தமிழகத் திருக்கோயில் வரிசை: மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோவில்-01- வல்வையூர் அப்பாண்ணா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/12/2016 (வெள்ளிக்கிழமை)
பாண்டி நாட்டின் பாடல் பெற்ற திருத்தலங்கள் பதினான்கில் தலையாயது மதுரைத் திருக்கோவில். கபிலர், பரணர், நக்கீரர் முதலிய தமிழ்ப்புலவர்கள் வாழ்ந்த பதி இது.
புலவர்களுடன் தானும் ஒருவராயிருந்து , இறைவன் தமிழ்ச்சங்கத்தில் தமிழாய்ந்த தனிச்சிறப்புடைய தலம். திருஞான சம்பந்தர் அனல் – புனல் வாதங்களை நிகழ்த்தி சைவத்தைத் தழைக்கச் செய்த தண்பதி. பஞ்ச சபைகளுள் “ வெள்ளியம்பலம் ” எனப் போற்றப்படுகின்ற இடம் மதுரை. இராஜசேகரபாண்டியனின் விருப்பத்திற்கமைய இறைவன் கால் மாறி ஆடிய திருத்தலமும் இதுவே.
ஞானசம்பந்தர் – அப்பர் பாடல் பெற்ற திருத்தலம்.
இறைவியே தடாதகையாக அரசாண்ட திருநகரம்.
இறைவனின் அற்புதச் செயல்கள் 64 திருவிளையாடல்களும் நிகழ்ந்தமைய இடமாகத் திகழ்ந்த அற்புதத் திருக்கோவில்.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே அரை மைல் தூரத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. மதுரை மீனாட்சி–சுந்தரேஸ்வரர் திருக்கோவில். மதுரை மாநகரின் மையத்தில் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டபரந்த இடத்தில் கோயில் உள்ளது. சிவராசதானி, பூலோககைலாசம், கடம்பவனம், நான்மாடக்கூடல் (திருவிளையாடற் புராணம்: நான்மாடக் கூடலான படலம்: 19) என்பன மதுரைத் கோவிலின் மறுபெயர்களாகும்.
அங்கயற் கண்ணி அம்மை பண்டியனின் திருமகளாக “ தடாதகை ” யாக வளர்ந்து (தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப்படலம்: 04 ) சோமசுந்தரராக வந்த சிவபெருமானைத் திருமணஞ் செய்து (திருமணப்படலம்: 05 ) அரசு புரிந்த பழம்பதியாக விளங்கியது இம்மதுரை.
வம்மிசசேகரபாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில், மதுரையின் எல்லையைக் கண்டுகொள்ள முடியாமல் சோமசுந்தரக் கடவுளை வேண்டுதல் செய்தான். இறைவன் ஆணைப்படி சிவனுக்கு அணிகலனாக இருந்த பாம்பு வளர்ந்து வட்ட வடிவமாகி தன் வாலை வாயினால் கௌவி மதுரையின் பழைய எல்லையைப் பாண்டியனுக்குக் காட்டியதால் இந்தத் திருத்தலத்திற்கு “ ஆலவாய் ” (திருவாலவாயான படலம்: 49 ) எனும் பெயர் உண்டாயிற்று. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் மதுரைக் கோவிலை “கூடல் ஆலவாய் ” எனத் தனது தேவாரப் பதிகத்தில் வர்ணித்திருக்கிறார்.
திருவாலவாய் எனும் திருத்தலத்திற்கு இணையான ஸ்தலமும், இத்தலத்திலுள்ள பொற்றாமரைக் குளம் போன்ற ஒரு தீர்த்தமும், சுந்தரேஸ்வரப்பெருமான் போன்ற ஒரு மூர்த்தியும் எங்குமே இல்லை என்று புராணங்கள் புகழ்ந்து துரைக்கின்றன.
