் முருகன் மீது நிறைந்த பக்தி கொண்டிருந்த காரணத்தால், அன்பு – அகிம்சை – சமாதானம் ஆகியவற்றினில் தீராத ஈடுபாடு கொண்டிருந்தார் அவர். கதிர்காமம் முருகன் அவருக்கு “ சுப்பிரமணியன் ” என்று நாமம் சூட்ட அதுவே காலம் முழுவதும் அவரது பெயராக நிலைத்தது. “ சனாதன தர்மம் ” சிந்தனையை இவர் மூலம் மேலை நாடுகளில் பரப்ப முருகன் திருவுளம் கொண்டதால் சுப்பிரமணியரை லண்டனுக்கு இடம் பெயரச் செய்தார். அவரும் லண்டனில் பல்வேறு இடங்களிலும் ஒரு தர்ம சாலையை அமைக்க பெருமுயற்சி செய்தும் உரிய இடம் கிடைக்காமையினால், “ வேல்ஸ் ” மாநிலத்தின் அழகிய மலைப்பகுதியினைத் தேர்ந்தெடுத்து முருகன் கோவிலை ஸ்தாபித்தார்.
1973 இன் ஆரம்பத்தில் ஆறுபேர் மட்டுமே அமர்ந்திருந்து பிரார்த்தனை செய்யக்கூடிய ஒரு இடமாகவே “ முருகன் நிலையம் ” அமைந்திருந்தது. அவரது இறைபணியை உணர்ந்த பலரும் அவரை “ குருஜி சுப்பிரமணியர் ” என்றே அழைத்தனா். படிப்படியாக அது ஒரு இறைபணி நிலையமாக மாற்றம் பெற 1991இல் மகாசக்தி (காளி) கோவிலும், பின்னர் ஸ்ரீரங்கநாதர் ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது. குருஜியைப் பின்பற்றும் பலரும் அவரின் சிஷ்யர்களாக இணைந்தனா். குரு சுப்பிரமணியம் 2007இல் தனது 76 வயதில் காலமாகிய பின்னர் அவரது சிஷ்யர்களால் இக்கோவில் பராபரிக்கப்பட்டு வருகிறது. கோவில் பராபரிப்புக்காக ஒரு ஏழெட்டுப் பேர் வரையும், பண்ணைகளைப் பராபரிக்க பதினைந்து பேர் வரையிலுமாக உள்ள அனைவரும் ஆங்கிலேயர்களே. இவர்கள் வேதனம் பெறாமல் கடமைபுரியும் முழுநேரத் தொண்டர்கள். “ சனாதன தர்ம ” கோட்பாட்டினூடாக இறைபணி ஒன்றையே மனதில் நிறுத்தி கடமை புரிபவர்கள்.
பூசை வேளைகளில் பூசைக்கு உதவுவது – பாடுவது – பஜனை செய்வது, ஏனைய நேரங்களில் பண்ணைகளைப் பராபரிப்பது, பண்ணைகளிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் போன்றவற்றை விற்பனைக்கு விடுவது, வருடந்தோறும் முருகனைத் தரிசிக்க வரும் லெட்சக்கணக்கான அடியார்களை வரவேற்று – உபசரித்து – உணவளித்து வழியனுப்புவது இவ்வாறாக அனைத்து வேலைகளையும் அவர்களே செய்கின்றனா். உதாரணத்திற்கு ஒன்றினைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பூஜை இல்லாத ஒரு இடைவெளியில் பிரதமகுரு, (சுவாமிஜி ஆங்கிலேயர் ) அடியார்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை கையில் வாளியும் – துடப்பமும் கொண்டு சுத்தம் செய்ததை நாம் நேரடியாகப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். அங்குள்ள அனைவரும் எல்லா வேலைகளையும் எவ்வித வேறுபாடுமின்றிக் கூட்டாக இணைந்து செய்கிறார்கள்.
