லண்டன் பர்மிங்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மையில், பர்மிங்ஹாம் City Centre இல் இருந்து 5 மைல் தூரத்தில், மேற்கு Midlands பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலாஜி கோவில். ஸ்ரீ நாராயணன் கோவில்களில் ஐரோப்பாவிலேயே மிகப் பெரியது இது. லண்டனில், எம்மவர்கள் கூடுதலாக வாழும் Tooting, Mitcham போன்ற இடங்களிலிருந்து M25, M40 வழியாக 145 மைல் தூரத்தில் உள்ளது ஸ்ரீ பாலாஜி கோவில். வேல்ஸ் கந்தவேல் ஆலயத்திலிருந்து வருபவர்கள் மூன்றரை மணி நேரத்தில் 177 மைல் கடந்தும் ஸ்ரீ பாலாஜியைத் தரிசிக்கலாம்.
இரண்டு ஏக்கர் வரை நிலப்பரப்புள்ள பரந்த பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது கோவில். கோவிலைச் சுற்றி பசுமையான புற்றரை. அடுத்து கோவிலைச் சுற்றிவர அகன்ற தார்வீதி. அதற்கும் வெளியே மீண்டும் புற்றரைப்பகுதி. கிழக்குப் பார்த்த கோவிலின் வலதுபுறம் சீமெந்து மேடையினாலான வாகனத் தரிப்பிடம். அந்த தரிப்பிடம் கூட அடையாளமிடப்பட்டு ஒரு ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. கோவில் பகுதி – வாகன தரிப்பிடம் தவிர்ந்த ஏனைய புற்றரைப் பகுதி முழுவதும் இடையிடையே நிழல் மரங்களை (பெரு விருட்சங்கள் அல்ல ) ஒரு ஒழுங்கில் – நேர்த்தியாக நாட்டியுள்ளார்கள். மரங்கள் குடைபோன்று வளர்ந்து நிழல் பரப்பி நிற்கின்றன.
கோவில் வாசலுக்கு நேராக உள்ள நடைபாதை 5 அடுக்கு கொண்ட ஒரு கோபுரத்தை ஒத்ததான அழகான முகப்பு வாசலில் முடிகிறது. “ முகப்பு வாசல் ” என்பது நமது தூரத்துப் பார்வை. அதனை அண்மித்த பின்னர் தான் “ முகப்பு வாசல் ” என்பது ஒரு “ குருக்கள் குடியிருப்பு என்பதைக் கண்டுகொள்ள முடிந்தது. வெளிப்புறப் பார்வைக்கு ஒரு முழுமையான கோபுரம் போன்ற தோற்றப்பாட்டைக் கொடுத்தாலும், தண்ணீர் இணைப்பு – மின் இணைப்பு – படிவரிசை ஆகியன கொண்ட இந்தக் குடியிருப்பில் பல குருக்கள் குடும்பங்கள் குடியிருக்கின்றனா்.
