தொண்டைமானாறு விஞ்ஞான வெளிக்கள நிலையம் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 28/07/2016 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு விஞ்ஞான வெளிக்கள நிலையத்திற்கென 3 கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
சந்நிதி கோவிலுக்கு அருகில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டுள்ள இம்மாடிக்கட்டிடத்தில் ஆய்வு கூட வசதி கருத்தரங்குகள், பயிற்சிகளுக்கான மண்டபம், வதிவிடச் செயலமர்வில் பங்கு பற்றுவோர் தங்குவதற்கான வசதி, கணனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டதாக கட்டிடம் அமைந்துள்ளது. இம்மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு வெளிக்களநிலையத்தின் நிதியே முற்றுமுழுக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் விஞ்ஞான அறிவை வளர்க்கவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவும் யாழ். மாவட்டத்திலுள்ள விஞ்ஞானக் கல்விமான்கள் ஒன்றிணைந்து 1967ஆம் ஆண்டளவில் தொண்டைமானாறு விஞ்ஞான வெ ளிக்கள நிலையத்தை தொண்டைமானாறு சந்நிதி கோவில் ஆற்றங்கரையிலுள்ள அக்கரை என்ற இடத்தில் நிறுவினார்கள்.
இந்நிலையம் மாணவர்கள் மத்தியில் விஞ்ஞான பாட பரீட்சைகளை நடத்தி வந்ததுடன் பல்வேறு ஆய்வுநடவடிக்கைகளையும் காலத்துக்குக்காலம் மேற்கொண்டு வந்தது. 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட யுத்தசூழ்நிலையால் நிலையம் வெளியேறி இருபாலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் செயற்பட்டு வந்தது. இந்நிலையத்துக்கென அக்கரையில் கட்டப்பட்டிருந்த கட்டிடமும் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.
யுத்தம் நிறைவுற்று இயல்புநிலை தோன்றியதும் வெளிக்களநிலையத்தைமீண்டும் தொண்டைமானாற்றிலேயே அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முயற்சியின் பயனாக தொண்டைமானாறு சந்நிதி கோவில் ஆற்றங்கரைப்பக்கத்தில் சந்நிதி கோவிலின் தெற்குப் பகுதியில் வெளிக்களம் நிறுவுவதற்கென சந்நிதி கோவில் குருமார்களில் ஒருவரான தங்கராசா ஐயர் அகிலேந்திர ஐயர் 6 பரப்புக் காணியை அன்பளிப்பாக வழங்கினார்.
இப்புதிய இடத்தில் ஆரம்பத்தில் ஒரு கட்டிடத்தை அமைப்பதற்கு டில்மா என்னும் வர்த்தக நிறுவனம் முன்வந்து 2010ஆம் ஆண்டு அங்கு ஒரு கட்டிடம் நிறுவப்பட்டது. தொடர்ந்து வெளிக்கள நிலையத்துக்குத் தேவையான சகல வசதிகளையும் உள்ளடக்கி மூன்று மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதும் தொண்டைமானாறு விஞ்ஞான வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் இப்புதிய கட்டிடத்திலேயே நடைபெறும் என வெளிக்கள நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.