இதயத்தின் சன்னல் கதவுகளை திறந்து பார்க்கிறேன்.. முடிவில்லா காலமழை தொடர்ந்து பொழிகிறது..
ஆங்காங்கே சலசலத்து ஓடும் அருவிகள்.. அவற்றில் துல்லியமாக தெரிகின்றன பலரது முகங்கள்.. அத்தனையும் இன்றைய வல்வை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய வரலாற்று முகங்கள்..
அதோ முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக தொலைந்து போன பேரலை ஒன்று ஓவென்ற இரைச்சலுடன் மீண்டும் உருண்டு வருகிறது.. அதற்குள் இருந்து ஈரமான உடையுடன் மாப்பிளே என்றபடி எழுந்து வருகிறார் முதிரைக்கட்டை சண்டியன் வானா.தூனா என்ற வட்டன்துரை.
இவருடைய உருவத்திற்கான அசலான வர்ணனை இதுதான்..
வண்ணக்கிளி என்றொரு திரைப்படம் 1959ம் ஆண்டு வெளியானது, அதில் ஆர்.எஸ். மனோகர் இரக்கமுள்ள சண்டியனாக நடித்திருப்பார், அந்தக் கேரக்கடர்தான் வட்டன்துரை..
அறுபதுகளில் யாழ் குடாநாடு முழுவதும் நடமாடிய சண்டியர்களுக்கு வெளிப்புறத் தோற்றத்தைக் கொடுத்தது வண்ணக்கிளியில் வரும் ஆர்.எஸ்.மனோகரின் சண்டியன் தோற்றம்தான்.
சுருண்டோடும் கேசம், முறுக்கு மீசை, கட்டம்போட்ட பழையகாட் சாரம், இடுப்பில் தடித்த பெல்ட், கோடுபோட்ட பெனியன், அளவான உயரம்.. திடகாத்திரமான தேகம், மின்னும் டெக்கர் மோதிரம், இரத்தத்தின் மதாளிப்பில் கோவைப்பழம் போல சிவந்து கிடக்கம் விரல் நகங்கள், இடது கையில் கல்லோயா சாரயப் போத்தல்.. வலது கையில் சிகரட் இடுப்பில் றிவோல்வர்.. மாப்பிளே என்றபடி ஆடும் முத்தான பல்வரிசை.. இதோ வட்டன் துரையை மனம் செதுக்கிவிடுகிறது.
இப்படி அசகாய சூரன் போல தோற்றம் இருந்தாலும் உள்ளே பாகுபோல உருகிய பாசத்தின் குழம்பு ஒரு மனப்பாத்திரத்தில் பாதரசம் போல எதிலும் பற்றிக்கொள்ளாது ததும்பிக்கொண்டிருக்கும்..
இனி இவர் கதைக்கு வருவோம்...
முதிரைக்கட்டையில் பட்டம் கட்டி விற்று வாழ்ந்தவர் கொக்குக் கட்டும் சந்திரர், இவருடைய மனைவி பெயர் தங்கரத்தினம், இவர்களுக்கு பிறந்த மூத்த பெண்ணான அம்மாக்கண்டு திடீரென ஒரு நாள் இறந்துவிட, இரண்டாவது மகளான குட்டித்தங்கனுக்கு ஒரு நாள் இரவு மணமகனாக வந்து சேர்கிறார் ஒருவர்.
எனது வீட்டுக்கும் குட்டித்தங்கன் வீட்டுக்கும் இடையே ஒரு பிய்ந்து தொங்கும் ஒரு வேலி இருந்தது, பாய்ந்து போகிறேன் வட்டன்துரை மணவாளக்கோலத்தில் பாயில் இருக்கிறார்..
மணவறை, ஐயர், மந்திரம், சாஸ்த்திரம், சடங்கு எதுவும் இல்லை.. இந்திய அத்தர் ஜவ்வாது மணக்கிறது, அறையைப் பூட்டி மாப்பிளை பொம்பிளைக்கு சோறு கொடுக்கிறார்கள்.. திருமணம் அமர்க்களமாக முடிந்தது.
