கடலூர் மாவட்டம் – பண்டுருட்டியிலிருந்து 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது. “ திருவதிகை ” திருக்கோவில். சென்னை – கடலூர் – விருத்தாசலம் – விழுப்புரம் – சிதம்பரம் ஆகிய பெருநகரங்களிலிருந்து அடிக்கடி திருவதிகைக்கு பேருந்து வசதிகள் உண்டு.
மிகப்பெரிய கோவிலான திருவதிகை அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்றாகும். சிவனின் வீரச்செயல்கள் நடைபெற்ற எட்டு ஊர்களில் உள்ள சிவ ஸ்தலங்களை “ அட்ட வீரட்டத் ஸ்தலங்கள் ” என்கிறோம். இத்தலம் திரிபுரம் எரித்த வீரத்தலம். திரிபுரம் எரித்தால் திரிபுராரி, புராரி, திரிபுராந்தகர் என்றெல்லாம் இங்குள்ள சிவனுக்குத் திருநாமங்கள் உண்டு.
அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்துவந்த தலம். சூலைநோயின் துன்பந்தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் திருப்பாதிரிப்புலியூரை விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு தொழுது, திருநீறு பெற்றுப் பெருவாழ்வு வந்ததென. அவர் பின் சென்று, அதிகைப் பிரானை அடிபணிந்து “ ஆற்றேன் அடியேன் ” எனக் “ கூற்றாயினவாறு ” பதிகம் பாடி, சூலைநோய் நீங்கப் பெற்ற திருத்தலம் இது. சுருங்கச் சொன்னால் சைவத்துக்கு நாவுக்கரசரை வழங்கிய பெருமைமிகு தலமிதுமே.
“ கூற்றாயினவாறு ” பாடி முடிந்ததும், “ நற்றமிழ் எடுத்துப் பாடியவனே! நீ நாவுக்கு அரசன் எனும் பொருள் விளங்க ‘ நாவரசன் ’ என அழைக்கப்படுவாய் ” என ஒரு அசரீரி எழுந்தது. தேவார மூவருள் காலத்தால் மூத்த மருள்நீக்கியாரை “திருநாவுக்கரசர் ” என இறைவன் பெயர்சூட்டி மகிழ்ந்த ஸ்தலமும் இதுவே.
இக் கோவிலின் மிக நெருக்கமாக ஓடும் நதி “ கெடில நதி ” எனப்படுகிறது. “ அதிகை ” என்பது கோவிலின் மிகப் பழைய பெயர். அதனால் இரண்டையும் இணைத்து “ அதிகைக் கெடில வீரட்டானம் ” என நாவரசர் தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பன்னிரு திருமுறைகளின் காலத்திற்குப் பின்னர் தோன்றியதே “ மெய்கண்ட சாத்திரம் ” எனப்படும் பதினான்கு நூல்கள். அவற்றுள் ஒன்றான “ உண்மை விளக்கம் ” எனும் நூலின் ஆசிரியரான “ மணிவாசகங் கடந்தார் ” அதிகையைச் சேர்ந்தவர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும்.
இறைவன்: வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், அதிகைநாதர்
இறைவி: திரிபுரசுந்தரி
தலமரம்: கொன்றை
தீர்த்தம்: கெடில நதி
கோவிலுக்கு முன்புள்ள 16 கால் மண்டபத்தைத் திருநீற்று மண்டபம் என்கிறார்கள். இதற்கு எதிராக அப்பர் மடமும் அருகே திலகவதியார் மடமும் உள்ளது. ஏழு நிலைகளையுடைய உயர்ந்த ராஜகோபுரம். கோபுர வாயிற் தூண்களில் நிறைந்த சிற்பங்கள். வலப்பக்கத்தில் சற்று உயரமாக திரிபுரமெரித்த கோலச் சிற்பங்கள் சுதையினால் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாயிலின் இரு புறங்களிலும் நடனக் கலையின் 108 கரணங்களை விளக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோபுர வாசலுக்கு மிதித்து ஏறும் படிக்கட்டின் இரு புறத்திலும் அழகான நடன மாதரின் உருவங்களைத் தத்ரூபமாகப் பார்த்து மகிழ்கிறோம்.
