தமிழகத் திருக்கோயில் வரிசை - திருநாவலூர் - வல்வையூர் அப்பாண்ணா –
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பாதையில் உழுந்தூர்ப் பேட்டை தாண்டியதும் “ கொடிமலம் ” எனும் பேருந்துத் தரிப்பிடத்தில் இறங்க வேண்டும். இடது புறமாகப் பிரிந்து செல்லும் சந்நிதியில் பண்டிருட்டி வழியாக கடலூர் செல்லும் பேருந்தில் 2km பயணித்தால் “திருநாவலூர்” திருக்கோவிலில் இறங்கிக் கொள்ளலாம்.
சுந்தரர் பிறந்து – வளர்ந்து – வாழ்ந்த சுந்தர பூமியாதலின்“ திருநாவலூர் ” தனிச் சிறப்புப் பெறுகிறது. சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் நம்பியாரூரர் (சுந்தரரின் இளமைப் பெயர் இதுவே ) மகனாகப் பிறந்தார் எனும் கூற்றை பெரியபுராணம் இவ்வாறு வர்ணிக்கிறது.
மதொரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும்
வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனார்க்கு
ஏகமில் கற்பின்வாழ்க்கைமனை இசைஞானியார் பால்
தீதகன் றுலகம் உய்யத் திருஅவதாரம் செய்தார்.
-பெரிய புராணம்:பாடல்இல: 149
மண்டபத்தின் ஒரு பக்கமுள்ள விளம்பரப் பலகை போன்ற பகுதிகளில் சுந்தரர் பற்றிய விபரங்கள் பெரிய எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. சுந்தரர் – ஆடிச் சுவாதி – 8ஆம் நூற்றாண்டு, தந்தையர் – சடையனார், தாயார் – இசைஞானியார், அவதார தலம் -திருநாவலூர், இறைவன் ஆட்கொண்டது –திருவெண்ணை நல்லூர், முத்தி தலம்-திரு அஞ்சைக் களம் விபரமும் – அதற்கான விளக்கங்களும் தெளிவாகவே உள்ளன.
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தபடி புதியபொலிவுடன் உயர்ந்து நிற்கிறது. பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் சூழ சுந்தரர் வீற்றிருக்கும் அகன்ற சந்நிதி கோபுர வாசலருகே உள்ளது. எதிரில் வெள்ளை யானை நிற்க, சுந்தர் தாள மேந்திக் காட்சி தருகிறார். சுந்தரர் எதிரில் ஏன் வெள்ளை யானை? கைலாசத்திலிருந்து வருகை தந்த வெள்ளை யானையின் மீதேறி “திரு அஞ்சைக்களம்” திருக்கோவிலிருந்தே சுந்தரர் புறப்பட்டு கைலாசத்தை அடைந்தார் என்பது வரலாறாகையால் சுந்தரர் முன்பாக வெள்ளையானை காணப்படுகிறது. மண்டபத்தில் கவசமிடப்பட்ட கொடிமரமும்- பலிபீடமும் காணப்படுகின்றன. கொடிமரத்தடி விநாயகர் இங்கு“சுந்தரவிநாயகராக” அருள்புரிகிறார். சற்றே பெரிய உருவத்தில் நந்தி ஒன்றுள்ளது.
சிறிய கருவறையில் நேராக மூலவர் தரிசனம்கிடைக்கிறது. மூலவர் “ஸ்ரீபக்தஜனேசுவரர்” லிங்கபாணம் சற்றே உயரமாக –பளபளக்கும் வெள்ளி நாகபாடம் லிங்கபாணத்தின் மேலாக உயர்ந்தபடி ஜொலிக்க அளவான அலங்காரத்துடன் அருள்பாலிக்கிறார். கருவறைச்சுவர் முழுவதும் “வியாயசருமர் ” (இதுவே சண்டேஸ்வரரின் பிறப்புப்பெயர்) வரலாறு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. மாடு மேய்ப்பது - பால்கறப்பது- தந்தையார் மரத்தின் மீதேறி ஒளிந்திருந்து பார்ப்பது திருமஞ்சனம் செய்வது – தந்தையார் பாற்குடத்தை தட்டிவிடுவது – தந்தையின் கால்களை வெட்டுவது- இறைவன் கருணை கூர்ந்து“சண்டீசர்”பதவி கொடுப்பது என வியாயசருமாரின் வரலாற்றின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் செதுக்கப்பட்டுள்ளன.
