Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

வல்வையின் இணைபிரியாத அங்கம் - அதிரூபசிங்கம் மாஸ்ரர் பற்றிய தொகுப்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2017 (வியாழக்கிழமை)
ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், நாடகக் கலைஞர், மல்யுத்த வீர்ர், சமூக சேவையாளர் என பன்முகங்களைக் கொண்டவர் திரு.வ.ஆ.ஆதிரூபசிங்கம் அவர்கள். 
 
வல்வெட்டித்துறை தவிர்ந்து வல்வெட்டிதுறையில் சூழவுள்ள தொண்டைமானாறு உட்பட்ட இதர பகுதிகளிலும் அனைவராலும் அறியப்பட்டிருந்தார்.
 
இலங்கை அரச போக்குவரத்து சபையில் நடாத்துனராக ஆரம்பித்து பிரதி தலமை அதிகாரியாக பருத்தித்துறை போக்குவரத்து சபையில் கடமையாற்றி 1990 இல் இளைப்பாறினார்.
 
வெளிவாரியாக தமிழ் மற்றும் இந்து நாகரீகத்தில் பட்டம் பெற்ற இவர் வல்வையில் இரவுப் பாடசாலை உருவாக்கத்தின் ஒருவர் ஆவார். பின்னர் வல்வை கல்வி மன்றத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்தார்.
 
சுமார் 40 ஆண்டுகளாக ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்ததால் 'மாஸ்டர்' என பொதுவாக அழைக்கப்பட்டு வந்த அதிரூபசிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவைர் பிரபாகரன், மாத்தையா, கிட்டு, குமரப்பா, பண்டிதர், சங்கர்,  சூசை மற்றும் தமிழீழ விடுதலை இயக்க ஸ்தாபகர்கள் குட்டிமணி, தங்கத்துரை, சிவாஜிலிங்கம் போன்ற அனேகரின் ஆசிரியாகராக இருந்ததுள்ளதுடன் இவர்களால் பெரிதும் நேசிக்கபட்டு வந்திருந்தார்.
 
அலை ஒளி கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியர் என ஆரம்பித்து அண்மையில் ‘ஆறுமுகபாலன் இவன் ஆற்றங்கரை வேலன்”  என புத்தகம் வெளியீட்டு எழுத்துத் துறையில் மிக நீண்ட பாதையைக் கொண்டிருந்தார்.
 
வல்வை முன்னோடிகள் என்னும் பெயரில் 70 களில் நாடக குழு பல நாடகங்களில் இயக்கி நடித்திருந்தார். இவர் நடைத்த நாடங்களில்  "படையா கொடையா", "அந்தக் குழந்தை", "மகனே கண்" போன்றவை நாடகங்கள் பெரிதும் பேசப்பட்ட நாடகங்களில் சிலவாகும்.
 
மிகச் சிறந்த அறிவிப்பாளராக விளங்கிய இவர், கின்னஸ் புகழ் வீரர் ஆழிக்குமாரன் ஆனந்தன் வல்வை ரேவடி கடற்கரையில் தனது பாக்கு நீரிணை நீச்சல் பயணத்தை முடித்து திரும்பிய போது எடுக்கப்பட விழாவில் மேற்கொண்ட சிறந்த அறிவிப்பிற்காக, அடுத்த தினம் வெளிவந்த தினசரி பத்திரிக்கையில் சிறப்பாக பாராட்டப் பட்டிருந்தார்.
 
96 இன் நடுப்பகுதியில் வன்னிக்கு இடம்பெயர்ந்த அமரர் அதிரூபசிங்கம் அவர்கள், விஸ்வமடு பாரதி வித்தியாலத்தில் சில ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றியிருந்தார்.
 
மிகச் சிறந்த பேச்சாளரான இவர் கொழும்பு உட்பட பல இடங்களில் மேடைப் பேச்சுகளில் மற்றும் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டுள்ளார்.
 
வல்வையில் முதன் முதலில் உருவான வல்வை ரேவடி விளையாட்டுக் கழகம் உருவாக்கத்திற்கு காரணமாவர்களில் ஒருவரான இவர் அக்கழகத்தின் தலைவராக மற்றும் உறுப்பினராக சுமார் 50 ஆண்டுகளாக இருந்த வந்திருந்தார்.
 
சிறந்த மல்யுத்த வீரரான அதிரூபசிங்கம் அவர்கள், கம்பாட்டம் மற்றும் ஆசனங்கள் சிலவற்றையும் ஓரளவு பயின்றிருந்தார்.
 
வல்வை சன சமூக சேவா நிலையத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர் என நீண்ட காலம் சேவையாற்றினார்.
 
70 களின் நடுப் பகுதி வரை தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து தீவிர ஆர்சியலில் ஈடுபட்டவர். பருத்தித்துறை தொகுதியில் பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.துரைரத்தினம் அவரின் வெற்றிக்காகவும் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காகவும் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இராமலிங்கம், அக்கட்சியின் சார்பில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்வும் பேச்சாளராக பணியாற்றினார்.
 
70 களின் பின்னர் வல்வையில் இளைஞர்கள் மூலம் விடுதலை இயங்கங்கள் வளர – குறித்த இளைஞர்கள் அனைவருமே இவரின் மாணாக்கர்கள் இருந்ததாலும், தமிழ் மற்றும் அரசியல் சார் அறிவிற்காக  அதிரூபசிங்கம் அவர்களுடன் நெருங்கிப் பழக – அரசியலில் இருந்து ஒதுங்கினார்
 
வல்வையில் பல பொறுப்புக்கைளை வகித்தவர் அமரர் அதிரூபசிங்கம் அவர்கள், இறுதியாக வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை தக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அன்னை தெரேசா முன்பள்ளியின் தலைவராக விளங்கினார்.
 
கால ஓட்டத்திற்கேற்ப வல்வெட்டித்துறையை இணையதள உலகில் நிறுத்தும் வண்ணம் வல்வெட்டித்துறை.ஒஆர்ஜி இணையதளத்தை கடந்த 5 வருடம் முன்னர் ஆரம்பித்தவர். ஊர்த் தளங்களில் முன்னோடியாக  விளங்கும் இந்தத்  இந்த இணையதளத்தில் வல்வெட்டித்துறை பற்றி எழுதப்பட்டுள்ள  பெரும்பாலான விடயங்கள் அதிரூபசிங்கம் அவர்களாலேயே வரையப்பட்டவை ஆகும்.
 
ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி 'வல்வெட்டித்துறை' (About Valvettithurai) என்னும் தேடலுக்கு நேர்த்தியாகக் கிடைக்கப்பெறும் பந்தி இவராலேயே வரையப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வல்வையின் அடையாளமாக விளங்கும் - வல்வையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த Florence C Robinson என அழைக்கப்பட்ட 'அன்னபூரணி' கப்பலின் மாதிரி வடிவத்தைச் (Model ship) செய்வித்து அதனை வல்வை சனசமூக நிலையத்தில் திரைநீக்கம் செய்து நிரந்தரமாக காட்சிப்படுத்தியவர் அமரர் அதிரூபசிங்கம் அவர்களே ஆவார்.   
 
