ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று...
பிரசுரிக்கபட்ட திகதி: 26/12/2014 (வெள்ளிக்கிழமை)
26.12.2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா யாவா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலைகளானது (சுனாமி) இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளை தாக்கிய பேரனர்த்தத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்.
ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடலில் சங்கமித்த நாள், நம்மைக் கடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. 2004 ஆம் டிசம்பர் மாதம் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தது.
யாழ் வடமராட்சி கிழக்கின் மணற்காட்டில் சுனாமியில் மறைந்தவர்களுக்கு இன்று நடைபெற்ற அஞ்சலி
சுமார் 174,000 உயிர்களை இந்தச் சுனாமி பேரலைகள் காவுகொண்டது. இலங்கையில் சுனாமியினால் உயிர் இழந்தவர்கள் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 36,594 ஆகும்.
இலங்கையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம், கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்கள் சுனாமிப் பேரலையினால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.
ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இன்று சுனாமிப் பேரலை நினைவு நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கையில் நாடுபூராகவும் காலை 9.25 முதல் 9.27 வரை ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் இறந்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கையில் அதிக பாதிப்புக்குள்ளான கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுனாமிப் பேரலை நினைவு நாள் கருப்பு வெள்ளை கொடிகளுடன் ஆழிப்பேரலை அனர்த்த நினைவு தூபிகளில் கூடிய மக்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
ஆழிப்பேரலை ஏற்படுத்திய வடுக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களிலிருந்து இன்னும் அகலாத நிலையில், ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கடலில் சங்கமித்த நாள், நம்மைக் கடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
navamani (india)
Posted Date: December 25, 2014 at 22:42
nice
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.