உலக அளவில் 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற ராமேஸ்வரம் கடல் விளையாட்டுப் போட்டிகள் (காணொளி)
பிரசுரிக்கபட்ட திகதி: 25/07/2015 (சனிக்கிழமை)
இராமேஸ்வரம் அருகே குந்துகால் கடற்கரைப் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. நீர் விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 1000 கி.மீ நீளத்திற்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 237 கி.மீ அளவிற்கு கடற்கரை அமைந்துள்ளது. கடற்கரை பகுதி சுத்தமாக வைத்திருத்தல், கடல்வளம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மீனவர்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச நீர் விளையாட்டுப் போட்டி தற்போது நடத்தப்படுகிறது.
நீர் விளையாட்டுகளான கயாக் போட்டி, ஸ்டாண்டப் பெடல் படகுப்போட்டி மற்றும் கைட் சர்பிங், விண்ட் சர்பிங் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, ஸ்ரீலங்கா,அமெரிக்கா, பிரான்ஸ்,பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும், கடலோரப் பகுதி மீனவர்களும், இந்திய கடலோர காவல் படை மற்றும் போலீஸார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் போலீஸ் குழுமம் ஏ.டி.ஜீ.பி, சைலேந்திரபாபு இந்திய கடலோர காவற்படை கமாண்டண்டர் எச்.எச்.மோரே, கெஸ்ட் மற்றும் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் தொடர்ச்சியாக நாளைக் காலை ராமநாதபுரம் அருகே அமைந்துள்ள அதியமான் கடற்கரையில் கடல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.