பிரித்தானியாவின் நான்கு மாநிலங்களில் ஒன்றான “ வேல்ஸ் ” மாநிலத்திலேயே பிரபலமான ஸ்கந்தவேல் ஆலயம் உள்ளது. லண்டனில் இலங்கைத் தமிழ் மக்கள் கூடுதலாக வாழுகின்ற Tooting, Mitcham ஆகிய பகுதிகளிலிருந்து அல்லது லண்டன் மைய நகரத்திலிருந்து A3, M25, M4 ஆகிய மூன்று நெடுஞ்சாலைகளினூடாக 4 ½ மணி நேரத்தில் 235 மைல் தூரத்தைக் கடந்து சென்றால் (தூரம் என்பது லண்டனில் “ மைல் ” இலேயே இப்போதும் கணக்கிடப்படுகிறது. (கி.மீற்றரில் அல்ல) கூடிய வேகத்துடனான 8 வழிப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகளின் நேர்த்தி, வீதி, சமிக்ஞைகள், வீதி எச்சரிக்கைகள், வீதி மாற்றங்கள் ஆகியன மிகச் சீரானவை. ஆச்சரியப்படுத்துபவை.
வேல்ஸ் முருகன் ஆலயத்தின் அமைவிடம் பற்றி சுருங்கக் கூறுவதாயின், மத்திய லண்டன் பகுதியின் கிழக்குப் பக்கமாக லண்டனின் மிகப்பெரிய விமான நிலையமான ஹீத்றூ (Heathrow) விமான நிலையம் பிரிஸ்ரல் பெருநகரம் ஆகியவற்றைத் தாண்டி வர “ Carmarthen ” எனும் நகரம் வருகிறது. இங்கிருந்து ஐந்து மைல் தூரத்தில் “ Lampeter ” எனும் ஊருக்குப் போகும் வழியில் வேல்ஸ் முருகன் ஆலயம் உள்ளது.
பொதுவாகவே “ வேல்ஸ் ” மாநிலத்தில் மலைகள் – பள்ளத்தாக்குகளில் வளைந்து வளைந்து செல்லும் நெடுஞ்சாலைகளும், மலைகளில் மேலும் கீழுமாகத் தெரிகின்ற கட்டிடங்கள், தொழிலகங்கள் அடிக்கடி பனிப்படலங்களாலும் முகிற் கூட்டங்களாலும் மூடப்படுவதால் இரவில் வாகனங்களில் பயணிப்போருக்கு பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்துகிறது. அதே மலைப்பாதையின் பகற்பிரயாணம் இயற்கையின் எழில்மிகு காட்சிகளைக் கண்குளிரக் கண்டுகளிக்க அருமையானதொரு வாய்ப்பாகவும் அமைகிறது.
பிரதான வீதியிலிருந்து, எந்த அறிவிப்புப் பலகையும் இல்லாமல் திடீரென இடது பக்கம் பிரிந்து செல்லும் பாதையின் ஆரம்பத்தில் இரு புறமும் ஒரு சில குடியிருப்புக்கள் காணப்பட்டபோதும், அந்த 4 மைல் தூர காட்டுப் பாதையும் மிக ஒடுங்கிய சீரற்ற பாதையாகவே உள்ளது. சாதாரணமான கார்கள், எங்கள் நாட்டு Hiace போன்ற சிறிய வாகனங்கள் மட்டுமே இந்த ஒடுங்கிய வீதியால் செல்ல முடியும். இந்த சீரற்ற கிரவல் பாதையால் பயணிக்கும் இந்த வாகனங்களைக் கூட வீதியை நெருங்கி வளர்ந்துள்ள முட்செடிகள் உரஞ்சித் தள்ளுகின்றன. இதற்கும் மேலாக, கூடிய இருக்கைகள் கொண்ட எந்த வாகனமும் இந்த வீதியில் பயணிக்க முடியாது. பாதையின் ஒரு பக்கம் மிகச் சரிவான பள்ளம். மறுபக்கம் உயர்ந்து செல்லும் காடடர்ந்த மலைப்பகுதி. கீழிருந்து மேலேறிச் செல்லும் வாகனமும், எதிரே மேலிலிருந்து கீழே வரும் வாகனமும் விலகிச் செல்ல வசதியாக ஒரு சில இடங்களில் கூடுதலாக முட்செடிகளைக் களைந்து இடம் ஒதுக்கியுள்ளார்கள். இந்தப் பாதையில் எதிரே வரும் வாகனங்கள், வீதியின் குறுக்காகச் செல்லும் காட்டு மிருகங்கள் , பாதை அருகே உள்ள பயங்கரமான பள்ளம் ஆகிய இவற்றினைக் கருத்திற் கொண்டு எல்லா வாகனங்களும் முன் - பின் விளக்குகளை பகலிலும் , இரவிலும் எரியவிட்டபடியே பயணிக்கிறார்கள்.