தொண்டைமனாற்றில்
 
வல்வெட்டித்துறை தவிர்ந்து தொண்டைமனாற்றிலும் மிகவும் பிரபல்யமாக விளங்கிய இவர் 70 களில் தொண்டைமனாற்றில் வாசிகசாலை ஒன்றை ஒருவாக்கி அதற்கு பொன் ஒளி எனப் பெயரும் சூட்டி இருந்தார்.
 
செல்வச்சந்நிதி முருகன் கோயிலின் மிக மூத்த பூத் தொண்டராக விளங்கிய இவர் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக இத் தொண்டில் ஈடுபட்டு வந்திருந்ததுடன் கோயில் மற்றும் கோயில் சார்ந்தவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்தவராக விளங்கியிருந்தார்.
 
தொண்டைமானாறு சந்தியிலிருந்து ஏரி வழி செல்வச்சந்நிதி ஆலயத்தை தெற்குப் பக்கம் வரையுள்ள பொன்னொளி சனசமூக நிலையம் வரை - அடியார்களுக்கும் நிழல் கொடுக்கும் நோக்கில் - மிக நீண்ட கால நோக்கில் - பயன்தரு மரங்கள் பலவற்றை நாட்டி தொடர்ந்து பராமரித்து வந்தார். 
 
பாறைகள் கொண்ட குறித்த இந்தப் பகுதியில் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் பெரும் பொருட்செலவிலேயே குறித்த இந்த மரங்கள் நாட்டப்பட்டு பராமரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 
 
தனது 78 ஆவது வயதில் கடந்த 06.07.17 அன்று இயற்கை எய்திய அமரர் அதிரூபசிங்கம் அவர்களுக்கு மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் கப்டன்களாக உள்ளனர். அமரர் அதிரூபசிங்கம் அவர்களின் தந்தையார் 2 சிறிய பாய்மரக் கப்பல்களுக்க்குச் சொந்தக்காரராக இருந்ததுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘களப்பலியில் முதற்புலி” - சத்தியநாதன் பற்றிய நூலை எழுதியவர் அதிரூபசிங்கம் - 

நேற்று மரணமான வல்வையின் பிரபல எழுத்தாளர் திரு ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 50 வருடங்களில் எழுத்துலகில் தனக்கென ஒரு தடம் பதித்தவர் ஆவார். இந்த இணையதளத்தின் ஆஸ்தான எழுத்தாளராக இருந்து வந்தார்.
 
நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை பெற்ற இவரே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதாலாவது சாவைத் தேடிக் கொண்ட கம்பர்மலை வல்வெட்டிதுறையைச் சேர்ந்த சத்தியநாதன் (சங்கர்) பற்றிய “களப்பலியில் முதற்புலி” என்னும் நூலை வரைந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து உயிர் நீத்த உறுப்பினருக்கு என விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது நூல் இது எனவும் கூறப்படுகின்றது.
 
இது தவிர இதர பல ஆக்கங்களையும் 80 – 90 காலப் பகுதியில், இவரின் மாணாக்கர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இவர் எழுதியுள்ளதாகக் கூறப் பட்ட போதும் இவற்றை உறுதிப்படுத்தமுடியவில்லை.
 
முதலாவது அறிவிப்பாளர், முகாம்களுக்கு தமிழ் பெயர் சூட்டியவர் அதிரூபசிங்கம் மாஸ்டர்
 
திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் மிகச் சிறந்த அறிவிப்பாளர். தமிழில் சிறந்த புலமை பெற்றவர். 

80 களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகளால் யாழின் வடமராட்சிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஒலி மற்றும் ஒளி பரப்புச் சேவையில் முதலாவதாக அறிவிப்பினை மேற்கொண்டவர் அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் எனத் தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன் இதே காலப் பகுதியில் வடமராட்சியில் இயங்கிய விடுதலைப் புலிகளின் முகாம்கள் “கலிபோர்னியா”, “சான்பிரான்சிஸ்கோ” என ஆங்கிலப் பெயர்களிலேயே விடுதலைப்புலிகளால் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது.

இவ்வாறு முகாம்களுக்கு வழங்கப்பட ஆங்கிலப் பெயர்களுக்கு மாற்றக காரணத்துடன் கூடிய தமிழ் பெயர்கள் அமரர் அதிரூபசிங்கம் அவர்களாலேயே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வல்வெட்டியில் அமைந்திருந்த முகாமுக்கு “விடிவெள்ளி” (வல்வெட்டிப் பகுதியில் இருந்து  சூரிய உதயத்தை பார்க்க முடியாது,  நட்சத்திரங்களையே  பார்க்க முடியும்), தொண்டைமனாறில் அமைந்திருந்த முகாமுக்கு “வைகறை” (சூரிய உதயம் தெரிவதால்), நெல்லியடில் அமைந்திருந்த முகாமுக்கு “அதிரடி” போன்றவை அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் வழங்கிய பெயர்களில் சில என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னரே ஏனைய பகுதிகளுக்கும் தமிழ் பெயர்கள் மாற்றம் வியப்பித்தது எனவும் மேலும் கூறப்படுகின்றது.

மேலும் இலங்கை இராணுவத்தால் 87 இல் யாழ் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட "Operation Libration" இராணுவ நடவடிக்கைக்கு பின்னாளில் "விடுதலை விடுவிப்பு" எனப் பெயர் சூட்டியவரும் இவரே எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் (நடுவில் இருப்பவர்) 4 ஆவது உலகத் தமிழராச்சி மாநாட்டிற்கு அன்னபூரணி கப்பலில் அறிவிப்பாளராக சென்ற போது

பிரபாகரனால் மாஸ்டர் என அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் அதிரூபசிங்கம், 87 இல் வல்வை வந்த போதும் இவரையே அழைத்திருந்தார்

வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 60 களில் வல்வையில் இரவுப் பாடசாலை ஒன்றை ஸ்தாபித்தது அதில் பல ஆண்டுகள் கல்வி போதித்ததில் ஒருவர் ஆவார்.

குறித்த இந்த இரவுப் பாடசாலையில் வல்வை மற்றும் இதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சூழ்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வைத்தியர்கள், பொறியியலாளர்கள், உயர் அரச அதிகாரிகள் என  பல்வேறு துறைகளில் வாகை சூடினர். இந்தப் பாடசாலையில் பிரபாகரன் அவர்களும் கல்வி பயின்றதாக கூறப்படுகின்றது.
 
இந்த வகையிலேயே அமரர் அதிரூபசிங்கம் அவர்களை மாஸ்டர் என அழைத்திருந்த பிரபாகரன் அவர்கள், பின்னைய நாட்களில் சில தடவைகளில் (இவரிடம் உட்பட) இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய பிராபகரன் அவர்கள் “தான் வேணுகோபால் மாஸ்டர் மற்றும் அதிரூபசிங்கம் மாஸ்டர் ஆகிய இருவரையும் மட்டுமே மாஸ்டர்” என அழைப்பதாக தெரிவித்திருந்தார் என கூறப்படுகின்றது.
 
87 இல் திலீபனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து, யாழின் பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் பொது மக்களால் தொடர, வல்வையிலும் முன்னாள் வல்வை நகரசபை உறுப்பினர் திரு.கருணாநந்தராசா உட்பட்ட இருவர் வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள வல்வை சனசமூக சேவா நிலையத்தில் உண்ணா விரதத்தை மேற்கொண்டனர்.
 