பொல பொலவென பொழுது விடிய வாழ்க்கை ஆரம்பித்தது, மாப்பிளைக்கு என்ன தொழில்.. படிப்பென்ன.. சண்டியன், இந்திய வியாபாரத்தில் வண்டிமர ஓட்டி.. கானா கம்பில் இருந்தால் வண்டிமரம் கோடியாக்கரைக்கு குத்தெனப் போய் இறங்கும்.. சபாஸ் இது போதுமே..!
இவருடைய மாமி தங்கரெத்தினம் சமையலில் மகா கெட்டிக்காரி அவித்த பனங்கிழங்கோடு, பச்சைச் செத்தலையும் மிளகையும் கை நிறைய அள்ளிப்போட்டு உரலில் குதப்பி இடித்து உருண்டையாக்கி அவள் தரும்போது, கண்களில் நீர் ஓடும், காரம் தாங்க முடியவில்லை.. இன்றும் மூக்கில் நீர் சிந்துகிறது.
வட்டன்துரையின் உயிர் நண்பன் கம்பர் மலையில் கள் பறிக்கும் நாகலிங்கம், அவரும் வட்டன்துரை போலவே ஒரு சண்டியன், மதியம் ஒரு பனைக்கள்ளு வாடிக்கையாக வந்து சேர்ந்துவிடும்.
புது மாப்பிளைக்கு பனங்கிழங்கு இடித்து உருட்டி, கள்ளோடு கொடுத்து, விளை மீன் பொரித்து, கைக்குத்தரிசியில் சோறு வடித்து வைத்துவிட்டு தெருக்கிணற்றுக்கு குளிக்கப்போன தங்கரெத்தினம் சொற்ப நேரத்தில் வாடிய முகத்துடன் வந்து எனது அம்மாச்சி ஆச்சிமுத்துவிடம் தனது சோகக்கதையை சொன்னாள்.
மருமகன் தனக்கு எதுவும் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டதாகக் கூறினாள்.. நாலு மணிக்கு பசியின் கொடுமையால் அவள் மறுபடியும் உரலில் பனங்கிழங்கு இடிக்கும் சத்தம் கேட்டது.
இப்படியே வட்டன்துரையின் அணுகு முறை அட்டகாசமாகத் தொடர்ந்தது.. ஏன்..? அவர் செய்தது சரியா..? அவர் திருமணம் செய்தபோது இரண்டாம் வகுப்புடன் படிப்பை முடித்திருந்த குட்டித்தங்கனை 2005ம் ஆண்டு வல்வை வந்தபோது பார்த்த போதுதான் எனக்கு அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது.
நீ படிப்பில்லாதவள், கிடுகு வேலிகளை தவிர உலகம் தெரியாதவள், நானோ ஓட்டி எந்த நேரமும் சூடு வேண்டி கடலில் இறந்துவிடலாம்.. நான் இல்லாத போது நீ போராடி உனக்கான உணவைச் சேகரித்து வாழப் பழகவேண்டும், அதுக்குத்தான் அந்தப் பயிற்சி.
1985 வல்வையை விட்டுப்போனவன் 2005 ம் ஆண்டு வல்வைக்கு வந்தேன், வந்ததும் முதலில் பார்த்தது குட்டித்தங்காவைத்தான்..
அடுத்த வாரம் உடுப்பிட்டி திரையரங்கில் எனது பூக்கள் திரைப்படத்தை காண்பிக்கிறேன் பார்க்க வரும்படி அழைத்திருந்தேன்.. குட்டித்தங்கா வந்தபோது திரையரங்கு நிறைந்துவிட்டது, ஆனால் அந்த நெரிசலில் வாங்கிற்குள்ளால் நுழைந்து கலரிக்குள் புகுந்து போகிறது ஓர் உருவம் கூர்ந்து பார்க்கிறேன்.. குட்டித்தங்கன்.. வட்டன்துரை உயிரோடு இல்லை வாழப்பழகிவிட்டாள் குட்டித்தங்கன்.
