மனப்பட மனிதர்கள் பாகம் 08 : காதலுக்காக கைத்துப்பாக்கி ஏந்திய கட்டைச்சத்திவேல் (2) - கி.செல்லத்துரை
பிரசுரிக்கபட்ட திகதி: 18/05/2016 (புதன்கிழமை)
"எவ்வளவு காலம் அவள் கன்டொஸ் தின்னப்போறாள்..?" என்று இவர் அவரிடம் வினவ பயந்துபோன நண்பர் " இனி கடிதத்தை நீயே கொடு.." என்று கூற, இவரும் ஏறி கடிதத்தைக் கொடுக்க ஏதும் அறியாத அவள் தமையனிடம் கடிதத்தை கொடுத்துவிட்டாள்..
இதுதான் துப்பாக்கி மோதலுக்குள் கொண்டு போனது.. பேருந்து சாரதிக்கு அடித்த கதைக்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று தேடுகிறேன்.. கிடைக்கவில்லை..
பின்னர் ஒரு நாள் கணேசச்செட்டி என்பவருடன் மோதல் ஏற்படுகிறது.. அதில் கட்டைச்சத்திவேல் வாளால் வெட்டியது அவருடைய உறவினர் ஒருவரின் காலில் இறங்கி பலத்த காயத்தை ஏற்படுத்துகிறது.
இப்படி மோதல் நீண்டு குடாநாடுவரை போகிறது.. கல்வியங்காட்டில் ஒரு மோதல்.. சில நாட்களில் அங்கிருந்து ஒரு பெண்ணுடன் வந்து நிற்கிறார்..
அழகான வெள்ளை நிறமான ஒரு பெண் கனவுகளை சுமந்தபடி.. இனி என்ன செய்யலாம்.. காதல் கடிமணம் முடிகிறது..
கட்டைச்சத்திவேலிடம் இருக்கும் திறமையை திசை மாற்றிப் போட்டால் எப்படி இருக்கும்.. காரணம் அப்படிச்சிந்திக்கும் வயது எனக்கு வந்துவிட்டது.
கொழும்பில் சிலகாலம் வாழ்ந்தபோது கொழும்பு செல்லமஹால் தியேட்டருக்கு பின்னால் இருந்த கொழும்பு ரட்ணம்ஸ் உதைபந்தாட்ட மைதானத்தில் பயிற்சி எடுத்து சில வித்தைகளை கற்றிருந்தேன்.
ஆகவே ரட்ணம்ஸ் வீரர்களை இறக்கி யாழ்ப்பாணத்தின் அக்கால பிரபல கழகங்களான வல்வை புளுஸ், தெல்லிப்பளை மகாஜானா அணி ஆகிய இரண்டுடனும் மோதவிட்டால் குடாநாடு பொறிகக்கும், ரிக்கற் போட்டால் இலாபமும் வரும் என்றேன்.
அவரும் நண்பர் இராஜகோபாலும் அதற்கு இணங்கினார்கள், கொழும்பு ரட்ணம்சில் அப்போது அகில இலங்கை உதைபந்தாட்ட அணியில் இருந்த அப்பையா விளையாடிக்கொண்டிருந்தார்.
பாகிஸ்தானுடன் கொழும்பு சுகததாச அரங்கில் இடம் பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் பாகிஸ்தானுக்கு மூன்று கோல்களை போட்டு இலங்கை அணி வரலாற்றில் முதல் சர்வதேச வெற்றியை பெற்றபோது எனது தந்தையுடன் அதே சுகததாச விளையாட்டரங்கில் நேரடியாக ஆட்டத்தைப் பார்த்தேன்..
ஆகவே அக்காலத்தே புகழ் பெற்ற வல்வையுடன் அகில இலங்கை விளையாட்டு வீரர்கள் கொண்ட ரட்ணம்ஸ்சுடன் மோதவிட்டால் வடமாகாண உதைபந்தாட்டத் தரம் உயரும் என்பது எனது கனவு.
ஆனால் என்னால் சிந்திக்க முடிந்தது.. நடத்த முடியாது.. அதை கச்சிதமாக நடத்திய பெருமை கட்டைச்சத்திவேலுக்கும், தற்போது கனடா மொன்றியலில் வாழும் இராஜகோபால் மாஸ்டருக்குமே சாரும்.