உண்ணா விரதத்தில் ஈடுபட்ட இருவரையும் மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக பிரபாகரன் அவர்கள் 4 ஆம் நாள் இரவு சுமார் 9 மணியளவில் வந்திருந்தார்.
 
இந்தச் சந்திப்பின் போது அமரர் அதிரூபசிங்கம் அவர்களை பிரபாகரன் அவர்கள் அழைத்திருந்ததாகவும், உண்ணா விரத்ததில் ஈடுபட்டவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர், பிரபாகரன் அவர்கள் அமரர் அதிரூபசிங்கம் அவர்களுடனேயே சுமார் ½ மணி நேரம் கலந்துரையாடியிருந்தார் எனக் கூறப்படுகின்றது
 
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் ஒரு சில மக்களே நின்றிருந்த போதும், பிரபாகரன் அவர்கள் வந்திருந்த செய்தி கேட்டு ஏராளமானோர் இறுதி நேரத்தில் குழுமினர் எனவும் இந்த நிகழ்வில் பிரபாகரன் அவர்களுடனுன் சூசை மற்றும் (கோல்சர்) பாபு உட்பட்ட ஆயுதம் அற்ற மெய்ப் பாதுகாவலர் சிலர் வந்திருந்ததாகவும் உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தெரிவித்திருந்தார்.
 

இந்திய இராணுவ போர் சூழலிலும் வன்னியில் தமிழ், இலக்கியம் கற்பித்தவர்

அதிரூபசிங்கம் அவர்கள், 88 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில் வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மற்றும் இலக்கியம் கற்பித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
 
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய பிரதித் தலைவர் மாத்தையா அவர்களின் வேண்டுகளுக்கு இணங்க வன்னி சென்றிருந்த இவர், மாத்தையாவின் கீழிருந்த உறுப்பினர்களுக்கே சில காலம் தமிழ் மற்றும் இலக்கியம் கற்பித்திருந்தார்.
 
மாத்தையா என அழைக்கப்பட்ட திரு,கோபாலசாமி மகேந்திரராசா அவர்களும், அமரர் அதிரூபசிங்கம் அவர்களின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இறுதி நிமிடம் வரை எழுத்துக்களை வரைந்தவர்
 
நேற்று மரணமான வல்வையின் பிரபல எழுத்தாளர் திரு ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் கடந்த 50 வருடங்களில் எழுத்துலகில், இந்த இணையதளத்தில் உட்பட, தனக்கென ஒரு தடம் பதித்தவர் ஆவார்.
 
நொடிப் பொழுதில் கவிதை மற்றும் கட்டுரைகளை வரைவதில் புலமை பெற்ற இவர் தனது இறுதி நிமிடம் வரை - வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லும் வரை – எழுத்துக்களை வரைந்துள்ளார்.
 
 
இந்த இணைய தளத்தில் வெளியிடுவதற்காக திரு.அதிரூபசிங்கம் அவர்கள் பல்வேறு கோணகளில் வல்வெட்டித்துறை மற்றும் தொண்டைமானாறு பற்றி வரைந்துள்ள "வல்வெட்டிதுறையும் நானும், மற்றும் தொண்டைமானாறும் நானும் ஆகிய   ஆக்கங்கள் கால ஓட்டத்தில் பதிவாகும்.
 
நாடகக்கலை எழுத்துக்கலை கட்டுரை கவிதை இவற்றுள் எனது ஈடுபாடு 

அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் ஒரு சிறந்த பல்துறைக் கலைஞர் ஆவார். அதிரூபசிங்கம் அவர்கள் தான் அமரத்துவம் அடைவதற்கு சில நாட்கள் முன்பு, தனது நாட குறிப்பில் தான் எழுதி, இயக்கி, நடித்த சில  நாடகங்களின் சில விவரங்களை "நாடகக்கலை எழுத்துக்கலை கட்டுரை கவிதை இவற்றுள் எனது ஈடுபாடு"  என்னும் தலைப்பில் எழுதியுள்ளார்.

இவற்றுள் பங்கு கொண்ட நாடகங்கள் பற்றி அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் எழுதிய விவரங்கள் அவ்வாறே கீழே தரப்படுகின்றது. 

 

நாடகங்கள் 

 

1. மகனே ! ..... கண் ......! (காசியப்பன் வரலாறு)

வல்வை உதயசூரியன் கழக நாடகப் போட்டியில்  1 வது இடம் 

 

2. "அந்தக் குழந்தை

வல்வை உதயசூரியன் கழக நாடகப் போட்டியில்  2 ஆம் இடம் 

(கொழும்பு இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்திலும் மேடையேறியது)

 

3."சங்கிலியன்" சிவன் இளைஞர் நாடக மன்றம் 

நாடகப்போட்டியில் 1 ஆம் இடம்

70 களில் அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 

 

4."கண்ணீர்த்துளி"

தொண்டைமானாறு விளையாட்டுக்கழக நாடக மன்றத்தில் 2 முறை மேடையேறியது 

 

5. "ஈழத்துவீரன்"

வல்வெட்டி சிவகணேச நாடக மன்றம் 

 

6."திருவிளையாடல்" நகைச்சுவை நாடகம் 

வல்வை முன்னோடிகள் நாடக மன்றம் 

 

7. "சொர்க்கம்" முழு நீள் நாடகம் 

வல்வை ரேவடி இளைஞர் நாடக மன்றம் 

 

8."சிலப்பின் சிரிப்பு" - கண்ணகி வரலாறு 

வல்வை முன்னோடிகள் நாடக மன்றம் 

 

9."சபதம்" பாண்டவர் வரலாறு 

வல்வை முன்னோடிகள் நாடக மன்றம் 

 

10."கொடையா? படையா?" - கர்ணன் வரலாறு 

வல்வை முன்னோடிகள் நாடக மன்றம் 

 

11."சோக்கிரட்டீஸ்"  ஓரங்க நாடகம் 

பொன்னொளி வாசகசாலை ஆண்டு விழா தொண்டைமானாறு 

 

12."சாம்ரட் அசோகன் " ஓரங்க நாடகம் 

பொன்னொளி இலவச வாசகசாலை ஆண்டு விழா தொண்டைமானாறு 

 

13." போலியோ போலி" - வல்வைக் கல்வி மன்றம் 

வடமராட்சி காரியாதிகளை புரிவு நாட்களும் (?)

இவற்றுள் பெருபான்மையானவற்றுக்கு நானே கதை வசனம் - நெறியாள்கை - நடிப்பு 

என்னால் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுக்குரிய நேரங்களில் எனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் - விருதுகள் - பரிசுகள் பெரும்பான்மையினவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகளால் நாம் உரிமையை விட்டுச் சென்று வசித்தமையால் பாதுகாக்க முடியாது போய்விட்டது.