மதுரைக் கோயிலானது ஆரம்பகாலத்தில் மரக்கட்டைகளால் கட்டப்பட்டு, பின்னர் செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையினாலும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாற்றம் கி.பி 7ம் நூற்றாண்டளவில் நடந்திருக்கிறது. இதே காலப் பகுதியிற்றான் பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்திலும், அதன் சுற்றுப் புறங்களிலும் கற்களால் கோயில் கட்ட ஆரம்பித்தனர். ஏறக்குறைய இதே காலத்தில் மூலஸ்தானத்தோடு கூடிய முதற் பிரகாரம் கட்டி முடிந்திருக்கிறது. இந்தப் பந்திக்கான குறிப்புக்கள் ஆலய வரலாற்றுக் குறிப்பிலிருந்து பெறப்பட்டவையாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சந்நிதி வாசலினூடாகவே உள்ளே நுழைய வேண்டும். இந்த நுழைவு வாசல் “ அஷ்டசத்தி மண்டபம் ” எனப்படுகின்ற எட்டு சக்திகளின் மண்டபத்தை அடைகிறது. கௌமாரி – ரௌமாரி – வைணவி – மஹாலக்சுமி ஆகியவை இடது பக்க நான்கு தூண்களிலும், யக்ஞரூபணி – சியாமனை – மஹேஸ்வரி – மனோன்மணி ஆகியவை வலப் புற நான்கு தூண்களிலுமாக பக்கத்திற்கு நான்காக எட்டு சக்திகளும் அழகிய சிற்பங்களாக இடம்பெற்றுள்ளார்கள். இவைகள் தவிர துவாரபாலகர்கள் இருவரும், பெரிய உருவச்சிலைகளாக கணபதி – முருகன் உருவச்சிலைகளும் உள்ளன. இம்மண்டபத்தில் அழகிய வர்ண ஓவியங்கள் யாவும் உண்டு.
அஷ்டசத்தி மண்டபத்தை அடுத்து மீனாட்சி நாயக்கர் மண்டபம் வருகிறது . இம் மண்டபத்தை தாங்கி நிற்கின்ற 110 தூண்களும் ஒரே மாதிரியான யாழின் உருவம் தாங்கியிருப்பதுடன் தூண்களின் அடிப்பாகங்கள் அழகான – நுட்பமான சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்டிருக்கிறது. இம்மண்டபத்தின் மேற்காக 1008 எண்ணை விளக்குகளைக் கொண்ட 25 அடி உயர திருவாசி வளைவு காட்சி தருகிறது. மருது பாண்டியர்களினால் அமைக்கப்பட்ட இத்திருவாசி, தற்போது அவர்களின் பரம்பரையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவாசியின் மேல்விதானத்தில் 12 ராசிகளின் அமைப்பு சித்தரிக்கபட்டுள்ளதுடன், ஏனைய பக்கங்கள் அனைத்தையும் வண்ணமயமான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. அடுத்துள்ள “இருட்டு மண்டபம் ” எனப்படுகின்ற “ முதலிப் பிள்ளை மண்டபம் ” தாண்டி வழி நடந்தால் “ பொற்றாமரைக் குளத்தினை ” வந்தடைகிறோம்.
நேர்த்தியான படிக்கட்டுக்களுடன் கூடிய சதுரவடிவமான பொற்றாமரைக் குளத்தின் வடக்குப் பக்க தூண்களில் சங்கப்புலவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருக்குறள் நூலை இக்குளத்தில் சங்கப்பலகையில் இட்டு சங்கப்புலவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு வரலாறு தெரிவிக்கிறது. பொற்றாமரைக் குளத்தின் தென் புறச்சுவரில் சலவைக் கற்களில் 1330 குறள்களும் தெளிவான எழுத்தில் அழகுற எழுதப்பட்டுள்ளது. இக் குளம் கோயில் தோன்றிய காலத்திற்கும் முற்பட்டது என புராண வரலாறு கூறுகிறது. தடாகத்தைச் சுற்றிய தூண் மண்டபங்களிலிருந்து நான்கு கோபுரங்களையும் பார்க்கலாம்.
“ நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே ” எனச் சிவனோடு வாது செய்த நக்கீரர், இறைவனின் நெற்றிக் கண்ணின் வெம்மை தாங்காமல் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து வருந்திய போது, தன் திருக்கரங்களை நீட்டி நக்கீரனைக் கரையேற்றியதுமான திருவிளையாடல் (கீரனைக் கரையேற்றிய படலம்: 53) இதே பொற்றாமரைக் குளத்திலேயே நடந்தது.
பொற்றாமரைத் தடாகத்தின் மேற்கு மண்டபத்தில் கருங்கல்லில் கட்டப்பட்டுள்ள சிறிய மண்டபம் “ ஊஞ்சல் மண்டபம் ” எனப்படுகிறது. இம்மண்டபத்தின் மையத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஊஞ்சலில் ஒவ்வொரு வெள்ளியும் மீனாட்சி அம்பாளையும் சுந்தரேஸ்வரரையும் அமர்த்தி அழகு பார்ப்பர் ஊஞ்சலைச் சுற்றிலும் கருங்கற் சுவர்களுக்கு மேலாகப் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளில் பட்டுத்தெறிக்கும் மீனாட்சி – சுந்தரேஸ்வரரின் ஊஞ்சலாட்டம் பார்ப்போரைப் பரவசப்படுத்தும்.