ஆடம்பர பேருந்தில்.. கொழும்பு ரட்ணம்ஸ் நெடியகாடு வந்தது, பரமானந்தர் வீட்டில் தங்க வைத்தார்கள் அந்தப் பொழுதில் வல்வையின் சண்டியர்கள் எல்லோரையும் கடந்து கவனத்தைத் தொட்டுவிட்டார் சக்திவேல்.
தெல்லிப்பளையில் கந்தசாமி என்றொரு நாடக கலைஞர் இருந்தார், அவர் சத்திவேலின் நண்பர், அவர் மூலமாக ஈழநாடு பத்திரிகையில் விளம்பரம் கொடுத்தோம், குடாநாடு முழுவதும் சுவர்களில் போஸ்டல்..
முதல் நாள் தெல்லிப்பளை எதிர் கொழும்பு ரட்ணம்ஸ், மறு நாள் வல்வை புளுஸ் எதிர் கொழும்பு ரட்ணம்ஸ்.. குடாநாடே பரபரத்தது.. ஜெயிக்கப்போவது யார்..?
அக்காலத்தே கொழும்பில் அப்பையா போல வடக்கே கட்டியண்ணா, தெல்லிப்பளை முயல் என்பவர், மயிலிட்டி கண்ணகி வடிவேற்கரசன், வல்வை ஏ.ஆர்.இரத்தினசிங்கம் போன்றோர் குடாநாட்டின் புகழ் பெற்ற உதை பந்தாட்டவீரர்களாக இருந்தனர்.
இவர்கள் உதைபந்தாட்டத்தில் இருந்தாலும் உதைபந்தாட்டம், கரபந்தாட்டம் இரண்டிலும் குடாநாட்டு சாதனை படைத்த ஒரேயொரு வீரன் வல்வையின் பொட்டுக்கட்டிதான் என்பதை இந்த நேரம் யாரும் மறந்துவிடக்கூடாது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்பையா சாதாரண வீரன் அல்ல கட்டையாக இருந்தாலும் பந்தை சர்க்கஸ்காரன் போல சுழற்றி விளையாடுவதில் வல்லவர் இன்று சர்வதேச அரங்கில் நீங்கள் காணும் மெஸி, ரொனால்டோ போன்றவர்கள் கூட அவரளவுக்கு ஆற்றல் கொண்டவர்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை காரணம் அந்தத் தமிழனின் ஆற்றல் அப்படிப்பட்டது, இன்றுவரை நாம் அவருடைய புகழை பேசி ஒரு நூல் விடலில்லை..
அதோ பந்து கோணர் கிக்காக வருகிறது, கைகளை தரையில் ஊன்றி முகத்தால் நிலத்தைப் பார்த்து இடக்காலை மடக்கி குதிக்காலால் பந்தைத்தட்டி கோல் போஸ்றிற்குள் தள்ளுகிறார்.. சர்வதேச ஆட்டத்தில் இப்படியொரு குறி மரடோனாவுக்கும் இருந்தது கிடையாது, அப்பையாவும் மரடோனா போலவே இருப்பார்.
தெல்லிப்பளையுடன் நடந்த ஆட்டத்தில் பெரியோர் 2 ரூபா சிறுவர் ஒரு ரூபா என்று விளம்பரத்தில் போட்ட கட்டணம் மாறி கட்டணம் ஒரு ரூபா என்று தவறுதலாக அச்சடிக்கப்பட்டதால் கலவரம் ஏற்படுகிறது.
ஆளுக்கு ஒரு ரூபா இல்லை ஒருவரும் ரிக்கற் எடுக்கக் கூடாது.. தெல்லிப்பளை சண்டியன் ஒருவன் போர்க்கொடி தூக்குகிறான்.. தெல்லிப்பளை வந்துவிட்டோம் நேரம் சரியில்லை.. பணிந்து போவதே நல்லதென யாரோ கட்டைச்சத்திவேலின் காதில் ஓத, ஒரு ரூபாவுடன் ஜனம் வெள்ளமாக மகாஜனா கல்லூரிக்குள் நுழைகிறது.
அக்காலத்தே ஜோதிரவி மாஸ்டர் மகாஜனா கோச்சராக இருந்தார், சாதாரண ஆள் அல்ல அற்புதமான உதைபந்தாட்ட வீரர், நமது குடாநாட்டின் மகத்தான செல்வம், நெல்லியடியை சேர்ந்தவர்.