பனி மூட்டத்தினால் உண்டான கடுங்குளிரின் மத்தியிலும் ஒருவாறாக எமது வாகனம் மேலேறி சிறிய சமதளப்பகுதிக்கு வருகிறது. விடியல் வராத அதிகாலை சரியாக 5 மணிக்கு கோவில் மணி ஒலிக்கிறது. எங்கள் கோவில்களில் இருப்பது போன்று பெரிய கண்டாமணியோசை அங்கில்லை. வாகனத் தரிப்பிடத்தருகே நாம் ஏறிவந்த வீதியின் முடிவில் மிகப்பெரிய விநாயகர், பெரிய பீடத்தில் நான்கு தூண்கள் கொண்ட பெரிய கூடாரத்தினுள்ளே அமர்ந்துள்ளார். விநாயகரின் கழுத்தில் ஒற்றை மாலை மட்டுமே உள்ளது. அபிஷேகம் – பூசை நடைபெறுவதற்கான அறிகுறி எதுவும் அங்கு காணப்படவில்லை.
வேல்ஸ் மாநிலத்தின் கடுங் குளிர் காலத்திலும் கூட அதிகாலைப்பூஜை 5 மணிக்கு நடைபெறத் தவறுவதேயில்லை. ஒரு சிறிய வாசல் கொண்ட மண்டபம், மண்டப முடிவில் பெரிய திரையினால் தடுக்கப்பட்டுள்ள ஸ்கந்தவேல் அமர்ந்துள்ள தனிப்பகுதி கடுங்குளிரினைத் தாக்குப் பிடிப்பதற்காக மலை நாடுகளில் பொதுவாகக் காணப்படும் கண்ணாடி வீடுகள் போன்ற அமைப்பினை ஒத்ததே மண்டபமும் - கருவறை போன்ற அமைப்பும். மண்டப ஆரம்பத்திலேயே சிறு மாடங்களில் ஒரு புறம் கௌதம புத்தரும், மறுபுறம் யேசுபிரானும் மெல்லிய விளக்கொளியில் உள்ளனா். மண்டபத்தின் ஒரு மூலையில் 100 க்கும் குறையாத தட்டையான தலையணைகள் (சதுரவடிவில்) குவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளே வரும் ஒவ்வொருவரும் ஒரு தலையணையைக் கையிலெடுத்து, விரும்பிய இடத்தில் தரையில் போட்டு அதன் மீது அமர்ந்து கொள்கின்றனா். தரையின் குளிரைத் தாங்கிக்கொள்ள இந்த ஏற்பாடு. கீழே அமர்ந்துள்ள முடியாதவர்களுக்காகவும், முதியோருக்காகவும் வாசலின் உட்புறத்திலேயே 10 கதிரைகள் வரை உள்ளது. எம்மைப்போன்று ஒரு நாற்பது பேர்வரை அன்றைய அதிகாலைப் பொழுதில் ஸ்கந்தவேல் முகதரிசனம் பெறக் காத்திருந்தனா். எமத புலம்பெயர் உறவுகள் அநேகர்; சிலர் தமிழகத்துத் தமிழ்க் குடும்பங்கள்; வட நாட்டினர் சிலர்; ஒரு சில வெள்ளையர்கள்.
நேரம் சரியாக அதிகாலை 5 மணி. பெரிய திரையின் உள்ளே சிறிய மணிச்சத்தம் கேட்கிறது. திரை விலகுகிறது. மென்மையான காவி நிறத்தில் மேற்சட்டையும் (எமது தேசிய உடையான நசனலை ஒத்தது) காவிவேட்டியும் அணிந்தபடி பிரதமகுரு பூசைகளை ஆரம்பிக்கிறார். மென்மையான ஒரு மேளச் சத்தமும் (எம் மூர் மேளம் போன்றதல்ல ) ஆர்மோனியம் போன்ற கருவி ஒன்றின் இசையும், தாள ஒலியும் சேர்ந்து ஒரு உணர்வுபூர்வமான சூழலை உண்டாக்குகிறது. மந்திர உச்சாடனங்கள் இல்லை. ஒரு கூட்டுப் பிரார்தனையை ஒத்த இசையுடன் கூடிய வணக்கமே அங்கு நடைபெறுகிறது. முருகனின் திருநாமங்கள் ஏனைய தெய்வங்களின் திருப்பெயர்கள், காயத்திரி மந்திரம் போன்ற இவைகளை ஒருவித ஓசையுடன் பாடிப் பணியும் ஆங்கிலேயர்களின் தமிழ் உச்சரிப்பு நமக்கு வித்தியாசமான அனுபவமாயிருந்த போதிலும், அந்த இசையும் பாடலும் - உச்சரிப்பும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டின.