மாப்பிளே.. கல்யாணம் என்றால் என்ன.. அரியகுட்டி பள்ளிக்கூடத்திலே ஐந்தாம் வகுப்பு படித்துப்போட்டு வாறவளுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கிறதுதான் கல்யாணம்..
வண்ணக்கிளி படத்தில் சண்டியன் ஆர்.எஸ்.மனோகர் பாடும் பாடலை பாடுகிறார்..
" அடிக்கிற கைதான் அணைக்கும்..
அணைக்கிற கைதான் அடிக்கும்..
இனிக்கிற வாழ்வே கசக்கும்..
கசக்கிற வாழ்வே இனிக்கும்..."
வட்டன்துரை உயிருடன் இருந்தவரை ஒரு நாள் கூட குட்டித்தங்கன் இன்னொரு வீட்டுக்கு கடன் கேட்டுப் போகாதளவுக்கு உழைத்து குடும்பத்தை காப்பாற்றினார், உயிரைக் கொடுத்து காப்பாற்றினார்.. சீதனத்தால் அப்படியொரு உத்தமனை வாங்க முடியாது..
வாழ்வின் இரண்டாவது சீன்.. முதல் மகன் செல்வன் பிறக்கிறான்.. பெரும் கொண்டாட்டம்.. ஆனால் கொஞ்ச நாட்களில் குழந்தை தினசரி காலையில் கதறி அழுகிறது..
ஏன்.. விசாரிக்கிறேன்.. வட்டன்துரை குழந்தைக்கு காலையில் வேப்பெண்ணை பருக்குவது வழக்கம அதுதான் குழந்தை கசப்பு தாங்காமல் கதறுகிறது..
அம்மை, போலியோ, கூவைக்கட்டு போன்ற வியாதிகள் வராமல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறார்கள் உலகம் முழுவதும், ஆனால் எந்தத் தடுப்பூசியும் தேவையில்லை நமது வேப்பெண்ணையை தினசரி ஒரு தேக்கரண்டி குடித்தால்..
வைத்திய உலகம் வட்டன்துரையிடம் தோற்றுப்போய்விடுகிறது.. பின்னர் அவர் மகன் செல்வன் ஆஜானுபாகுவாக வளர்ந்து ஒரு பெரும் வீரமிக்க கடலோடியாகவும், அவர் மகன் சங்கர் ஒரு மாபெரும் போர் வீரனாகவும் வந்தபோதுதான் வெப்பெண்ணையின் மகிமையை உணர்ந்தேன்.
" இனிக்கிற வாழ்வே கசக்கும்..
கசக்கிற வாழ்வே இனிக்கும்..."
பாடலை பாடிப்பாருங்கள் வேப்பெண்ணையின் பெருமையை நீங்களும் அறிவீர்கள். வேம்பு மரத்திற்கான சர்வதேச உரிமை தனக்கே வேண்டுமென அமெரிக்க வைத்தியத்துறை இன்றும் அடம் பிடிக்க இதுவே காரணம்.
வட்டன்துரையின் சமுதாயக் கொள்கைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்தது, ஒரு நாள் திருடன் ஒருவன் அவருடைய பக்கத்தில் உள்ள சுப்பிரமணியம் வீட்டுக்குள் நுழைந்துவிட்டான்..
திருடனை தேடுகிறார்கள் பிடிக்க முடியவில்லை.. கடைசியில் வீட்டின் புகைப்போறணைக்குள் ஒளித்திருந்த திருடன் பிடிபடுகிறான்.. ஓடி வந்த வட்டன்துரை கீழே கிடந்த பலகைக்கட்டையால் திருடனின் தலையில் ஓங்கி அடிக்கிறார்..
பாவம் அவன் பசியில் வந்தவன்.. அவனை இப்படி அடிக்கலாமா.. கவலைப்படுகிறேன்.. டேய் நீ திருடிவிட்டு ஓடினால் பக்கத்தில் இருக்கும் சண்டியன் எனக்குத்தானே அவப்பெயர்.. என்று கூறிவிட்டு அவனை விரட்டியடித்தார்.
