மனப்பட மனிதர்கள் எப்படி நினைவுபடுத்தினேன்.. - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2016 (புதன்கிழமை)
மனப்பட மனிதர்கள் என்ற தொடரை எழுதியபோது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளை மறக்காமல் எழுதுவது எப்படி என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள்.
நான் எழுதிய 15 பேரை மட்டுமல்ல வாழ்வில் நான் சந்தித்த அனைவரைப்பற்றியும் இது போன்ற கட்டுரைகளை என்னால் எழுத முடியும், எல்லோரைப்பற்றிய தகவல்களும் என்னிடம் உள்ளன.
ஆனால் எந்தவொரு தகவலும் எழுத்தில் கிடையாது, எல்லாமே மனதில் பதியப்பட்டபடி பசுமையாக இருக்கின்றன.
இவற்றை எப்படி பசுமையாகப் பேணுவது..
எந்தவொரு சம்பவமும் திரும்பத் திரும்ப நினைவு மீட்டப்படாவிட்டால் மறந்து போய்விடும்..
அந்தச் சம்பவங்களை நினைவூட்ட நமக்கொரு தூண்டுகோல் வேண்டும்.. அதற்காக நான் தேர்வு செய்தது திரும்பத் திரும்பக் கேட்கும் சினிமாப்பாடல்களையே.
ஒவ்வொரு வருடத்திலும் பல நல்ல பாடல்கள் வருகின்றன.. வாழ்வில் ஒரு சம்பவம் நடைபெறும்போது அந்தச் சம்பவத்தை அந்த சினிமா பாடலுடன் தொடர்புபடுத்திவிடுவேன்.
அந்தச் சினிமாப்பாடல் வானொலியில் கேட்கும்போதெல்லாம் அந்தப்பாடல் புதிதாக வந்த காலத்து நினைவுகள் எல்லாம் கூடவே வந்துவிடும்.
சினிமாப்பாடல்கள் என்றால் வாழ்க்கை என்ற ரயில் பாதைக்கு அருகில் தந்திக்கம்பங்கள் போல உருவகப்படுத்தி வைத்துள்ளேன்.
ஒவ்வொரு தந்திக்கம்பங்களிலும் ஒவ்வொரு பாடல் கேட்கும்.. வாழ்க்கை என்ற ரயில் வண்டியோ முன்னோக்கியே ஓடிக்கொண்டிருக்கும்.. இன்றய புதிய பாடல்களைக் கேட்டபடியே..
திடீரென ஒரு பழைய பாடல் கேட்கிறதா.. மனம் என்னும் ரயில் அப்படியே நின்று பின்பக்கமாக ஓடி அந்த பாடல் வந்த காலத்து தந்திக்கம்பத்தின் அருகே நின்று நினைவு மீட்டும்.
ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே... கடைக்கார கறுத்த முத்தப்பாவின் மகன் காலஞ்சென்ற சுந்தரராசுவின் திருமணம் நினைவுக்கு வந்துவிடும்.
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்.. காட்டுவளவு பூவா பெரிய பெண்ணாகிவிட்டாள் அனைத்து நினைவுகளும் வரும்..
பொன்னந்தி மாலைப்பொழுது.. அம்மாச்சி இறந்த தினம் நினைவுக்கு வருகிறது..
உச்சந்தலை உச்சியிலே உள்ளிருக்கும் புத்தியிலே பாட்டு.. என் தந்தையார் இறந்துவிட்டார்..
இப்படி பாடல்களையும், சம்பவங்களையும் தைத்து வைத்துள்ளேன்.. இந்தப் பாடல்கள் நினைவூட்டிகளாக வந்து அக்கால சம்பவங்களை மறந்துவிடாமல் காப்பாற்றி வருகின்றன.
இந்தப் பாடல்களை அடிக்கடி கேட்கிறோம்.. நினைவுகளும் மறுபடி மறுபடி வருகின்றன..
சினிமாப்பாடல்களை கேட்பது தவறு என்று அக்காலத்தே பாடசாலைகளில் ஆசிரியர்கள் தடை போட்டார்கள், ஆனால் அந்தச் சினிமா பாடல்களை ஆதாரமாக வைத்தே அவர்களின் வாழ்க்கையையே ஞாபகப்படுத்திக்கொண்டேன்.
மேலும் ஒவ்வொரு மனிதனைப் பார்க்கும்போதும் அவன் வாழ்வில் உள்ள ஒவ்வொரு நல்ல காரியத்தை மனப்பாடமாக்கி அதை நானும் பயன்படுத்த ஆரம்பிப்பேன்.. இதனால் அந்த மனிதர்களை நான் மறப்பதில்லை... நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்கள் இருக்கிறார்கள்.
பெரும்பாலானவர்கள் மற்ற மனிதர்களை குறை கூறுவதையே வாழ்வாக கொண்டிருப்பதால் அவர்களின் நல்ல பண்புகளை கோட்டைவிட்டுவிடுகிறார்கள்.
மனப்பட மனிதர்களில் எழுதப்பட்ட 15 பேரின் கதைகளையும் மீண்டும் வாசித்துப் பாருங்கள் நல்லவைகளே எழுதப்பட்டிருக்கும்.
நல்லதை ஞாபகப்படுத்துவதே வாழ்க்கையின் வெற்றிக்கு துணைபுரியும் என்ற தத்துவத்தை கடைப்பிடித்ததே அவர்களை மறவாதிருக்கக் காரணம்.
கனடாவில் என்னோடு எட்டாம் வகுப்புவரை படித்த நண்பனை ஆவலோடு தேடிப்போனேன் ஆனால் அவன் என்னை தீர மறந்துவிட்டான்.. அவன் வாழ்வில் நடந்த எத்தனையோ முக்கிய சம்பவங்களை சொன்னேன் எதுவும் நினைவில் இல்லை.. மிகவும் சிரமப்பட்டேன்.
அவனை மறக்க பல வருடங்களாக துடிக்கிறேன் முடியவில்லை.. இதுதான் நினைவுக்கலையின் சிறப்பு.. அது பதிந்தால் அழிக்க முடியாத ரேப்..
இது மட்டுமா மேலும் ஒரு வழியை கடைப்பிடிக்கிறேன்..
நம்மை சுற்றியுள்ள எல்லோரிலுமே நல்ல பழக்கங்கள் உள்ளன, அவற்றை தொகுத்தால் அவை அழகான கீதையாகவோ பைபிளாகவோ மாறிவிடக் காண்பீர்கள்.
வல்வையின் பைபிள் என்னிடம் இருக்கிறது, பசுமையாக...
நினைவு மறதி நோய் வராமல் தடுப்பதற்கான போர் என்றும் இதைக்கூறலாம்..
இனி இதுபோன்ற ஆக்கங்களை எழுத மிக மிக அவசியமான இன்னொரு விடயமும் இருக்கிறது அதுவே பாடமாக்கல் கலை.. இது பற்றிய தகவலை பின்னர் தருகிறேன்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.