உள்ளே, நமது கோவில்களின் மஞ்சத்தை ஒத்தான சிறு அறுகோண அமைப்புக் கொண்ட வேலைப்பாடமைந்த மஞ்சத்தின் மையத்தில் அருள்பொழியும் ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுடனும், வேலும் மயிலும் கொடி தாங்கி, நின்ற திருக்கோலத்தில் அழகான அளவான அலங்காரத்துடன் ஸ்கந்தவேல் – வேல்ஸ் முருகன் அருள் பாலிக்கிறார். ஆறுமுகனின் ஒவ்வொரு முகத்திற்கும் நேராக தீபாராதனைகள் தனித்தனியாக நடைபெறுகிறது. பிரதம குரு - அவரது உதவியாளர்கள் இசை- எழுப்பும் ஏனையவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களாக இருந்தும் நெற்றியில் நீறணிந்து சந்தனம் குங்குமமிட்டு நிறைந்த பயபக்தியுடன் பூசையினை நிறைவு செய்கிறார்கள். பூசை முடிந்ததும் பிரதம குருவும் இன்னும் இருவருமாக மூவர் பஞ்சதீபம், திருநீறு, குங்குமம், ஆகியவற்றினைக் கையிற்கொண்டு பக்தர்கள் இருக்கும் இடம்தேடி வந்து நீட்டுகிறார்கள். ஸ்கந்தவேலைத் தரிசிக்கவரும் பக்தர்கள் அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு பருப்பு, சீனி, வெல்லம், பயறு சோயா, பால், எண்ணை, பலவிதமான பழவகைகள் ஆகியவற்றை நேர்த்திக்காகக் கொண்டு வருகிறார்கள்.
பூசையின் முடிவில் இந்தப் பொருட்கள் அனைத்தும் முருகன் காலடியில் நிவேதிக்கப்பட்டு மீண்டும் தீபம் காட்டப்படுகிறது, தீபங்கள் அனைத்தும் நெய்த் தீபங்களே. கர்ப்பூர தீபம் அங்கில்லை. சரியாக 40 நிமிட நேரம் நீடித்த இந்த பூசை ஆராதனை நிறைவுபெற்றதும் பிரமகுரு, “ சரியாக 40 நிமிட நேரம் நீடித்த இந்த பூசை ஆராதனை நிறைவுபெற்றதும் பிரதமகுரு, “ சரியாக காலை 6.30 மணிக்கு மகாசக்தி (காளி) கோவிலில் பூசை ஆரம்பமாகும். ” என்ற அறிவிப்பினை ஆங்கிலத்தில் விடுக்கிறார். ஸ்கந்தவேல் முருகனுக்கான அடுத்த பூசை பகல் 12 மணிக்கு நடைபெறும் இக்கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. (1) ஸ்கந்தவேல் ஆலயம் (2) மகாசக்தி (காளி) கோவில் (3) ஸ்ரீரங்கநாதர் கோயில்.