முகப்பு வாசல் தாண்டி நடைபாதையால் உள்ளே போனால் பரந்த அந்தப் பகுதியின் நடுவே (பல படிகள் மேலே) கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோபுரத்தையும் கோவிலையும் பார்த்து பிரமித்து நிற்கிறோம். நமது இடது கைப்புறமாக ,சுத்தமான நீர்கொண்டு நிரப்பப்பட்டுள்ள நீர்த்தடாகத்தின் நடுவே பாலாஜியின் சயன நிலையில் உள்ள சொரூபம் ஒரு பீடத்தின் மீது நீர் மட்டத்தில் உள்ளது. “ நாணயம் உட்பட எதனையும் நீருள்ளே வீச வேண்டாம் ” என்கிற அறிவிப்புப் பலகை அருகே இருந்தும் கூட தடாகத்து நீரினுள் வீசப்பட்டிருக்கும் நாணயக் குற்றிகள் தெளிந்த அந்நீரிற் துலாம்பரமாகத் தெரிகிறது. அருகே சற்றே தூரத்தில் தென்னிந்திய பாணியினாலான “ திருமண மண்டபம் ” அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
நீர்த்தடாகத்தை அடுத்து உள்ளே கோவிலின் வலது பக்கமும் இடது பக்கமுமாக தனித் தனிக் கோவில்கள் (சிறிய சந்நிதானங்களல்ல) கிழக்கு நோக்கியபடி உள்ளன. வலதுபுற கோவிலுக்கு சரி முன்பாக எட்டடி உயரம் வரையிலுள்ள கொடிமரம் சுத்தமாகச் செப்புக் கவசமிடப்பட்டு பளிச்செனக் காணப்படுகிறது. பரந்த மண்டபத்தினுள்ளே வலது பக்கமாக ஸ்ரீ ஐயப்பனும் அடுத்து ஸ்ரீ துர்க்கையும் உள்ளனா். மண்டபத்தின் நீண்ட பகுதியையும், பின்புறமாகவுள்ள சிறிய பகுதியையும் பெரிய நீல நிறமான திரைச்சீலை பிரிக்கிறது. சில நிமிட நேர காத்திருப்பின் பின் சரியாக ஆறு மணிக்குத் திரை விலக, உள்ளே பெரிய லிங்க வடிவில் பரம்பொருள் காட்சி தருகிறார். அழகான மரவேலைப்பாடமைந்த தனிச் சந்நிதானத்தின் மையத்தில் லிங்கம் உள்ளது. லிங்கத்தின் பிரம்ம பாகம் சதுர வடிவிலும், மேலே ஆவுடையார் பாகம் வட்ட வடிவிலும், அதன் மேலே லிங்க பாகம் சற்று வித்தியாசமாகவும் காணப்பட்டது. வழமைபோன்று உருண்டையான – வழுவழுப்பான அழுத்தமாக இல்லாமல் மேடுபள்ளமாகவும் ஒழுங்கான அமைப்பில்லாமலும் லிங்கபாகம் வித்தியாசமாக இருந்தது. அளவான அலங்காரமும், அமைதியான சூழலும் மனம் லயித்துக் கைசுப்பித் தொழ வைத்தது. மனம் ஒன்றித் தொழுகின்றோம்.
லிங்கத்தை வணங்கிக் கொண்டு விசாலமான சந்நிதானத்தைச் சுற்றிவர, அதனோடு இணைந்தபடி வடபுறமாக நாலடி உயர பீடத்தில் ஒரு சிறிய லிங்கம் காணப்படுகிறது. சிறிய சிவலிங்கம் அருகே, மிக மெலிந்த ஒரு தண்ணீர்க் குழாயும், ஒரு சிறிய செம்பும் காணப்படுகிறது. சிறிய பாத்திரங்களில் கொண்டு வரும் பாலை சிவலிங்கத்திற்கு அபிஷேகித்த பின்னர் அந்தச் சிறிய தண்ணீர் குழாயிலிருந்து தாங்கள் கொண்டுவந்த பாத்திரத்தில் நீரேந்தி இரண்டு மூன்று தடவைகள் அபிஷேகம் செய்கிறார்கள். நாமும் எமது கைகளால் அந்தக் கைங்கரியத்தை நிறைவு செய்து கொண்டோம்.
லிங்கம் உள்ள வலதுபுறக் கோவிலுக்குச் சமாந்தரமாக இடதுபுறமாக சீரடி பாபா சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதிக்கு அருகே உள்ள கட்டிடம் “ யாக மண்டபம் ” எனப்படுகிறது. மண்டபத்தின் நாற்புறமும் திறந்தபடியுள்ள பெரிய வாசல்களும், மையத்தில் பெரிய யாக குண்டமும், சுற்றிவர சிறிய யாக குண்டங்களும் காணப்படுகின்றன. கோவிலில் அடிக்கடி நடைபெறுகின்ற பெரிய – சிறிய யாகங்கள் அனைத்தும் இந்த யாக மண்டபத்திலேயே நடைபெறுவதை அறிய முடிந்தது.