பின்னாளில் பருத்தித்துறை அணி சீனாவுடன் மோதியபோது கட்டியண்ணா, ஜோதிரவி, வல்வை தங்கவடிவேல் ஆகியோர் விளையாடி, சீன அணியை வெல்லாவிட்டாலும் இலங்கை அணியை விட சிறப்பாக ஆடி, பருத்தித்துறையில் வைத்து சீனர்களுக்கு கோல் போட்டவர்கள் வல்வை வீரர்களே..
மகாஜனாவுக்கு ஜோதிரவி மாஸ்டர், முயல் ஆகியோர் விளையாடினார்கள், அப்பையா அபாரமாக ஆடி.. அவர்களை வென்றுவிட்டார், மகாஜனாவால் ஒரு கோல்கூட போட முடியவில்லை.
அடுத்த நாள் வல்வையுடன் மோதல் தெல்லிப்பளையில்தான் மைதானம் வல்வையே திரண்டு வான்கள், கார்கள் என்று சாரிசாரியாக படையெடுத்த திருநாள்.
அன்றிரவு அப்பையாவுக்கு பக்கத்தில் இருக்கிறேன்.. கையில் கள்ளுப்போத்தல்.. போதை.. அவர் சொல்கிறார்.. பொட்டுக்கட்டிக்கு ஒரு கோல் போட வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று..
ரட்ணம்ஸ் அகில இலங்கை வீரர்களுடன் இறங்கியிருக்கிறது.. வல்வையை வெல்வது இலகு ஆனால் அவர்களை ஒரு கோல் போட விடாமல் வெல்ல வேண்டும் இதுதான் அப்பையாவின் குறிக்கோள்.
வென்றாலும் குடா நாட்டில் ஒரு கழகத்திடம் ஒரு கோல் வாங்கினால் அது ரட்ணம்சிற்கு தோல்விதான்..
ஆட்டம் ஆரம்பித்தது.. வல்வைக்கு முதல் கோல் இலகுவாக இறங்கியது.. கட்டியண்ணா உட்பட வல்வை வீரர்கள் கோல் விழுந்த பிறகு அசுர வேகம் எடுப்பார்கள் என்பது அப்பையாவுக்கு தெரியாது..
அடுத்த கோலும் வல்வைக்கு விழுந்தது.. இனி வல்வை முடிந்தது என்ற இடத்திற்கு ரட்ணம்ஸ் வந்தது.
அப்போது அகில இலங்கை அணிக்கு பயிற்சியாளராக இருந்த ஒருவர் மாஸ்டர் என்று அழைக்கப்பட்டார், அவர்தான் இரட்ணம்ஸ் பயிற்சியாளர்.. பந்தை கால்களில் எற்றி சர்க்கஸ் விளையாடி வல்வை வீரர்களை சுற்ற வைத்து வேடிக்கை காட்ட ஆரம்பித்தார்.
கரகோஷம் வானைப்பிளந்தது..
வெற்றி பெறலாம் ஆனால் வெற்றியால் மமதை கொள்ளக்கூடாது.. இரட்ணம்ஸ் எதிர்பாராமல் இருக்க வல்வை ஒரு கோலை போட்டது.. அப்பையாவின் கனவை பொட்டுக்கட்டி உடைத்துவிட்டது எனக்கு மட்டுமே தெரியும்.. இதை நான் இன்றுவரை கட்டி அவர்களிடம் கூறவில்லை.. இதுதான் முதற் பதிவு.
வல்வை வெற்றி பெறாவிட்டாலும் அகில இலங்கை அணிக்கு கடுகளவும் குறைவில்லாத வீரர்கள் என்பதை வல்வை நிறுவிய பொன்னாள் அந்த நாள், அதை உரசிப்பார்க்க வழி செய்தவர்கள் கட்டைச்சத்திவேல், இராஜகோபால் மாஸ்டர் என்ற இருவரும்தான்.