கோஷ்ட மூர்த்தங்களுள் தென்புறமுள்ள தெட்சணாமூர்த்தியின் திருவுருவம் ரிஷபவாகனத்தின் முன்னால் நின்றபடி, வலது கையை ரிஷபத்தின் மீது ஊன்றி, இடதுகையில் சுவடி ஏந்தியபடி இருப்பது ஏனைய கோயில்களில் இருப்பதை விடவித்தியாசமான அம்சமாக இருந்தது.
உட்பிரகாரத்தில்“நரசிங்கமுனையர்” பூசித்த லிங்கம் சந்நிதியில் உள்ளது. யார்இந்த“ நரசிங்கமுனையர்.
நரசிங்கமுனையர் என்னும் நாடுவாழ் அரசர்கண்டு
பரவருங்காதல்கூரப்பயந்தவர்தம்பால்சென்று
விரவியநண்பினாலே வேண்டினார் பெற்றுத் தங்கள்
அரசிளங்குமரறகேற்ப அன்பினால்மகன்மை கொண்டர்.
-பெரியராணம்:பாடல்இல 151
சடையனாருக்கும் இசைஞானியாருக்கும் மகனாகப்பிறந்த நம்பியாரூரை, அவ்வூரை ஆண்டுவந்த“நரசிங்கமுனையர்”எனும் மன்னன் நட்புரிமையினால் வேண்டிப்பெற்றுக்கொண்டு சென்று தங்களது மகனாக ஏற்று வளர்த்து ஆளாக்கினார். அந்த மன்னரே மேற்குறித்த“நரசிங்கமுனையர்” ஆகும்.
உட்பிரகார தென்சுற்றில் பொல்லாப்பிள்ளையார், சேக்கிழார் வலம்புரிவிநாயகர், சோமஸ்கந்தர், ஆறுமுகர் சந்நிதிகளுடன் கிருதயலிங்கம், சண்டேஸ்வரர், திரோதாயுலிங்கம், பிரம்மாதுவாரபரயுகலிங்கம், சுந்தரர் பூசைசெய்த லிங்கமானகலியுகலிங்கம் ஆகியன உள்ளன.
தென்மேற்கில் கஜலெட்சுமியின் தனிச்சந்நிதியும், பன்னிரண்டு திருக்கரங்களுடான- வள்ளி தெய்வானை சகிதம் ஆறுமுகர்மூர்த்தமும் அற்புதமானவை. வடமேற்கில் நடராஜர்சபையுண்டு. நவக்கிரகசந்நிதியில் நடுவே உள்ள சூரியன் மூலவரைப் பார்த்தபடி உள்ளார். இச்சந்நிதியில் சுக்கிரன் வழிபட்ட“ஸ்ரீபார்க்கலிங்கம்” மூர்த்தத்தை உருத்திராட்ச விதைகளை மாலையாகக் கோர்த்து பந்தலிட்டு அழகுறவைத்துள்ளனர்.
பக்கத்தில் இரண்டு பைரவர் திருமேனிகள் உள்ளன. ஒன்று உருவத்திற் பெரியது. மற்றையது சிறியது. சிறியபைரவ மூர்த்தியின் நாய்வாகனம் மறுமக்கமாக (இடதுபுறம் தலை இருக்கும் விதத்தில்) உள்ளது. வைரவர் சந்நிதானம் அருகே சூரியசந்நிதியுமுண்டு.
“ஸ்ரீமனோன்மணி” அம்பிகையின் சந்நிதிதனியாகக் காணப்படுகிறது. “சுந்நதரநாயகி”, “சுந்தராம்பிகை”என்பன அம்பிகையின் மறுபெயர்களாகும். 12 தூண்கள் கொண்ட முன்மண்டபத்துடன் கூடிய கருவறையில் அம்பாள்நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். நந்தி – பலிபீடம் ஆகியனவும் உள்ளன.
கோவிலுக்கு வெளியே வந்தால், நிறைந்த சிற்பவேலைப்பாடுகளுடனான தேர் ஒன்று தேர்தரிப்பிடத்தில் போதியபராபரிப்பின்றி உள்ளது. தேரில் உள்ள ஒவ்வொரு சிறுசிறுசிற்பங்களும் கொள்ளை அழகுடன் மிளிர்கின்றன. கோவிலுக்குப் பக்கத்திலேயே சுந்தராமடாலயம் உள்ளது. மாடலயத்தின்மையத்தில் உள்ள சுந்தரர் சொரூபம் மிக மிக அழகானது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.