வ.ஆ.அதிரூபசிங்கம்  (ஜூலை 2017)

 
பிரபல்யங்கள், நண்பர்கள், பொது அமைப்புக்கள் - பார்வையில் அதிரூபசிங்கம் மாஸ்டர் 
 
அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் வல்வை மண்ணில் பிறந்து இறக்கும் வரை பன்முக ஆளுகை கொண்ட சிறந்த செயல் வீரனாக சமுதாயப் பற்றாளனாக, தலைவனாக வாழ்ந்து வந்தவர். அன்னாருடைய இழப்பு எங்கள் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
 
தமது சிறிய வயதிலேயே தந்தையை இழந்து பொருளாதார நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து தம்பியாருடன் சேர்ந்து தாயாரின் அரவணைப்பில் வல்வெட்டித்துறை தொண்டைமானாறு  ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்தார்.
 
 
ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டு வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பின்னர் கல்லூரியில் பழைய மாணவர் சங்க நிர்வாகியாக, செயற்பாட்டாளராக நீண்ட காலம் செயல்பட்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர். 
 
மாணவர் பருவம் தொடக்கம் தமிழ்த் தேசிய அரசியலில் தொண்டனாக, பிரச்சாரப் பீரங்கியாக விளங்கியவர்.
 
மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதிலேயே குறிப்பாக தமிழ் மொழியைப் போதிப்பதிலே தமது வாழ் நாளில் நீண்ட கால சேவை செய்த காரணத்தினாலேயே அதிரூபசிங்கம் ஆசிரியர் (மாஸ்ரர்) என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர்.  
 
இலங்கைப் போக்குவரத்துச் சபையில் (C.T.B) நடத்துனராக பணிக்குச் சேர்ந்து பிரதி செயல்பாடு, நிர்வாக பொறுப்பு உத்தியோகத்தவர் பதவி உயர்வு பெற்று கடைமையாற்றி ஒய்வு பெற்றவர். இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நடாத்துனராகக்  கடமையாற்றிய காலத்தில் கூட்ட நெரிசல் உட்பட பல்வேறு நெருக்கடிகளை மிக நேர்த்தியாகக் கையாண்டதன் மூலம் பெயர் சொல்லக் கூடிய ஆளுமை மிக்க ஊழியராக அடையாளம் காணப்பட்டிருந்தார். பொதுமக்கள் மத்தியிலும் பெறும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
 
சேவையில் இருக்கும் பொழுதே பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவனாகத் தோற்றி கலை இளமானிப் பட்டத்தையும் ( B.A) பெற்றிருந்தார்.
 
பொதுச் சேவையில் ஈடுபாடு காட்டியது மாத்திரமல்லாமல் கலை, இலக்கிய, நாடக், விளையாட்டு, சமயத் துறையிலும் தமது முத்திரையைப் பொறித்தவர். தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் நீண்ட காலம் தொண்டு புரிந்தவர்.
 
ஊரில் எந்த விழாவாக இருந்தாலும் அதிரூபசிங்கம் ஆசிரியர் அறிவிப்பாளராக மக்களின் பேராதரவுடன்  கடமையாற்றியதை எண்ணிப் பார்க்கின்றேன்.
 
நான் சிறு குழந்தையாக இருந்த வேளையில் எமது அயல் வீட்டில் அமரர் அதிரூபசிங்கம் குடியிருந்த காலகட்டத்தில் என்னைத் தூக்கி வைத்திருந்த நினைவுகளை என்னிடம் அடிக்கடி பகிர்ந்து கொண்டிருந்தார்.
 
எனது இளமைக் காலத்திலே பொதுச் சேவைகளில் ஈடுபட்ட பொழுது, எதிர்காலத்தில் பெரிய பதவிகளிலும் பெறக் கூடிய திறமைகள் இருப்பதாக தீர்க்க தரிசனத்துடன் கூறியதை எண்ணிப் பார்ப்பதோடு, பல பதவிகளைப் பெற்று பொழுது பெரு மனதுடன் என்னைப் பாராட்டியதையும் நினைத்துப் பார்க்கின்றேன்.
 
வல்வை சனசமூக சேவா நிலையத்தில் நீண்ட காலமாக தலைவர் உட்பட பல பதவிகளை சிறப்பாக அலங்கத்திருந்தார். அமரர் 1978 ஆம் ஆண்டு தலைவராக இருந்த காலத்தில் வல்வெட்டித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி ஒன்றை நடாத்தி பிரதம விருந்தினராக நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தனை அழைத்து பரிசளிப்பு விழாவை வல்வை ரேவடிக் கடற்கரையில் மிகவும் சிறப்பாச நடாத்தியிருந்தோம்.
 
பரிசளிப்பு விழாவில் அறிவிப்பாளராக கடமையாற்றிய அதிரூபசிங்கம் அவர்கள் கொழும்பில் இருந்து வந்த குத்துச் சண்டை வீரர்களை எமது உள்ளூர் வீரர்கள் எதிர் கொண்ட பொழுது சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதல் என வர்ணித்ததையும், அப்போட்டிக்கு தான் விளையாட்டுச் செயலாளராகக் கடமையாற்றியதையும் நினைத்துப் பார்க்கின்றேன். 
 
வல்வெட்டித்துறை விளையாடுத்துறைக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றிய அமரர் அதிரூபசிங்கம் வல்வை ரேவடி ஜக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகத்தில் பல்வேறுபட்ட நிலைகளிலும் குறிப்பாகத் தலைவராக 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாகக் கடமையாற்றியது மாத்திரமல்ல இறக்கும் வரை கழகத்தின் காப்பாளராகவும் செயல்ப்பட்டவர்.
 
ரேவடி கடற்கரைப் பகுதி இராணுவ முகமாக இருந்ததையிட்டு, மனம் வருந்தி இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் எனது கோரிக்கையை நாம் எல்லோரும் வலியுறுத்த வேண்டும் என அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருந்தார்.
 
அதைப் போலவே இடம் மாற்றப்பட்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருந்தார். இன்று ரேவடிக் கடற்கரை மிகவும் அழகாக அபிவிருத்தியடைந்தையிட்டு மன நிறைவு அடைந்திருந்தார். 
 
ரேவடிப் பகுதியில் நீச்சல் தடாகம் ஆரம்பிக்கப் பட போவதை ஆர்வத்துடன் வர வேற்றது மட்டுமல்லாமல் நீச்சல் தடாக வேலைகளைத் துரிதப் படுத்துமாறு எனக்கு அன்புக் கட்டளை இடுவார்.
 
வல்வெட்டித்துறை.ஒஆர்ஜி இணைய சேவைக்கு தனது தீவிர பங்களிப்பைச் செய்ததோடு மட்டுமல்லாமல், வல்வை சனசமூக சேவா நிலையத்தில், வல்வெட்டித்துறையில் இருந்து 1938 ஆம் ஆண்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற அன்னபூரணி பாய்மரக் கப்பலின் வடிவை நிரந்தரமாக காட்சிக்கு வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியமை எமது வராலாறுகளை இளையோர் எண்ணிப் பார்க்க உதவியாக இருந்து வருகின்றது.
 
வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இயங்கிவரும், அன்னை தெரேசா முன்பள்ளியின் தலைவராக கடமையாற்றியது மட்டுமல்லாமல், அடிக்கடி முன்பள்ளிக்குச் சென்று, நேரில் பார்வையிட்டு ஆசிரியர் குழந்தைகளுடன் பேசி மகிழ்வதை அடிக்கடி வழக்கமாகக் கொண்டிருந்தார். 
தமது பிள்ளைகளுக்கு மாத்திரமல்லாமல் பேரப் பிள்ளைகளுக்கும் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டி தனது தமிழ்ப் பற்றை வெளிக் காட்டியவர். 
 
அன்னாரின் போது வாழ்வு, மனைவியின் பூரண ஒத்துழைப்பு இருந்தமையால் வெற்றிகரமாகச் சென்றதை எம்மால் பார்க்கக் கூடியதாக இருந்தது. 
 
தனது நான்கு பிள்ளைகளில் 2 ஆண் பிள்ளைகளையும் வெளிநாட்டு வணிகக் கப்பல்களில் தலைவனாக (கப்டன்) கடமையாற்றுவதற்கு உதவியாக இருந்தவர். மூத்த மகள் திருமணம் முடித்து கனடாவில் வாழ்ந்து வந்தாலும் அவரின் நினைவுகள் பிள்ளைகளின் குடும்பங்களைச் சுற்றியே வந்ததை அன்னாரின் உரையாடல்களின் மூலம் அறியக் கூடியதாக இருந்தது. அது மாத்திரமல்லாமல் போர்க் காலங்களிலே யாழ்பாணம் – கொழும்பு பயணம் மிகவும் பயங்கரமாக இருந்த சூழலில் தனது இளைய மகளை கிளாலி கடலிலே பறி கொடுத்ததை அடிக்கடி வேதனையுடன் எண்ணிப் பார்த்ததையும் பிள்ளைப் பாசம் அவரை வாட்டியதையும், போரின் கோர முகத்தால் ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டதையும் வெளிச்சம் போட்டு காட்டி நின்றது. 
 
அமரரின் நினைவாக கலை இலக்கிய நாடகப் படைப்புக்களை வெளியிடுவது மட்டுமல்லாமல் – கல்வி, விளையாட்டு, சமூகப் பணிகளையும் அவரது பிள்ளைகள் ‘அதிரூபசிங்கம் அறக்கட்டளை’ என்னும் பெயரில் செயற் படுத்த முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.
 
குடும்பத் தலைவரை இழந்து தவிற்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள், தம்பி, மருமக்கள், பேரப் பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, சகல கலா வல்லவன் ஒருவனை இழந்து தவிக்கும் எமது மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 
 
அமரர் அதிரூபசிங்கத்தின் ஆத்மா சாந்தியடைய வல்வை முத்துமாரி அம்பாளும், தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகனும் அருள் புரிய வேண்டும் என பிராத்திக்கின்றேன். 
 
M.K.சிவாஜிலிங்கம் 
வடக்கு மாகாணசபை உறுப்பினர் 
முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் 
 
 
 
வல்வைக்கு அடையாளம் தந்த வரலாறே வாழ்க..! - செல்லத்துரை (எழுத்தாளர், நாடகக் கலைஞர்)

உலகத்தில் புகழ் பெற்ற ஊர் வல்லை என்பார் - ஆனால் வல்வைக்கு பெருமை யாரென்றால் அது அதிரூபசிங்கம் மாஸ்டர்தான்..

இரண்டு நூற்றாண்டுகளில் கால்பதித்து - தளராது தமிழ்த் தொண்டாற்றிய தமிழ்ப்பழம் நாடகக் கலைஞன்.. வல்வை நாடகங்களுக்கு வசனத்தால் வளமிட்டு நடிப்பால் மெருகேற்றி வரைந்த தமிழ் கலை ஓவியம்..

ஒருவனோடு நண்பனாய் வாழமுடியா உலகில் எல்லோருடனும் நண்பனாகி மகிழ்ந்த நட்பின் இலக்கணமே வணக்கம். மாஸ்டர் பேருந்தில் நடத்துனரென்றால் போதும் கண்ணை சிமிட்டிவிட்டு ஏறுவேன் அவர் காசில் போவேன் பயணம்.

போடா... என்றொரு சத்தம் கேட்கும் - அதோ வந்துவிட்டார் மாஸ்டர் என்போம் பொழுதெல்லாம் சிரிப்பாகும் அவரால்.

சந்நிதியில் கொடியேற்றம் மாஸ்டர் இல்லையா முருகனின் சேவலும் கூவாது முடிவில்லா முருக நேசன்.

வல்வை ரேவடி வி.கவில் முழங்கும் குரல் பலரை வானில் உயர்த்தியது - இன்றோ வானில் கேட்கிறது தமிழ். பருத்தித்துறை பேருந்துகள் எல்லாம் உனக்காக அணிவகுத்து வருகின்றன மாஸ்டரின் ஊர்வலம் போகிறது.

அதிரூபசிங்கம் என்று அழகிய பெயரிட்ட உன் தந்தையின் புகழோடு ஆறுதலாய் கண்ணை மூடினாய். உயிர் போனாலும் காரியமில்லை நான் உன்னைப் பார்க்க வேண்டுமென ஓடி வந்தேன் ஊருக்கு. மேள தாளம் முழங்க மாலையிட்டு உன்னை யாழ் நகரில் வீரமகனான அழைத்து சென்றேன் மகிழ்ச்சி.

இரவு படுக்கையில் துடித்து எழுந்தேன் இறந்தது யாரென்று தவித்தேன் வந்தது செய்தி நீயென்று.. வாழ்விலும் தாழ்விலும் ஒன்றாய் நின்றாய் கனவிலே வந்து விடையும்பெற்றாய் கனக்குதே இதயம் கண்ணீரில்.

உன் வீடு வந்து தட்டியபோது உன் நூலுக்கு நான் எழுதிய மதிப்புரையை அருகில் கண்டேன்.

நம்பத்தான் முடியவில்லை அன்பால் கலங்கினேன் அதிரூபசிங்கத்தை அள்ளி அணைத்தேன் அக மகிழ்ந்தாய் அன்று. என்றும் உண்மை வல்வையின் பக்கமாக நின்று குரல் கொடுக்கும் தமிழே பெருமையே வணக்கம்.

கல்விக்கடலே கலைத்தாய் பெற்ற புகழே முத்தமிழ் முரசமே எங்கள் முது தமிழ் கனியே. மாஸ்டர் நீங்கள் இல்லாவிடினும் ஊரில் உங்கள் ஒளி வாழும் சென்று வாருங்கள் மறுபடி. வல்வை மக்களின் அடையாளமே.

யாழ் ராஜா திரையரங்கில் அழைத்து செல்லப்படும் திரு.வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள்

வரலாறே மகத்தான மரியாதைகள் உனக்கு வானம் பூமாரி பொழிகிறது. போனவர் எல்லாம் கூடிநிற்கிறார் உனக்காய் வான மண்டலத்தில் வரவேற்பு விடைதர தயாராகிறது வல்வை.

மகனே கண் கண்ணீரில் உனக்காக..

அந்தக் குழந்தை அழுகிறது வல்வைத்தாய் துடிக்கிறாள்

உனக்காய் மாஸ்டர் வாழ்கிறீர்கள் என்றும் வல்வை மக்கள் மனங்களில் நீங்காது முருகா ஏற்றுக்கொள் இவரை.