ஆட்டம் முடிந்து பஸ்சில் ஏறும்போது அப்பையா தமது பயிற்றுனரிடம் சொன்னார், " ஒரு காலமும் மமதை கொள்ளக்கூடாது, நீ மற்றவரை மட்டமாக நினைத்து பந்தை காலில் வைத்து சுற்ற உன்னைப்போல மற்றய ரட்ணம்ஸ் வீரர்களும் சுற்ற.. ஆட்டத்தின் ஓட்டத்தை மறந்துவிட்டீர்கள், பொட்டுக்கட்டி உங்களை போட்டுடைக்க இதுதான் காரணம் " என்றுவிட்டு பேருந்தில் ஏறினார்.. இதையும் கட்டி அவர்களிடம் நான் சொல்லவில்லை இதுவே முதற் பதிவு.
போட்டியில் வெல்வதல்ல வெற்றி.. எதிரி எமக்கு ஒரு கோல் போடும் அளவுக்கு தகுதி உள்ளவனாக இருந்தால் அது போதும் மேலும் ஒரு படிதான்.. அவன் நம்மை வென்றுவிடுவான்.. அகில இலங்கைக்கும் இணையாக ஒரு சிறிய ஊர் நிற்கிறதே என்ற கலவரத்தை இந்த ஆட்டம் கொழும்பிற்கு உணர்த்திவிட்டது..
வல்வை வேர்சஸ் இலங்கை.. எதிர்கால ஆட்டம் ஆரம்பமாக இது முதல் நிகழ்வு என்பதை அன்று நாம் அறிந்திருக்கவில்லை..
ஆனால் இங்கு முக்கியம் அதுவல்ல.. ஒரு சண்டியனை சாதனையாளனாக எப்படி மாறினான் என்பதே இங்கு முக்கியமாகும்.
இருப்பினும் கொழும்பு ரட்ணம்ஸ் அணியை வரவழைத்தது, தெல்லிப்பளை சண்டியன் செய்த வேலையால் நஷ்டமானது, விளைவு சத்திவேலின் கையில் இருந்த டெக்கர் மோதிரமும், இராஜகோபால் மாஸ்டரின் கையில் இருந்த தங்க மோதிரமும் காற்றில் மறைந்தன, கீழே விழுந்துவிட்டதாக இராஜகோபால் மாஸ்டர் வீட்டில் சொன்னார்.
அவ்வளவா.. இல்லை.. ஆரம்பித்தது வல்வை நேதாஜி ஆண்டு விழா...
உதயசூரியன் ஆண்டுவிழாவில் விநோத உடைப்போட்டியில் சொதி என்று அழைக்கப்பட்ட அக்கால விதானையார் மகனுக்கு மொட்டை போட்டு துலாக்காவடியில் தொங்கவிட்டு, கட்டைச்சத்திவேல் உழவு இயந்திர சாரதியாக இருக்க, இராஜகோபால் மாஸ்டர், ஈஸ்வரலிங்கம் அத்தான், நாங்கள் எல்லாம் பக்கப்பாட்டு பாடி அதில் பங்கேற்று தோல்வியடைந்தோம்.
மச்சான் மற்றவன் மத்தியஸ்தராக இருந்தால் நமக்கு தோல்விதான்.. ஆகவே நாம் மத்தியஸ்தராக இருக்க வேண்டும்.. அதற்கு என்ன செய்ய வேண்டும்...
உடனடியாக களம் இறங்கியவர் கட்டைச்சத்திவேலே.. கனகத்து வடலி அப்பத்தட்டியில் ஞானமூர்த்தி அப்பா வீட்டின் முன்பாக ஒரு காரியாலயம் திறக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டு ஓடிப்போனேன் ஒரு பெரிய பியர் போத்தல் கேஸ் கிடந்தது, தேன் வண்டுகள் கூடிவிட்டன.
சூடு பிடித்தது, நேதாஜி விளையாட்டுக்கழக ஆண்டு விழா இரண்டு தினங்கள் நடந்தது சைக்களிள் ஓட்டப்போட்டி, மரதன் ஓட்டப்போட்டி, நீச்சல் போட்டி என்று குடாநாடு உதய சூரியன் ஆண்டு விழாபோல வல்வை நேதாஜி ஆண்டுவிழாவை திரும்பிப் பார்த்தது.
ஒரு காரில் கொம்மந்தறை அப்புத்துரையின் ஸ்பீக்கர் நான் ஏறி அறிவித்துக் கொண்டிருந்தேன்.. யார் தருவார் இந்த அரியாசனம்..