ஊஞ்சல் மண்டபத்தின் எதிர்ப்புறத்தில் இணந்த மண்டபத்தின் மேல்விதானத்தில் தீட்டப்பட்டுள்ள கடவுளர்களின் கண் கவர் ஓவியங்கள் அற்புதமானவை. இந்த அழகு மிக ஓவியங்களின் மையத்தில் (மேல் விதானத்தில் ) அளவான உருவமைப்பில் ஒரு சிவலிங்கம் வரையப்பட்டுள்ளது. கீறப்பட்டுள்ள சிவலிங்கத்தின் லிங்கபாணத்தின் கீழுள்ள ஆவுடையார் பாணத்தின் கோமயம் போன்ற பகுதி –நாம் எத்திசையில் நின்று நோக்கினாலும் – நம்மை நோக்கிய படி இருப்பது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. ஓவியனின் கைவண்ணம் வியப்பில் ஆழ்த்துகிறது.
ஊஞ்சல் மண்டபத்தை அடுத்திருப்பது “ கிளிக் கூண்டு மண்டபம் ” ஆகும். ஸ்ரீ மீனட்சி அம்பாளின் விருப்பப் பறவையான கிளிகளைக் கூண்டில் அடைத்து மண்டபத்தின் மேற்குக் கரையில் வைத்திருந்தார்களாம். அதனாலேயே “ கிளிக் கூண்டு மண்டபம் ” எனும் காரணப் பெயர் கொண்டு இம் மண்டபம் அழைக்கப்பட்டது. சமீப காலத்தில் இந்தக் கூண்டு அகற்றப்பட்டு விட்டது. அந்த மண்டப விதானம் முழுவதும் தெய்வங்களின் பல்வேறு தோற்றங்களும் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
கிளிக் கூண்டு மண்டபத்தின் மேற்கு வாசல் வழியாக மீனாட்சி அம்மையின் கர்ப்பக் கிரகத்தினுள் நுழைய முடிகிறது. அதன் நுழைவு வாசலில் உள்ள மூன்று அடுக்குக் கோபுரம் தாண்டிச் சென்றால் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ள கொடிமரத்தைப் பார்க்கின்றோம். இந்த வெளிப் பிரகாரத்தின் மேற்குக் கோடியில் ஒரு“ கொலு மண்டபம் ” உள்ளது. நவராத்திரி நாளின் ஒன்பது நாட்களிலும் மீனாட்சி அம்மை கொலுவிலிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மண்டபம் இந்தக் “ கொலு மண்டபம்” ஆகும்.
இந்த மண்டபத்தின் வட கிழக்கு மூலையில் “ கூடல் குமரன் கோயில்” உள்ளது. அருணகிரி நாதரால் இயற்றப்பட்ட திருப்புகழ்- சந்நிதியின் சுற்றுச் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளன. அம்பாள் கோவிலின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி வந்து உட்பிரகாரத்தினுள் நுழைகிறோம்.
உட் பிரகாரச் சுவர் முழுவதும் ஸ்ரீ குமரகுருபரால் பாடப்பெற்ற “ மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ்” பாடல்கள் சலவைக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. மகா மண்டபத்தின் மேற்காக கிழக்குப் பார்த்த படி கர்ப்பக் கிரகத்தில் ஸ்ரீ மீனாட்சியம்மை அழகு சொரூபியாக அருள் பாலிக்கிறார். அம்பிகை மீனாட்சிகையில் கிளியுடன் செண்டு ஏந்தி – நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். இந்தத் திவ்விய தரிசனமும் – அதனாற் கிடைக்கப் பெறும் மனநிறைவும் அம்பிகையை நேரில் தரிசித்தவர்களுக்கு அனுபவம் புரியும். சந்நிதி இரண்டு பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாம் பிரகாரத்தில் தங்கக் கொடி மரம், தில்லைநாயக்கர் மண்டபம் ஆகியவை உள்ளன. இந்தப் பிரகாரத்தில் உள்ள ஆறு கால் பீடத்திலே தான் குமரகுருபாரின் “ மீனாட்சி பிள்ளைத் தமிழ் ” அரங்கேற்றப்பட்டது. இந்த வழியாக மகா மண்டபத்தை அடையலாம். இதுவே முதற் பிரகாரம். இங்கே தான் பள்ளியறையும் உள்ளது.
தொடரும்……..
நன்றி: 2016 - தை. ஞானச்சுடர்
அடுத்தவாரமும்… மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தொடரும்..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.