உட்புறத்தில் இன்னொரு பதினாறு கால் மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தின் இடது பக்கம் “ சக்கர தீர்த்தம் ” எனப்படும் தீர்த்தக்குளம் உள்ளது. இம் மண்டபத்தில் புகும்போது முதலில் உள்ள இரு தூண்களில் (ஒன்று) சுப்பிரமணியத் தம்பிரான் (அமர்ந்த நிலையில் ) சிற்பமும் , (இரண்டு) இதற்கு நேர் எதிர்த் தூணில் இவரது சீடரான சிவஞானத் தம்பிரான் (நின்ற நிலையில்) சிற்பமும் உள்ளது. இவர்கள் இருவருமே இக் கோவிலைத் திருத்திச் செப்பனிட்டவர்கள் என்றும், இவர்களே அப்பர் பெருமானுக்கு பத்துநாள் விழாவை ஆரம்பித்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
உட்கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. கவசமிட்ட கொடிமரம் – கொடிமரத்து விநாயகர் முன்னால் நந்தி - வலப்பக்கம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. “ தேவசபை ” என்றழைக்கப்படும் இந்த மண்டபத்திலேயே, வருடத்தில் ஆறு தடவைகள் நடைபெறும் நடராஜர் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
உட்கோபுரம் தாண்டி உள்ளே சென்றால் உயரமான நந்தி. ஒரு பக்கம் விநாயகரும் மறுபுறம் முருகனும் உள்ளனா். பிரகாரத்தைச் சுற்றிவர ஆரம்பிக்கிறோம். வலமாக வரும்போது அப்பர் சந்நிதி (உற்சவ மூர்த்தி ) உள்ளது. சேக்கிழார் முதலான அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் உள்ளன. அடுத்து ஸ்தல விருட்சமான கொன்றை மரம். பக்கத்தில் திலகவதியார் சந்நிதி. அடுத்து சனீஸ்வரர் சந்நிதியும் – அமர்ந்த நிலையில் அப்பர் சந்நிதியும் (மூல மூர்த்தம் ) அடுத்தடுத்து காணப்படுகின்றன. தலையில் உருத்திராக்க மாலையும் – கையில் உழவாரமும் கொண்டு அப்பர் பெருமான் அமர்ந்திருக்கும் காட்சி அற்புதமானது.
விநாயகர் சந்நிதி, பஞ்சமுக சிவலிங்கம், வரிசையாக பல சிவலிங்கத் திருமேனிகள், யாகசாலை, நவக்கிரக சந்நிதி – இத்தனையும் கடந்து வந்து நடராஜர் சந்நிதியை அடைகிறோம். பக்கவாசல் படிகள் ஊடாக உள் மண்டபத்தை அடைந்தால் நேரே மூலவர் சந்நிதி. கிழக்கு நோக்கிய பெரிய சிவலிங்கத் திருமேனி. ஆவுடையாரும் பெரியது. பதினாறு பட்டைகள் கொண்ட பெரிய லிங்கபாகம். அழகிய – அளவான அலங்காரத்துடன் வீரட்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார். வீரட்டநாதர், அதிகைநாதர், கெடில நாதர் எனப் பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறார் அவர். கருவறையோடு இணைந்தபடியுள்ள முன் மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.
சில்லுகள் பூட்டப்பட்ட தேர் போன்ற அமைப்புடன் – பூமியில் நிழல் சாயாதபடி – அடி பருத்துக் காணப்படுகின்றது கருவறையின் அமைப்பு. திரிபுரம் எரித்த போது தேரில் புறப்பட்டதைக் காட்டும் விதத்திலான எண்கோண வடிவினாலான கருவறை அமைப்பு இது. கருவறையைச் சுற்றிவரும்போது, கருவறையின் புற அமைப்பு நம் கண்களைக் கவருகிறது. குடைவரைச் சிற்பங்கள் போல- உட்குடைவும் - பக்கவாட்டு வளர்த்தியுமாக உள்ள புற அமைப்பில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கையம்மன் ஆகியோர் இந்தக் குடைவரையினுள் அமர்ந்துள்ளனா். சண்டிகேஸ்வரர் தனிச் சந்நிதியில் உள்ளார்.