காலை வானில் அவுட் வெடித்தது.. பான்ட்வாத்திய ஒலி கேட்டது.. நேதாஜி கொடியை தற்போது டென்மார்க்கில் வாழும் நண்பர் அருளானந்தராஜாவின் கையில் கொடுத்தார், உதயசூரியன் கழகத்தை தாண்டி, ஊரிக்காடுவரை பான்ட் வாத்தியம் முழங்க போய் திரும்பு என்று ஆணையிட்டார்.
நமது வெற்றி நமது கையில் வெற்றிக்கொடி பட்டொளி வீசி பறந்தது..
பணம் திராவகமாக ஓடியது.. நாடகப்போட்டியில் குடாநாட்டின் பிரபலமான நாடகங்கள் எல்லாம் குதித்துவிட்டன, சவுடால் சின்னக்கிளி வீட்டில் ஐம்பது நாடகங்களுக்கு தேர்வு நடுவில் மத்தியஸ்த்தராக கட்டைச்சத்திவேல்.
" டேய் தம்பி உன் அண்ணன் மத்தியஸ்த்தராக வரப்போகிறான் இனி நீயும் நாடகப் போட்டியில் குதியடா.. நான் பேனையுடன் குந்தியிருக்கும்வரை உனக்கு வெற்றிதான் போ" என்றார்.
அவர் அப்படிக் கூற காரணம் இருந்தது, அக்காலத்தே நான் மிகுந்த கலை ஆர்வமுடையவனாக இருந்தேன், சத்திவேலின் அக்கா தவக்கிளி வீட்டில் அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற பாடலைப்பாடிதைக் கேட்டு மகிழ்ந்த அவருடைய தாய் மனோன்மணி பசுப்பாலில் கோப்பி போட்டு பரிசு தந்தார்.. அடே இவன் நல்லா பாடுறானே.. என்று போற்றினார் கட்டைச்சத்திவேல்.
அதை அவர் மறக்கவில்லை.. நானும் நண்பர் அருளானந்த ராஜாவும் சாம்ராட் அசோகன் என்ற நாடகத்தை தயாரித்து போட்டிக்கு போனோம்.. முறைப்படி அன்று எங்களை அவர்கள் விரட்டியடித்திருக்க வேண்டும்...
ஆனால் ஒற்றைக்கண்ணை சிமிட்டிவிட்டு சத்திவேல் பென்சிலால் போட்ட மாக்ஸ் காரணமாக நாமும் மகுடபங்கம், நல்லதீர்ப்பு, எல்லைக்கோடு, இலட்சிய வீரன், பாதுகாப்பு போன்ற குடாநாட்டின் பிரபல நாடகங்களுடன் போட்டிக்காக மேடையேற வழி செய்தார்.
அகப்பை பிடிப்பவன் நம்ம ஆளாக இருந்தால் அடிப்பந்தி என்ன நுனிப்பந்தி என்ன எல்லாமே ஒன்றுதான்..
" நீங்கள் செலக்சன் ஆனால் இறுதிச்சுற்றில் நான் மத்தியஸ்தராக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வெற்றி கிடைக்கும் தெல்லிப்பளை கந்தசாமியே தலைமை மத்தியஸ்தர் " என்றார்.
" அப்படியானால் கந்தசாமி தனக்கு வேண்டிய மாவை மறுமலர்ச்சி நாடக மன்றத்திற்கல்லவா முதற்பரிசு கொடுக்கப்போகிறார் " என்றேன்..
மாவை மறுமலர்ச்சி நாடக மன்றம்தான் முதற்பரிசுக்குரிய நாடகத்தை போட்டது, இரண்டு தடவை நடைபெற்ற நேதாஜியின் மகத்தான ஆண்டு விழாக்களிலும் நாடகப்போட்டியில் மாவை மறுமலர்ச்சி நாடகமன்றமே தங்கப்பதக்கம் வென்றது, இரண்டாவது ஆண்டு வென்றதே அவர்களுடைய ஏன் இந்த அவலம் என்ற நாடகம்.