இப்போது நாம் வலமும் இடமுமாயுள்ள கோவில்களுக்கு நடுவேயுள்ள அகன்ற 10 படிக்கட்டுகளில் மேலேறி கோவில் முகப்பினை அண்மிக்கிறோம். வலது புறம், கணபதியின் சந்நிதானமும், இடது புறமாக வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதானமும் மிகத் தூய்மையாக அழகாக உள்ளது. இந்த இருபக்க சந்நிதானங்களின் பின்புறமாகக் கீழிறங்கும் படிக்கட்டுக்கள் அலுவலகத்திற்கும், மடைப்பள்ளிக்கும் வழிகாட்டுகின்றன. இந்த மடைப்பள்ளியிலேதான் ஸ்ரீ பாலாஜி கோவிலின் பிரபல்யமான லட்டு தயாராகிறது. இப்போது நாம் இன்னமும் பத்து படிகள் மேலேறிச் சென்று ஐந்து நிலைக் கோபுர வாசலுக்கு வருகிறோம். நாம் மேலே விபரித்த அமைப்பின் படி கீழ்த்தளத்தில் அலுவலகமும் – மடைப்பள்ளியும், மேற்தளத்தில் கோவிலும் இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
அந்த ஐந்து நிலைக் கோபுரத்தில் பெருமளவு சிற்ப வேலைப்பாடுகள் காணப்படவில்லை. ஆயினும் கோபுரத்தின் நடுவேயுள்ள தடித்த மரத்தினாலான கதவுகள் இரண்டிலும் ஸ்ரீமத் நாராயண மூர்த்தியின் தசாவதாரக் காட்சிகள் அனைத்தும் அழகுகுறச் செதுக்கியுள்ளனா். கோபுர வாசல் கீழ் மட்டத்தில் உள்ள வெள்ளித் தகடு காலை நேர சூரிய ஒளியில் தகதகவென ஜொலிக்கிறது. லக்குமியும் – இருமருங்கும் யானைகளும் செடி கொடிகளுமாக வெள்ளித்தகடு மின்னுகிறது. அதேபோல உட்புற மேல் முகப்பில் திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் சயனக் காட்சியினை அழகுற வெள்ளித் தகட்டில் வடிவமைத்துள்ளார்கள். உயர்ந்த நடு மண்டபப் பகுதியினை நடுவேயுள்ள நான்கு உயர்ந்த தூண்களும், நான்கு சற்று உயரம் குறைந்த தூண்களும் தாங்கி நிற்கின்றன. இந்த எட்டுத் தூண்களும் அறுகோண அமைப்பில் செய்யப்பட்டு, அதற்கு மேலாக அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ள மரப்பட்டங்களில் ஸ்ரீ நாராயணா், ஸ்ரீ ஆஞ்சநேயர், லக்குமி ஆகியோரின் பல்வேறு தோற்றங்கள் உள்ளன. கலைப் பொக்கிஷமாகவுள்ள ஒவ்வொரு தூணின் அழகையும் கண்கொட்டாமல் பார்த்து மெய்மறந்து ரசித்தோம்.
கருவறையின் வாசலில் இருபுறமும் உள்ள வாயில் காப்போர் ஸ்ரீ நாராயணரின் ரூபத்திலேயே உள்ளனா். உள்ளே கருவறையில் சுமார் ஆறடி வரை உயரம் கொண்ட ஸ்ரீ பாலாஜி அருள் பாலிக்கிறார். உயரத்திற்கேற்றபடியான நிறைந்த அலங்காரமும், வரிசைக் கிரமமாக நடைபெற்ற தீபாராதனைகளும் கண்டு மெய்மறந்து நிற்கிறோம். மனம் லயித்துக் கைகூப்பித் தொழுத பின்னர் அர்ச்சனையை நிறைவு செய்து கொண்டு பிரகாரத்தினை வலம் வருகிறோம். பிரகாரத்தின் தென்புற ஆரம்பத்திலேயே ஒரு தட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கற்கண்டினை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள அருகே நின்றிருந்த அந்தணர் துளசித் தீர்த்தம் தருகிறார். இன்னொரு அரச்சகர் “ சடாரி ” வைக்கிறார். விஷ்ணு கோவில்களில் உள்ள வழமையான நடைமுறை இது. தலைமீது வைத்து ஆசீர்வதிக்கப்படும் முடி போன்றதுவே “சடாரி” எனப்படுகிறது.