“ ஆறரை மணிக்கு மகாசக்தி (காளி கோவில்) கோவிலில் பூசை ஆரம்பமாகும் ” என சுவாமிஜி (பிரதமகுரு) ஆங்கிலத்தில் அறிவித்ததும் கோவில் மண்டபத்தை விட்டு அனைவரும் வெளியே வருகின்றனா். நீளத்திற் குறைவான பேருந்து ஒன்று மேலே மகாசக்தி கோவில் நோக்கிப் புறம்படத் தயாராக நின்றது. வயது முதிர்ந்தவர்கள் – மலையேற முடியாதவர்கள் மட்டுமே அந்தப் பேருந்தில் ஏற்றிக்கொள்ள, மற்றையவர்கள் நடந்தே மேலேறிச் செல்கிறார்கள். குடை விரித்து நிழல்தரும் பெருமரங்களினூடாக பரந்துள்ள புல்வெளியினை ஊடறுத்துச் செல்லும் அந்த கிரவல் பாதை வளைந்து வளைந்து மேலேறிச் செல்கிறது. எங்களருகே மான் கூட்டமும் சற்று மேலே உயரத்தில் காட்டொருமைகளும் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலே, நிழல்தரு மரங்களால் மூடப்பட்ட ஒரு சிறிய தளத்தில் பெரிய கண்ணாடி வீட்டினுள் அம்பிகை மாகசக்தி வீற்றிருக்கிறாள். நாம் இங்கே காளிகோவில்களில் பார்க்கின்ற அதே உருவ அமைப்போடு, சிவப்புநிற சேலையுடன் – கபாலங்களைக் கழுத்தில் அணிந்து நாக்கை வெளியே நீட்டியபடி உக்கிர கோலத்தில் மகாசக்தி காணப்படுகிறாள். கீழே ஸ்கந்தவேல் கோவிலில் நடைபெற்ற அதே பூஜைமுறை இங்கேயும் தொடர்கிறது. உள் மண்டபத்தில் அமர்ந்து கொண்டவர்கள் போக, வெளி வராந்தாவில் அமர்ந்திருந்தவர்களின் வசதிக்காக, ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் – உள்ளே நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிபரப்பாகிறது. பாடல்களும், அம்பாளின் பல பெயர்கள் கூறும் சொற்களும், அபிராமி அந்தாதியின் சில பாடல்களும் அவர்களது , உச்சரிப்பில் செவிக்கு விருந்தாக இசைக்கிறார்கள். தீப ஆராதனைகள் நிறைவு பெற்றதும், அடுத்த அறிவிப்பு ஆங்கிலத்தில் வருகிறது. “ அனைவரும் கீழே சென்று உணவருந்தி ஆறுதலையடைந்தபின் சரியாக 10 மணிக்கு ஸ்ரீ ரங்கநாதர் கோவிலுக்கு வரவும் ” என அறியத் தருகிறார் பிரதமகுரு.
மகாசக்தி கோவிலில் அனைவருக்கும் குங்குமம் வழங்கப்படுவதுடன் அவல், கற்கண்டு முதலானவையும் வழங்கப்படுகின்றது. பேருந்தில் வரவேண்டியவர்கள் பேருந்திலும், ஏனையவர்கள் நடந்தும் கீழே இறங்குகின்றனா். மேலே ஏறிச் சென்றதைவிடக் கீழே இறங்குவது கடினமாக இருந்தது. அநேகர் கைகளில் கிடைத்த தடிகளின் உதவியுடன் கீழே இறங்கி வந்தனா்.
வரும் வழியில் கிரவல் வீதி ஓரத்தில் புல்வெளி நடுவே ஐந்தடிவரை உயரமுள்ள ஒரு சிறு குன்றின்மீது மிக நீளமான தடிப்பான பூமாலையொன்று சாத்தப்பட்டிருந்ததையும், குன்றின் ஒரு பக்கத்தில் நிலத்தில் பூக்களின் குவியலும் காணப்பட்டது. எந்த அறிவிப்புப் பலகையும் அங்கில்லாததால் அவ்விடத்தில் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. கீழே ஸ்கந்தவேல் ஆலயம் சேர்ந்த பின்னர் , அங்குள்ள தொண்டர் ஒருவரிடம் விபரம் கேட்டறிந்தோம். 2007 இல் தமது 76ஆவது வயதில் காலமான குருஜி சுப்பிரமணியத்தின் புகழுடல் புதைக்கப்பட்டு தினமும் மாலை அணிவித்து வணங்கப்பட்டு வருவதாய் விபரம் கூறினார் அத்தொண்டர்.
ஸ்கந்தவேல் ஆலயத்திற்கு அண்மையில் உணவு பரிமாறும் அறைகள் கண்ணாடி யன்னல்கள் கொண்ட இரு பெரிய வீடுகளாக அமைந்திருந்தன. மண்டபத்தில் வட்ட வடிவமான மேசைகளின் நடுவே ஐந்து கதிரைகள் வீதம் போடப்பட்டிருக்கிறது. மேசைகளின் மீது அழகான மேசைவிரிப்புகளும், நடுவே பெரிய பழத்தட்டுகளும் ஒவ்வொரு மேசையிலும் காணப்படுகிறது. பழத்தட்டில் வாழைப்பழம் – ஆரஞ்சு – அப்பிள் – பேரீந்து போன்ற பழவகைகள் நிறைய வைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்கமாக நீண்ட மேசை மீது வரிசையாக வைக்கப்பட்டிருந்த காலை உணவு வகைகளில் நாமே நமக்கு வேண்டும் அளவை எடுத்துக்கொண்டு கதிரைகளில் உட்கார்ந்து சாப்பிட்டபின், வேண்டுமளவு பழங்களையும் எடுத்துச் சாப்பிடலாம்.