சண்டியன் இருக்கும் இடத்திற்கு திருடன் வரமாட்டான்.. மாறாக திருடு போனால் அது சண்டியனின் தலையிலேயே விழும்.. சண்டியன் என்பது ஒரு சமுதாயப்பாதுகாப்பிற்கான அரண்.. அவ்வளவுதான்..
ஒரு நாள் நாகரத்தினம் வீட்டில் நடந்த சூதாட்டத்தில் 3200 ரூபா வென்று வந்து எண்ணிக்கொண்டிருந்தார்.. ஒரு ரூபா தருவரா படம் பார்க்க.. ஏங்கினேன் தரவே இல்லை..
அது எப்போது நடந்தது.. அன்று இருவல்லவர்கள் படம் நெல்லியடியில் ஓடிக்கொண்டிருந்தது.. அது 1966ம் ஆண்டு.. திரைப்படங்களை வைத்துத்தான் நான் வரலாற்றை மனதில் வரைந்து வைத்துள்ளேன்..
மாப்பிளே.. சூதாடின பணத்தை பிள்ளையளுக்குக் கொடுக்கக்கூடாது.. தந்தால் நாளைக்கு நீயும் சூதாடுவாய்.. சூதுப்பணம் கடைசி சூதுக்கே வழிகாட்டும்... அட இதை அவ்வை கூட சொல்லவில்லையே..
ஒரு நாள் வட்டன்துரை போன வண்டிமரம் கோடியாக்கரையில் இருந்து புறப்பட்டு திசைமாறி நாகபட்டணம் போய்விட்டதாக அவரோடு இந்தியாவுக்கு ஓட்டியாகப் போன குட்டியப்பா சொன்னார்.
வலது பக்கம் வாங்கின நீர் இடது பக்கம் அடிக்குது வட்டன்துரை குடியிலை படுத்திருக்க வண்டிமரம் நாகபட்டணத்துக்கு மேலே கிடக்குது என்று கூறினார்..
ஏன்..
துப்பாக்கிக் குண்டு விளையாட்டு பந்து என்று கூறிய தமிழரசுக்கட்சி வாய்வீச்சுக்கு சொன்ன வாசகங்களை வாழ்ந்து காட்டிவர்கள் பலர் அவர்களில் ஒருவர் வட்டன்துரை..
பாக்கு நீரிணையில் பாய்போட்டு படுத்த கடலோடி அவர்..
பாக்கு நீரிணையில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி வேட்டுக்கள் காதின் ஓரமாக கீச்சிட்டு சென்றாலும், அதை விளையாட்டு பந்தாகக்கருதி அந்தக் குண்டு மழைக்குள் ஓடிச்சென்ற வீரமான கடலோடி அவர்.
மருமகன்.. இந்த நேவிக்காரங்கள் எண்டைக்காவது ஒழுங்கா ஒராளை சுட்டவங்களோ சொல்லு பாப்பம்..
கட்டுமரம் அலையிலை ஏறி ஏறி இறங்கி ஓடும்.. நேவியும் ஏறி இறங்கும்.. ஒரு காலமும் குறிபாத்து சுட ஏலாது.. ராமாயணத்தில ஏழு மரத்தை துளைத்த ராமனின் அம்பும் கடலிலை இந்த வட்டன்துரையை துளைக்காது.. சிரித்தார்.
அவருக்கு றிவோல்வர் எதற்கு.. ஒரு நாள் வாங்கி சுட்டுப்பார்த்தேன் சுட மறுத்தது.. லொக் பண்ணியுள்ளதாக சொன்னார்.
தங்கப்பாளத்துடன் வண்டிமரம்.. கோடியாக்கரையின் சேத்துக்கடல்.. நள்ளிரவு.. யாரும் இல்லாத காடு.. அந்த நேரம் நமக்கு யார் துணை..? துப்பாக்கியே துணை..!
