மறத்தி இசைத்தட்டு வெளியிடப்பட்டது, முதற்பிரதியை மனோகரன் பெற்றுக்கொண்டார்
பிரசுரிக்கபட்ட திகதி: 01/02/2017 (புதன்கிழமை)
வல்வெட்டித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பெண் விமானி (முதலாம் தர அதிகாரி - first officer) அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
விழாவின் ஒரு நிகழ்வாக அர்ச்சனா பாடிய மறத்தி என்ற இசைத்தட்டும் வெளியிடப்பட்டது, நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் கனடாவில் இருக்கும் இசையமைப்பாளர் ஸ் ரீவ் கிளீவ் வருகை தந்திருந்தார், அதில் றப் இசை வழங்கிய கிளியோபாற்றாவும் சுவிஸ் நாட்டில் இருந்து இணைந்து கொண்டார்.
இவர்களுடன் வஸந்தும் இணைந்த இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது, பாடல்களை எழுதிய பெண் கவிஞர் நர்வினி டேரி அரங்கில் தோன்றி விளக்கமளித்தார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் சமுதாய அநீதிகளை தன்னைப்போன்ற ஒரு பெண் கவிஞரே பெண்களின் கோணத்தில் இருந்து முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்தார். பெண்கள் மாட்டுப்பெண்களாக மாறாது மறத்திகளாக மாறி வாள் எடுக்கும் நெருப்பு வரிகளை கொண்டவை இந்த இசைப்பாடல்கள் என்றார்.
இலங்கை முதல் மலேசியா, அவுஸ்திரேலியாவரை இளம் கவிஞர்களின் சங்கமமாக இந்த இறுவட்டு வெளியானது, பிரபல அறிவிப்பாளர் வலண்டைன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.