அன்று என்னை நாடகப் போட்டிக்குள் உந்தித்தள்ளிய சத்திவேலினால் இன்று 110 நாடகங்களை மேடையேற்றிவிட்டேன், எத்தனையோ தங்கப்பதக்கங்கள் வென்று, உலக நாடகவிழாவில் பல மேலை நாடுகளை வென்று இன்று இந்தியாவில் எமது திரைப்படம் ஓட இந்திய நடிகர்களை நான் இயக்குமளவுக்கு வளர அடியெடுத்துக் கொடுத்தில் முக்கியமானவைகளில் கட்டைச்சத்திவேல் கையில் இருந்த பென்சிலும் ஒன்று.
இவ்வளவா இல்லை.. எழுதினால் மேலும் ஆறாக ஓடும்.. நீங்கள் தாங்க மாட்டீர்கள்.. என்பதால் கிளைமாக்சிற்கு வருகிறேன்.
இலங்கையில் இனப்போர் தொடங்க இந்த எழுச்சி முடிகிறது.. வியாபாரம் படுக்கிறது, பச்சை வள்ள துரையின் காலம் முடிகிறது.. நானும் மலை நாட்டுக்கு ஆசிரியராக போய்விடுகிறேன்.
ஒரு நாள் மலை நாட்டில் படுக்கையில் கிடக்கிறேன் கட்டைச்சத்திவேல் ஐயோ என்று அலறும் சத்தம் கேட்கிறது.. ( இது சத்தியம் பொய் அல்ல) காட்டுக்கட்டிலில் திடுக்கிட்டு எழும்பியிருக்கிறேன்..
அப்போது தொலைபேசி இல்லை..
கட்டைச்சத்திவேல் யாழ்ப்பாணத்தில் ஒரு கிணற்றில் கயிற்றில் தூங்கி தற்கொலை செய்துவிட்டதாக தகவல் வருகிறது.
அவர் தானாக தூங்கியிருந்தால் இப்படி சத்தம் வருமா.. சந்தேகமாக இருக்கிறது.. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை..
தானாடாவிட்டாலும் சதை ஆடியது..
இருந்தாலும் எங்கோ ஒரு விதி விளையாடுவது தெரிந்தது.. "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும் " என்று என் அம்மாச்சி சொல்லியது நினைவுக்குள் வந்தது..
விதியை முடிய மறுபடியும் விட்ட இடத்திற்கு வருகிறேன்..
அன்று பேருந்து நிற்க அதன் சாரதிக்கு மோசமான அடி விழுந்ததாக சொன்னேனே.. இரண்டு நாட்களில் அவருடைய வீட்டின் முன்னால் அழு குரல் கேட்டு போனேன் திடீரென அந்த பேருந்து நடத்துநர் இறந்துவிட்டார்.
அவரை மணமுடித்த இளம் யுவதி அருகில் அழுது கொண்டிருந்தாள்.. மரணம் இயற்கை மரணம்தான்.. ஆனால் என்னால் அதை இயற்கை மரணம் என்று ஏற்க முடியவில்லை..
கட்டைச்சத்திவேல் அவருக்கு அடித்திருக்கலாம் ஆனால் அப்படி அடித்திருக்கக்கூடாது.. அது எவ்வளவு பெரிய தவறு என்று என் மனம் அன்றே அழுதது.. என் வாழ்வில் வன்முறையாளனாக என்றுமே மாறுவதில்லை, ஆயுதத்தை கையில் என்றுமே ஏந்துவதில்லை, ஏன் இன்னொரு மனிதனை கையால் தொடுவதே இல்லை என்று சபதமெடுத்து அரசாங்க உத்தியோகத்திற்கு போக, இலங்கையை விட்டே வெளியேற அன்று வன்முறை மீது நான் கொண்ட வெறுப்பே காரணமாகும்.
"இது நீரோடு செல்கின்ற ஓடம்..
இதில் நியாயங்கள் யார் சொல்லக்கூடும்..
சட்டம் ஏமார்ந்து போனாலும் போகும்..
தர்மம் எப்போதும் பழிவாங்கித் தீரும்.."
சீர்காழியின் பாடல் காதுகளில் கேட்கிறது..
சரியான பின்னணியை நமது சமுதாயமும் ஊரும் கொடுத்து சரியான பாதையில் வழி காட்டியிருந்தால் கட்டைச்சத்திவேல் சண்டியனாகியிருக்க மாட்டார்.
நமது சமுதாயத்தில், பாடசாலைகளில், சமயத்தில், அரசியலில் பெரும் பிழைகள் இருக்கின்றன, இலங்கையில் இனப்போர் வெடிக்க நமது தவறான கல்வியே காரணம்..