கிழக்குப் புறம் தவிர்ந்த ஏனைய மூன்று உட்பட சுவர்களிலும் மொத்தம் 12 இடங்களில் 10’ நீளமும் – 5 அடி உயரமும் கொண்ட மாடங்கள் காணப்படுகின்றன. உட்புறம் எதுவுமில்லாமல் வெற்றாகவே காணப்பட்ட இந்த மாடங்களின் விளிம்புகள் சுத்தமான தேக்கு மரங்களின் கடைச்சல் வேலைப்பாடுகளுடன் நேர்த்தியாகக் காணப்பட்டன. விசேடமான திருவிழாக் காலங்களில், வெண்பளிங்கு ரூபத்தினாலான ஸ்ரீமத் நாராயண மூர்த்தியின் பல்வேறு அவதாரங்களை முழுமையான அலங்காரத்துடன் (இந்த மாடங்களில் வணக்கத்திற்காக வைக்கப்படுமென அர்ச்சகர்கள் கூறினார்கள்.
ஸ்ரீ லக்சுமியின் சந்நிதானம் தனிக்கோவிலாக தென்மேற்கு மூலையில் காணப்படுகிறது. நிறைவான அலங்கரிப்புடன் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீ லக்சுமி அருள் பாலிக்கிறார். சந்நிதியைச் சுற்றிய வெளிச்சுவர் மாடங்களில் ஸ்ரீ லக்சுமியின் பல்வேறு தோற்றங்கள் காணப்படுகின்றது. வடமேற்கு மூலையில் தனிச்சந்நிதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் உள்ளார். சுவர் மாடங்கள் மூன்றிலும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூவகைத் தோற்றம் காணப்படுகிறது.
வழமையான யாகசாலை மூலையில் ஸ்ரீ சத்திய நாராயண பகவானும், கோபுர வாசலின் மறுபக்கம் (தென் கிழக்கு மூலையில் ) ஸ்ரீ சத்திய நாராயண பகவானும், கோபுர வாசலின் மறுபக்கம் (தென் கிழக்கு மூலையில்) ஸ்ரீ பாலாஜி, ஸ்ரீதேவி – பூதேவி சமேதராகவும் வீற்றிருக்கின்றனா். வெண் பளிங்கினால் ஆக்கப்பட்டுள்ள இந்தச் சொரூபங்கள் மணிகளும் முத்துக்களும் கொண்ட பட்டாடைகளின் அலங்கரிப்பில் ஜொலிக்கின்றன.
வட இந்தியர்களின் பூரணமான நிர்வாகத்தில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோவிலை தரிசிப்பதற்கும் வட இந்தியாவிலிருந்தே கூடுதலான பக்தர்கள் வருகின்றார்கள். இந்தக் கோவிலின் அழகும் – நேர்த்தியும் நம்மவர்களையும் பெருமளவில் கவர்ந்திழுப்பதால் புலம்பெயர் தமிழ் மக்கள் பலரும் வேல்ஸ் முருகனைத் தரிசிக்கச் செல்லும் வேளை ஸ்ரீ பாலாஜியின் தரிசனம் கண்டே திரும்புகிறார்கள். அற்புதமான ஒரு கோவிலைப் பார்த்த மகிழ்வோடும், ஸ்ரீ பாலாஜியின் தரிசனமும் கிடைக்கப்பெற்ற மனநிறைவோடும் நாமும் வீடு திரும்புகிறோம்.
நன்றி: ஞானச்சுடர் பங்குனி 2015
அடுத்த வாரம் : “ ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயம் ” (லண்டன்) லண்டன் ஈலிங்கில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகனக துர்க்கை அம்மன் ஆலயம் நம்மவர்களின் பூரணமான நிர்வாகத்தில் பல்வேறு அறப்பணிகளையும் ஆற்றி வருகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.