துப்பாக்கிக்கு ஒருவன் சேவகனான இருந்தால் அவன் சண்டியன் இல்லை.. துப்பாக்கி யாருக்கு சேவகனாக இருக்கிறதோ.. அவனே சண்டியன்.. வட்டன்துரையின் துப்பாக்கி விடை சொன்னது.
" இடிக்கிற ஊற்றே சுரக்கும்..
இடி இடிக்கிற வானம் கொடுக்கும்... "
அதே பாடலின் அடுத்த வரிகள் இவை, துப்பாக்கி வேட்டுக்கள் இடிக்கிற பாக்குநீரிணை வானம் கொட்டிக் கொடுத்ததே அவர் செல்வாக்கான வாழ்வு..
காலம் மாறுகிறது.. போராட்டத்தால் கடலின் அடிவானம் சிவக்கிறது..
ஒரு நாள் வட்டன்துரையை கடலில் வைத்துப்பிடித்து பலாலி முகாமில் தடுத்து வைத்தார்கள்.. பார்கப் போன குட்டித்தங்கன் கண்ணீருடன் ஓடி வருகிறாள்..
ஏன்..?
வட்டன்துரையை மொட்டை போட்டு, மீசையை வழித்து அடைத்து வைத்திருந்தார்கள்.. அவளால் அவரின் உருவத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.. உண்மையில் அன்று அவள் வட்டன்துரை சிறையில் இருப்பதற்காக அழவில்லை..
அவருடைய சண்டியன் தோற்றம் அழிக்கப்பட்டுவிட்டதற்காகவே அழுதாள்.. இதுதான் அவருடைய சண்டியன் தோற்றத்தின் வெற்றி..
காலம் மேலும் மோசமடைகிறது..
இந்தியாவுக்கு ஓட்டிகளாக போவோரை போராட்டத்திற்கு பயன்படுத்த வாய்ப்புண்டு என்று சிறீலங்கா கருதும், ஆகவே ஓட்டிகளை கடலில் வைத்தே சுட்டுத்தள்ளிவிடுவார்கள்..
கடலில் இறங்க வேண்டாம்.. நீங்கள் களப்பலி ஆகிவிடுவீர்கள்.. பல படித்தவர்கள் சொல்கிறார்கள்..
கேட்கவில்லை.. பயணங்கள் தொடர்கின்றன..
வட்டன்துரையின் மகன் செல்வன் ஓட்டியாக போய் கடலோடு போகிறான்..
" விதைக்கிற விதைதான் முளைக்கும்
இதுதான் இயற்கை நியதி.. " அதே பாடலின் வரிகள் தொடர்கின்றன..
ஒரு நாள் வட்டன்துரையும் அதே கடலோடு சங்கமம் ஆகிவிட்டதாக செய்தி வருகிறது..
"மாப்பிளே.. நமது கையில் றிவோல்வர் இருந்தாலும் சர்வதேச சூழல் மாறும்போது அதற்கேற்ப நாமும் மாற வேண்டும் இல்லையேல் நாம் அழிந்துவிடுவோம்.. " வட்டன்துரையின் குரல் காற்றில் கேட்கிறது..
வெறுமனே வல்வெட்டித்துறை என்ற குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டக்கூடாது, நமக்கு சர்வதேச அறிவு முக்கியம்... அவர் மரணம் இன்றைய இளைஞனுக்கு கூறும் செய்தி இதுதான்.
" புயலுக்கு பின்னே.. வரும்
துயருக்கு பின் - சுகம்
ஒரு பாதி..
இருளுக்குப் பின் வரும் ஜோதி - இதுதான்
இயற்கை நியதி..
அடிக்கிற கைதான் அணைக்கும்..
அணைக்கிற கைதான் அடிக்கும்.. "
தனது மகளின் பிரேதத்தை வெட்டிப் பரிசோதிக்கக் கூடாது என்று கதறி அழுத வட்டன்துரையின் பாசம் கரைந்தோடுகிறது..
சண்டியன் வட்டன்துரை கடலின் மீது பாடிச்செல்வது தெரிகிறது..
பாடலின் காணொளி வருகிறது கேட்டுப்பாருங்கள் சுகம் தெரியும்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.