இவைகள் சரியாக இருந்திருந்தால் கட்டைச்சத்திவேலின் பெறுமானம் வேறாக இருந்திருக்கும்.. இருந்தாலும் அவர் மாபெரும் சாதனையாளன் என்பதை நிறுவிட்டுத்தான் விடை பெற்றிருக்கிறார்.
அவர் என் அண்ணன் என்பதில் என்றுமே எனக்கு பெருமைதான்..
அன்று விளக்குடன் என்னை கூட்டிச் சென்றாய் இன்று உன் வாழ்வை நான் எழுத என் அறிவுக்கு விளக்கேற்றிச் சென்றாய்..
அவர் இறந்தன்று எனது காதில் ஒரு பாட்டுக்கேட்டது.. அந்தப் பாட்டு மனதில் வந்தால் உடனடியாக மறந்துவிடுவேன்..
பேசாதே.. வாயுள்ள ஊமை நீ..
சொந்தம் என்ன பந்தம் என்ன..
சொன்னால் பாவமே..
தீபம் படத்தில் சிவாஜி இப்பாடலுக்கு நடித்திருப்பார், அதே நிலையில்தான் சத்திவேலின் கதையும் முடிகிறது.
இந்தப்பாடலையும் இறந்த அன்றே என் காதுக்குள் அனுப்பி அனைத்தையும் கூறிவிட்டு போனவர் அவர்தான்..
அடுத்த வாரம்.. வரப்போவது யார்...
எழுதினால் உங்களுக்கு தெரிந்தவர் பெயர் இல்லை என்றால் பேசாமல் இருந்துவிடுவீர்களோ என்று பயமாக இருக்கிற���ு.. சென்ற கட்டுரைக்கு வல்வையில் இருந்து யாருமே கருத்து எழுதவில்லை..
கருத்து இல்லாத உங்களுக்காக நான் ஏன் எழுத வேண்டும்.. என்று கேட்கவில்லை.. என் கடமையை செய்கிறேன்..
அடுத்த வாரம் புதிய ஒருவருடன் சந்திப்போம்..
மேலும் இரண்டு வாரங்களில் இதை நிறைவு செய்து புதிய திரைப்படத்தின் கதையை எழுத விடைபெற எண்ணுகிறேன்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
Ramesh Manivasagam (Danmark)
Posted Date: May 25, 2016 at 09:47
வணக்கம் ஐயா!
நான் வாழ்வில் கேட்டிராதா பார்த்திராதா நிகழ்வுகளை அறியத்தந்து அதில் தர்மத்தையும் போதித்துள்ளீர்கள் . தங்களின் சேவையை ஈழமே மெச்சவேண்டும் வெறுமனே வல்வைக்குள் அடங்கி விடக்கூடாது - இன்னும் இன்னும் எழுதுங்கள் ஐயா வாசிக்க நானிருக்கின்றேன் . வாழ்க நலம்.
k.S.Thurai (Denmark)
Posted Date: May 20, 2016 at 20:17
அன்பு நண்பர் கேப்டன் கலைநேசன் அவர்களுக்கும், அன்புத்தம்பி தேவராஜ் சிவகுமாரசாமி அவர்களுக்கும்..
தங்கள் ஆதரவு என்னை எழுதத்தூண்டுகிறது.. நான் அறிந்த வல்வை மக்கள் அனைவரைப் பற்றியும் இது போல என்னால் எழுத முடியும்..
நம் கண் முன்னே வாழ்ந்தவர்களில் என்னென்ன திறமைகளை நான் கண்டேனோ அவைகளை இணைத்து ஒரு வாழ்க்கை புத்தகமாக மாற்றி, அதன் உதவியுடனேயே வாழ்ந்து வருகிறேன்.
உதாரணம் பற்குணி என்பவர் வயதான பின்னரும் மரதன் ஓட்டத்தில் தொடர்ந்து ஓடினார் கடைசியாகவே என்றும் வந்தார்.. ஆனால் கடைசி வரை ஓடினார்.. வெற்றியல்ல ஓடி முடிக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார்.. தண்ணீர் அள்ளி சீவித்த இவர் ஒரு டேனிஸ்காரராக இருந்தால் டேனிஸ் மகாராணியின் கௌரவ விருiதை பெற்றிருப்பார்.