இறந்த அதிரூபசிங்கம் வல்வையின் இணைபிரியாத அங்கம் (சட்டத்தரணி கனக மனோகரன், கனடா)

கொட்டி போல் ஆம்பல் போல் தன்னை விட்டு விலகாது இருந்து தன்னுடன்  உறவாடிய ஒரு தலைமகனை வல்வைத் தாய் இழந்துவிட்டிருக்கின்றாள். ஆறு தசாப்தங்கள் பல்துறைகளில் பாதமலர்களைப் பதித்த ஒரு சர்வகலாவல்லவனை சகலகலாவல்லி பறிகொடுத்திருக்கிறாள். இலங்கையில் ஓய்வூதியம் பெறும் அகவை 55. ஆசிரிய அரும் பணிக்கு அதிரூபசிங்கம் மாஸ்டர் தன்னை அர்ப்பணித்த கால எல்லையும் ஏறக்குறைய அதுவேதான் !

வல்வை சிறாரின் அறியாமை இருளகற்ற இரவுப்பாடசாலையை ஆரம்பித்தவர்களுள் முதன்மை பெற்றவர் பேராசிரியர் சபா.ராஜேந்திரன். முதல் அணியில் அதிரூபசிங்கம் அவர்களிடம் தமிழ் படித்தவர்களில் யானும் ஒருவன். அன்றைய எங்கள் ஆசிரியர் கல்வித் தகமைகளைப் பெரிதாக பெற்றிருந்தவர் அல்லர். இவர் கொடுமையிற் கொடுமை என்று ஔவை குறிப்பிடும் வறுமை காரணமாக பல்கலைக்கழக வாய்ப்பைப் பறிகொடுத்தவர். இதன் விளைவாக ஈழத்தமிழ்க் கலையுலகம் ஒரு தமிழ்ப் பேராசிரியனை இழந்திருக்கிறது என துணிந்து நான் சொல்வேன். எங்கள் இந்த "சுப்பர் ஸ்டார்" கூட பேருந்து நடத்துனராகத்தான் தன் வாழ்வினைத் தொடங்கியவர். பின்னாளில் ஒயாத உழைப்பால் உயர்ந்தவர், தன் வாழ்வில் தொழில் துறையிலும் உயர்ந்தவர், கல்வித்தகைமைகளையும் அடைந்தவர். அதிரூபசிங்கம் சொற்சிலம்பாட்டத்தில் மட்டுமல்ல மல்யுத்த, சிலம்பாட்டக் கலைகளிலும் சிறந்து விளங்கியவர். ரேகு மைதானத்தில் நடந்த ஒரு மல்யுத்த போட்டியில் வல்ல மல்யுத்தவீரன் வைரவநாதனை இவர் வெற்றிகொண்டார். சூழ்ந்து நின்று மாணவர் நாங்கள் செய்த ஆரவாரம் இவருக்கு சோமபானம் ஆகியிருக்கலாம்.

கண்ணதாசன் குறிப்பிடும் ஆசை தரும் "ஓசைநடை" யை எனக்கு பயிற்றியவர் இந்த தமிழ் ஆசான். இவர் நான் இடைநிலை மாணவனாக இருக்கையில் வடமாகாண ஆசிரியர் சங்கம் நடத்திடும் பேச்சுப்போட்டிக்காக "சுகம் எங்கே?" என்ற தலைப்பில் எனக்கு விடயப் பொருள் எழுதித் தந்திருந்தார். அதைப் பேசிய எனக்கு வடமாகாணத்தில் இரண்டாம் கிடைத்தது.

வல்வையின் நடுநாயகமாக அமைந்திருக்கும் வல்வை சனசமூக சேவாநிலையம் 1968ம் ஆண்டில் விமரிசையாக அதன் வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. அதனை ஒட்டி "வல்வையின் இன்றைய நிலைஎன்ற மகுடத்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் முதல்மூன்று இடங்களைப் பெற்றோர் முறையே ஆ.அதிரூபசிங்கம், ச.கமலரங்கன், வ.ஆ.தங்கவேலாயுதம். 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் எனக்கு முதலிடம், 2ம் 3ம் இடங்களை ந.அனந்தராஜ், ந.நகுலசிகாமணி பெற்றார்கள். இளையவர் எமக்கு இயக்குநராக இருந்தவர் அமரர் ஆ.அ அவர்களே.

முதல் பிரிவில் மூன்றாம் இடம்பெற்ற வ.ஆ.தங்கவேலாயுதம் அதிரூபசிங்கம் அவர்களின் உடன்பிறப்பு. என் நல்ல நண்பன். அவனைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பைச் செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். அண்ணன் பாணியில் இவனும் திண்ணமான உழைப் பால் தன்னை வளர்த்தவன். சிறுவனாய் இருக்கையில் வறுமை காரணமாக சிறுமை கருதாது சந்நிதி கோயிலில் கச்சான் விற்ற கதையை பெருமையாகச் சொல்வான். கால இடை வெளிக்குப் பின்னரே மீளவும் படித்தான். இவன் தபால் இலாகாவில் லிகிதராய் இணைந்தான்.  அந்த இலாகாவின் உத்தியோகபூர்வ மாத இதழுக்கு ஆசிரியனாகவும் இருந்தான்.  நடிகனாகவும் நாடகக் கலைஞனாகவும் மிளிர்ந்தான். சிறுகதைக்கான சாகித்திய மண்டல விருதை வல்வைக்கு கொணர்ந்தான். "தேவரண்ணா" அழைபெயர்கொண்ட இந்த என் நண்பன் இடைக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு பிரிவுப் பொறுப்பாளனாகவும் பணியாற்றினான்.

1965 மார்ச் இல் ஒரு பொதுத் தேர்தல். இரு தினங்கள் வடமராட்சி கிழக்கில் தங்கி திரு.க.துரைரத்தினம் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட 20 தொண்டர்களைக் கொண்ட ஒரு குழு பருத்தித்துறையில் இருந்து புறப்பட்டது. அதில் 16 வயது நிரம்பிய கேர்ணல் கிட்டுவின் அண்ணா காந்திதாசன், நகுலசிகாமணியுடன் நானும் இருந்தேன். என் வீட்டிற்கு வந்து அதிரூபசிங்கம் ஆசிரியர் பொறுப்பேற்றதினால்தான் என் பெற்றோரின் அங்கீகாரம் எனக்குக் கிட்டியது,

03 -03 -1963ம் ஆண்டு பாக்கு நீரிணையைக் கடந்து மகோன்னத சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனுக்கு ஒரு வாழ்த்து வைபவம் வல்வை ரேகு மைதானத்தில் நடைபெற்றது. அன்றைய 18 வயது விழா நாயகனுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய 24 வயது இளைஞனின் வழமையிலும் வழக்கிலும் இல்லாத பெயர் அதிரூபசிங்கம். அவனது அன்றைய வரவேற்புரை பாரிய வரவேற்பைப் பெற்றது. மறு தினம் தனது ஆசிரியத் தலையங்கத்தில் அன்றைய ஈழநாடு இதழின் பிரதம ஆசிரியர் ஹரன் அவனது பெயரைக் குறிப்பிடாது பின்வரும் குறிப்பைச் செய்திருந்தார். ''அந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய இளைஞன் அழகான தமிழில் அற்புதமான ஒரு பேச்சினை நிகழ்த்தி அனைவரையும் கவர்ந்திருந்தார்."