உணவு மண்டபத்தினூடாக நடந்து வரும் பிரதமகுரு “ வேண்டுமளவு எடுத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து சிறிதளவேனும் வீணாக்காதீர்கள் ” என ஆங்கிலத்தில் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றார். கடலைக்கறி, தேங்காய்ப்பூ, கடுகு, சாதம், பருப்புக் கறி புரிந்து கொள்ள முடியாத பொரியல் – கூட்டு ஆகியவையே காலை உணவாக நமக்கு வழங்கப்பட்டவை. பூசை வேளைகளில் ஸ்கந்தவேளுக்கு நேர்த்திக்காக வழங்கப்படும் அத்தனை உணவுப் பொருட்களும் பழங்களும் வருகைதரும் அத்தனை பக்தர்களுக்கும் மூன்று வேளையும் தாரளமாகத் தருகிறார்கள். கோவிலுக்கு அடிக்கடி வந்துபோகும் அன்பர்கள் உணவறைகளில், உணவு பரிமாறப்படும் வேளைகளில் பலவிதத்திலும் உதவி புரிகிறார்கள். நிர்வாகமும் அந்த உதவிகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சமையலுக்கான காய்கறிகளின் கழிவுகள், பழங்களின் தோல் முதலான மிகுதிப் பொருட்கள் பண்ணைகளில் பராபிக்கப்படும் பன்றி, ஆடு, கோழி, முயல் போன்றவற்றுக்கு உணவாகின்றது. ஸ்கந்தவேல் ஆலய ஸ்தாபகா் குருஜி சுப்பிரமணியரின் சிறிய அளவினதான புகைப்படம் உணவுக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
சற்று நேர ஓய்வின் பின் சரியாக 10 மணிக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திற்குச் செல்கிறோம். திருப்பாற்கடலில் அரங்கன் பள்ளி கொள்வது போன்ற ஒரு அமைப்பு நீர்த்தடாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கநாதரின் காலடியில் லக்குமியும், தலைமாட்டில் ஹனுமானும் உள்ளனர். தடாகத்தின் புறச்சுவரில் பரந்தாமானின் பல்வேறு அவதாரங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. பூசை முடிந்து அந்த கண்ணாடி மண்டபம் பூட்டப்பட்டாலும், கண்ணாடி யன்னலுக்கு வெளியே இருந்தபடி ஸ்ரீரங்கநாதரைத் தரிசிக்க முடியும்.
லண்டனில் பல்வேறு கோவில்கள் காணப்பட்ட போதிலும் பலநூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஸ்கந்தவேல் மீது புலம்பெயர்ந்த நம்மவர்கள் ஆழமான பக்திகொண்டுள்ளனா். அதனால் வருடத்திற்கு ஒருமுறையேனும் ஸ்கந்தவேலைத் தரிசிப்பதுடன் நேர்த்திகளையும் நிறைவேற்றுகிறார்கள். தற்காலிக விசாமூலம் லண்டன் போகும் நம்மையும் அழைத்துச் சென்று வேல்ஸ் முருகனைத் தரிசிக்கும் பாக்கியத்தையும் பெற்றுத் தருகிறார்கள்.
பி.கு : ஸ்கந்தவேலைத் தரிசிக்க முடிவு செய்யும் அனைவரும் முதல் மூன்று நாட்களும் மச்ச மாமிசம் தவிர்த்து, முடிந்தவரை சுத்தமாக பக்குவமாக இருந்தே வேல்ஸ் புறப்படுகின்றனா். இதனை அனைவரும் கண்டிப்பாக அனுசரிக்கின்றனா்.
நன்றி : ஞானச்சுடர் , மாசி 2015
அடுத்தவாரம்: “ ஸ்ரீ பாலாஜி கோவில் ” (லண்டன்) ஸ்ரீ நாராயணன் கோவில்களில் ஜரோப்பாவிலேயே மிகப்பெரிய கோவில் இது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.