இப்படியானவர்களை போற்ற நமது தலைவர்களிடம் வக்கில்லை.. அறிவில்லை.. ஏன் மன ஒழுக்கம் இல்லை..
எனது வாழ்க்கை வழிகாட்டி விளக்குகள் மதங்களோ தலைவர்களோ அல்ல.. என் முன்னால் வாழ்ந்து போன சாதாரண எளிய மனிதர்களே..
ஒவ்வொருவரிடமும் ஒரு நல்ல இயல்பை கண்டு பிடித்து வைத்துள்ளேன்..
காகத்தை பிடித்து கிணற்றில் போட்டு கிணறு இறைத்து வாழ்ந்த சிவகெங்கை அப்பா செய்த காமடி வேலையைத்தான் இப்போது அமெரிக்கா மத்திய கிழக்கில் செய்து பிழைக்கிறது..
செத்த வீட்டுக்கு மணியடித்தார் சிவகெங்கை அப்பா.. இப்போது மத்திய கிழக்கின் செத்தவீடுகளுக்கு மணி அடிக்கும் வேலையை செய்கிறது சி.என்.என்..
ஒப்பிட்டுப் பார்த்தால் எண்ணற்ற புதுமைகள் உண்டு நமது மக்களில்... அவர்களைப்பற்றி இதுபோல எழுத முடியும்.
அனைத்த வல்வையரும் இப்படி பதிவு செய்யப்பட்டால் அதுவன்றோ வல்வை வரலாறு.. இந்த ஆக்கத்தை நூலாக்கி அனைத்து வல்வை வீடுகளுக்கும் இலவசமாக வழங்க யோசித்து வருகிறேன்.
வரலாறு ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமானதல்ல.. மண்ணில் வாழ்ந்த அனைவருக்கும் அது சொந்தமானது.
இந்த எழுத்துக்களில் எவரையும் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன்..
இந்த வழியில் நான் அறிந்த வல்வை மக்கள் அனைவரையும் வரலாற்று புருஷர்களாக்க முயன்று கொண்டிருக்கிறேன்..
ஒருவன் உண்மை எழுத்தாளனாக இருந்தால் தனது மக்களை வரலாற்று புருஷர்கள் ஆக்க அவன் எழுத்து பயன்பட வேண்டும்.. என்ற மேலைத்தேய தத்துவத்தை வல்வைக்கு பயன்படுத்துகிறேன்..
அண்ணன் சத்திவேலின் பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை..
திரு.கலைநேசன் அவர்களிடம் பல திறமைகள் கண்டுள்ளேன்.. சிதம்பரா அணிக்கு உதைபந்தாட்டம் விளையாடியபோது உங்களுடன் நானும் விளையாடியுள்ளேன்.. கொக்குவிலுடன் நாம் மோதினோம்... உங்கள் உறவினர் திரு. தங்கவடிவேல் போல கோலை உள்ளே தள்ளும் உங்கள் திறமையை அன்றில் இருந்த இன்றுவரை நான் மறக்கவில்லை..
சர்வதேச ஆட்டங்களில் டென்மார்க் அணி நன்றாக விளையாடுகிறது.. உங்களைப்போல திடீரென கோல் போட அவர்களிடம் கடைசி நேர துணிவு போதியதாக இல்லை.. உங்களிடம் அது இருக்கிறது.. பின்னாளில் அது வரும்.. எழுதவுள்ளேன்..
N.Kalainesan (Sri Lanka)
Posted Date: May 20, 2016 at 05:01
Dear Sellathurai,
Thanks for the memories, I do know a him also , He is one of good heart below in our village. and I worked with him when he started Nethaji Foot ball club. Unfortunatly he died in early age.
Appreciated your afford...Please continue to write more about our village unforgetable people to get to know our youngsters.
Capt.N.Kalainesan
Thevarajah Sivakumarasamy (Sri Lanka)
Posted Date: May 18, 2016 at 19:30
Dear Sellathurai Master,
Nice memories. Please do write more and more.
I was born in VVT Kothiyal Lane in front of Shakthivel Mama house.
I know him a little about him, now got to know a lot of him. Hope you may have contact with son & daughter of Shakthivel, pls, share the story with them too. Its good for them to know about their father.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.