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி ஜனாப் அப்துல்காதர், ஒரு யாழ் வாசி அவர் தனது பட்டப்படிப்பிற்கு தமிழையும் ஒரு பாடமாகத் தேர்ந்தவர். ஒரு தமிழறிஞர். நல்ல தமிழ் ஆர்வலர். நான் தொழில் வாழ்வின் நுழைவாயிலில் இருந்த காலகட்டத்தில் கொலை வழக்குகளில் தமிழில் தொகுப்புரைகளை நிகழ்த்திய என் போன்ற இளம் சட்டத்தரணிகளை தட்டிக் கொடுத்த ஒரே ஒரு நீதிபதி அப்துல்காதர் அவர்களே !

எனை ஒத்தவர்களுக்கு மட்டுமல்ல அப்துல்காதர் போன்ற தமிழ் அறிஞர்களுக்கும் ஆசிரியர் அதிரூபசிங்கம் அவர்கள் ஆசிரியப்பணி செய்த ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்லி என் மடலை மடக்கவுள்ளேன்.

ரேகு விளையாட்டுக் கழக வருடாந்த மெய்வல்லுநர் போட்டி வெகு சிறப்பாக நடை பெறுகின்றது. அதே ரேகு மைதானத்தில்த்தான் ! நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அதே அதிரூபம் கொண்ட சிங்கம் தான்! அந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக அழைப்பைப் பெற்றிருந்தவர் அன்றைய பரு. மாவட்ட நீதிபதி அப்துல் காதர் அவர்கள். அன்னார் தன் தலைமை உரையில் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட கூற்று...

அறிவிப்பாளராகப் பணியாற்றிய அதிரூபசிங்கம் தன் பணியை மிகக் கவர்ச்சிகரமாகச் செய்கிறார். அவர் அடிக்கடி வீராங்கனைகள் என்ற சொல்லைப் பாவித்தார். அச்சொல்லை நான் இதற்கு முன்னர் கேட்டதில்லை. அவரிடம் இன்று நான் ஒரு புதிய தமிழ்ச்சொல்லைப் படித்திருக்கிறேன். அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகின்றேன்.

நல்ல - வல்ல - பயனுள்ள ஒர் அற்புதக் கலவையை - ஒர் அரும் பொருளை எமக்களித்ததற்காக பரம்பொருளுக்கு நாமும் நன்றி கூறக் கடமைப்பட்டவர்களே !

- கனடாவிலிருந்து கனக மனோகரன் (சட்டத்தரணி)

அதிரூபசிங்கம் மாஸ்ரர் - நான்கு தலைமுறை மனிதர்களிடம் ஒரே மாதிரியான தோழமையை கைக்கொண்டவர் - ச.ச.முத்து (விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர்)

காலநீட்சியும் முதுமையும் பலரை எங்களிடம் இருந்து பறித்து சென்றபடியே இருக்கிறது அவர்கள் ஒவ்வொருவர் இந்த உலகை விட்டு போகும்போதும் ஒரு வரலாற்றை நாம் இழந்துவிடுகின்றோம்.

இந்த முறை அதிரூபசிங்கம் மாஸ்ரர் வல்வையின் விளையாட்டுத்துறை, ஆன்மீகம், திருத்தலவரலாறுகள், நாடகவளர்ச்சி, தமிழ்தேசிய எழுச்சி, எதை எடுத்தாலும் அதில்  முழுமையான தகவல்களுடன் ஒரு சாட்சியமாக இருந்தவரை இழந்திருக்கிறோம்.
 
இந்த மரணம் தந்த கவலையை விட அந்த மனிதனை எவ்வளவு தூரம் நாம் பதிவு செய்து இருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சியே எழுகிறது அதிலும் நவீன தொழில்வளர்ச்சியும் இலத்திரனியல் தொழில்நுட்பமும் வான் தொட வளர்ந்து எழுந்து நிற்கும் இந்த பொழுதில் அவரை கதைக்க சொல்லி கலை ஆன்மீகம் விளையாட்டுகழகங்கள் சனசமூகசேவாநிலையம் கல்விமன்றம் தமிழ்தேசிய எழுச்சி என்று அனைத்தை பற்றிய ஒரு எழுபதுஆண்டுகால பார்வையை பதிவு செய்து இருக்கலாம். தவறவிட்டுவிட்டோம். என்னதான் முயன்றாலும் திரும்ப தொடர்பு கொள்ள முடியாத பெரும் பிரபஞ்சத்தின் மையத்துள் அவர் ஐக்கியமாகிவிட்டார்.
 
வல்வையின் எந்த பொதுநிகழ்வுகளிலும் அவரது அறிவிப்புகுரல் அந்த நிகழ்வை  இன்னும்வீரியமிக்கதாக ஆக்கி அவையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவல்லது அதற்கு முக்கிய காரணமே அந்த குரலில்' தெறித்தோடியபடி வெளிவரும் ஒருவித தோழமை குரல்தான்.
 
அதிரூபசிங்கம்  மாஸ்ரரிடம் நிறைந்து தளும்பிய ஆளுமைகளில் மிக முக்கியமானதே அவரது அந்த தோழமை மனோபாவம்தான்.அவர் ஒரு நான்கு தலைமுறை மனிதர்களிடம் ஒரே மாதிரியான தோழமையை கைக்கொண்ட ஒருவராக விளங்கியவர்.
 
வல்வை சனசமூகசேவாநிலையத்தின் தலைமை பொறுப்புகளில் எனது தந்தையுடன் செயற்பட்ட அவர் அதற்கு பிறகு பல வருடம் கழித்து அதே சனசமூகசேவாநிலையத்தின் பொறுப்புகளில் என்னுடனும் அதே செயலூக்கத்துடனும் நிர்வாக தோழமையுடனும் அவரால் செயற்பட முடிந்திருந்தது. அதன் பிறகு எனக்கு பின்வந்த ஒரு தலைமுறையுடனும் ஊர் கழக விடயங்களில் அவர் அதே முறையில் பணி புரிய முடிந்தது பெரீய ஆச்சர்யமே எந்த வரையறைக்குள் அவரை வைத்து அவரது இல்லாமைiயை சொல்ல முடியும் என்று புரியவில்லை ஏன் என்றால் எல்லாவிதமான செயற்பாடுகளுக்குள்ளும் அவர் நின்றிருக்கிறார். அதில் முழுமையான ஈடுபாட்டை வெளிக்காட்டி இருக்கிறார்.
 
வல்வை சனசமூகசேவா நிலையத்தில் அவர் புதிய புத்தகங்களை வாங்குவதற்காக எது எது நல்லவை என்று தெரிவு செய்யும் ஒரு பொழுதில் அவருடன் நின்றிருக்கிறேன்.வெறுமனே வர்ணணைகள் நிறைந்த நாவல்களைவிட சமூகத்துக்கு சேதி சொல்லக்கூடிய புத்தகங்களை அவர் தெரிவு செய்வதில் பிடிவாதமாக நின்றவர்.
 