சுவாமி சந்நிதானத்திலிருந்து வெளியே வந்து சுவாமிக்கு வலதுபக்கம் சென்றால் அம்பாள் சந்நிதி வருகிறது. அம்பிகைக்கு திரிபுரசுந்தரி – பெரியநாயகி எனும் திருநாமங்கள் உண்டு. ஐயனுக்கு வலது பக்கம் அம்பிகை சந்நிதி அமர்ந்திருக்கும் கோவில்கள் மிகக் குறைவு. சுவாமி சந்நிதிபோல கிழக்குப் பார்த்தபடியுள்ள அம்பிகை நின்ற திருக்கோலத்தில் அழகு சொரூபமாக அருள் பாலிக்கிறார்.
பாண்டியநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு சீர்காழியை அடைந்த ஞானசம்பந்தர், அங்கிருந்து புறப்பட்டு பல திருக்கோவில்களைத் தரிசித்தபின், திருப்பாதிரியூர்ப் பெருமானை வணங்கிக்கொண்டு அதிகை வீரட்டானத்தை வந்தடைந்தார். அங்கே வீரட்டேஸ்வரர் பூத கணங்கள் புடைசூழ திருநடனத்தைக் காண்பித்தார். இறைவன் திருநடனம் கண்டு மெய்மறந்து நின்ற சம்பந்தர் இவ்வாறு பாடுகின்றார்.
“ எண்ணார் எழில் எய்தான் இறைவன் அனல் ஏந்தி
மண்ணார் முழுவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே ”
அதிகைக் கோவிலுக்கு மிக அண்மையில் உள்ள “ சித்தவட மடம் ” சரித்திரச் சான்று பகருகிறது. சுந்தரர் திருத்தல யாத்திரையின் போது அதிகைக் கோவிலை அண்மித்தவர், நாவுக்கரசர் தம் கைகளால் உழவாரப் பணிசெய்து வாழ்ந்த அதிகை மண்ணை தாம் கால்களால் மிதிக்க அஞ்சி, சித்தவட மடத்தில் தங்கியிருந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சுந்தரா் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வயது முதிர்ந்த பெரியவர் வடிவில் வந்த எம்பெருமான், தாமும் மடத்தில் படுத்துறங்குவதுபோலப் பாசாங்கு செய்து, மூன்று முறை சுந்தரா் தலைமீது தம் காலடி படும்படி திருவடி தீட்சை கொடுத்து மறைந்தருளினார். சுந்தரருக்குத் திருவடி தீட்சை கொடுத்த “ சித்தவட மடம் ” இப்போது “ சிவனாண்டி மடம் ” – “ சித்தாந்த மடம் ” என்றெல்லாம் பேசப்படுகிறது.
நாவுக்கரசருக்கு சூல நோய்க்கான தீர்வு. சம்பந்தருக்கு நடனத் திருக்கோலம் காட்டியமை. சுந்தரருக்குத் திருவடி தீட்சை ” என தேவார மூவேந்தர்களுக்கும் திருவருள் பொழிந்து மூவராலும் பாடல்பெற்ற திருவதிகைத் திருக்கோவில் அனைவரும் தவறாது தரிசிக்க வேண்டிய அற்புதத் திருத்தலம்.
தேவார மூவரில் மூத்தவர் திருநாவுக்கரசர். இவர் பாடிய முதல் தேவாரப் பாடல் திருவதிகையில்த்தான் தோன்றியது. இதன்படி, தேவாரத் தலங்களிலேயே முதல் தலமாக விளங்கும் பெருமைக்குரியதும் திருவதிகைத் திருத்தலமே.
“ நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயோனல்லேன்
ஓதியும் உணரமாட்டேன் உன்னையுள் வைக்கமாட்டேன்
சோதியே சுடரே உன்தன் தூமலர்ப் பாதங்காண்பான்
ஆதியே அலைந்து போனேன் அதிகை வீரட்டனீரே ”
-அப்பர்-
நன்றி : ஞானச்சுடர் ஆவணிமலர் 2015
அடுத்தவாரம் : “ திருவீழிமிழலை” திருமால் தன் கண்களில் ஒன்றை அர்ச்சித்து இறைவனிடமிருந்து “ சக்கரம் ” பெற்ற வரலாறு நிகழ்ந்த இடம் “ திருவீழிமிழலை ”
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.