ஒரு 50, 70 பக்கங்களில் அந்த நேரத்தில் இந்தியவிடுதலைப்போராட்ட வீரர்களான லாலாலஜபதிராய், பகத்சிங், ஆசாத், நேதாஜி,அரவிந்தகோஸ், வாஞ்சிநாதன் பாரதி ஆகியோரின் புத்தகங்கள் அவரது தெரிவில் வாங்கப்படடவை.
 
அந்த புத்தகங்கள் அவரது கனவை போலவே சனசமூகசேவா நிலைய எல்லை கடந்தும் பல இடங்களுக்கு பயணப்பட்டு இந்த நூற்றாண்டின்  எமது இனத்தின் மிகச்சிறந்த வீரர்களாக நிர்வாகிகளாக தலைமைகளாக தளபதிகளாக விளங்கிய பலரின்   கரங்களில்  80களில் தவழ்ந்து அது சொல்ல வேண்டிய சேதியை சொல்லி நின்றதை நேரில் பார்த்தேன்.அந்த மனிதர்களில் பலரும் அவர்மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்ததார்கள்.
 
 
அந்த மனிதர்களில் பலரும் அவருடன் ஒரு ஆழ்ந்த தோழமையை ஒருவிதமான பிணைப்பை கொண்டிருந்தார்கள். 
 
சத்தியநாதன் சங்கரை மாஸ்ரர் எங்கே கண்டாலும் வீரா என்றே அழைப்பார். சங்கரின் அந்த இறுக்கமான உடல் அமைப்பும் வேகமும் அவருக்கு ஏனோ அவனுக்கு அந்த பெரையே சொல்லி அழைப்பார்.
அதனை போலவே பாடசாலைநாட்களில் பண்டிதரை (ரவீந்திரன்)  நாம் அழைத்த தாகூர் என்ற பெயரையே அவரும் அழைப்பார். (ரவீந்திரன்) அதனை போலவே கிட்டுவை அச்சகம் என்றே அழைப்பார் ஊரைவிட வெளியில் அவரை கண்டபோதெல்லாம் அவர்கள் இவருடன் நிறையவே கதைத்தார்கள். தமிழ்தேசிய எழுச்சியில் இந்த பொடியள் விண்ணை எட்டித்தொட முயலுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருந்தது அவர்களுக்கும் அவருக்குமான தொடர்புகள் மிக நீண்டது.
 
பலருடன் அதிரூபசிங்கம் மாஸ்ரரும் இணைந்து நடாத்திய அலைஒளி பல படைப்பாளிகளை உருவாக்கியதில் பெருமை கொள்ளலாம்.இந்த அலைஒளியின் வருகைக்கு பின்பாக வல்வையில் எழுந்த கையெழுத்து சஞ்சிகை எழுச்சி என்பது நிச்சயமாக அதிரூபசிங்கம் மாஸ்ரருக்கு பெருமை சேர்க்கும் ஒரு பெரும்விடயமாகும்.
 
எப்போதுமே தூவப்படும் சிறு விதையானது எழுந்து பெரு விருட்சமாகும்போது பறவைகளுக்கு தெரியாது இந்த விருட்சத்துக்கான விதையின்  முதல் தூவல் எது என....   ஆனால் அலைஒளியின் பாதிப்பால் எமது இளம்பறைவைகள் கழகம் சந்தி வாசிகசாலையில் ஆரம்பித்த பறவை கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியர்குழுவில் ஒருவரான கிட்டு அதன் பின்னர் தமிழகத்தின்  பிரபல தேவி வாரஇதழில் போராட்ட வரலாறு எழுதும் பொழுதுகளில் இந்த அனுபவம் தனக்கு உதவியதாக நண்பர்களான  எம்மிடம் கூறி இருக்கிறார்.
 
இவை எல்லாவற்றையும்விட அதிரூபசிங்கம் மாஸ்ரர் ஒரு சமூகம் கலிவி பெறவேண்டிய அவசியத்தை உணர்ந்து அந்த தளத்திலும் ஆர்வமுடன் செயற்பட்ட ஒருவராகவே விளங்கினார்.
 
அவரிடம் கற்ற ஒரு வரிசை என்பது பலதரப்பட்ட மாணவர்களை உள்ளடக்கிய ஒன்று.அந்த மாணவர்கள் வரிசை என்பது என்றுமே அவரது பெயரை நினைபடுத்தி கொண்டே இருக்கும்.
 
இத்தனை விடயங்களிலும் ஒருவர் தன் தடம் பதித்திட முடியுமா என்ற வியப்பு எழுகிறது அதற்கு பின்னால் இருந்த அவரது சமூகம்பற்றிய இனம் பற்றிய கரிசனை என்றென்றும் நன்றியுடன் எம்மால் நினைத்து பார்க்கத்தக்கது இனியும் அந்த மண்ணில் ஒலிக்கும் ஏதோ  ஒரு கழக விளையாட்டு போட்டி அறிவிப்பு குரலிலோ அரங்காற்றுகை நிகழ்வு ஒன்றின்போதோ ஆலயபண்ணிசையிலோ கல்விகற்பித்தலிலோ படைப்பாளி ஒருவனின் எழுத்திலோ  அவரை என்றும் பார்க்கலாம். 
 
 ச.ச.முத்து (லண்டன்)

வல்வை மு .ஆ .சுமன் (கவிஞர்) - கலை கலாசார இலக்கிய மன்றம் வல்வெட்டித்துறை

உள்ளத்தில் உயர்வாகி இதயத்தில் இறையாகி வானுறையும் தெய்வத்துள் தெய்வமாகி போனாயே ...!
ஆசானாய் வழிகாட்டி பேச்சிலே பார் போற்றி எழுத்திலே நிலையாகி

நாடக கலையிலே உயிராகி காவியம் படைத்த சிங்கமே ..! அதிரூப சிங்கமே ...!

"ஆற்றங்கரை வேலன் இவன் ஆறுமுகப் பாலன் " எனும் வரலாற்று நூல் எழுதிய வேலவன் பக்தனே..! வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் முதல் "போசகரே " கலை சிகரமே .....

உங்கள் பிரிவால் எங்கள் கலைக்குடும்பம் துயரில் வாடுகிறோம் .........

உங்கள் ஆத்மா சாந்தியடைய ...

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!!

வல்வை மு .ஆ .சுமன்  

தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காம் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர் - நகுலசிகாமணி (ஸ்தாபகர் - வல்வை ஆவணக் காப்பகம்)

இவருடன் நான் இரவுப் பாடசாலையில் அறிமுகமானேன். இவருக்கு பல முகங்கள் உண்டு. 1965ம் ஆண்டு அன்று எமது பருத்தித்துறை தொகுதியில் பாராளு மன்றத் தேர்தலில் போட்டியிட்ட திரு.துரைரத்தினம் அவரின் வெற்றிக்காகவும் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்காகவும் மேடையில் பேச்சாளராக பணியாற்றியவர். பின்பு நான் வல்வை சனசமூகசேவா நிலையத்தின் நிர்வாகத்தில் பங்கெடுத்தபோது நெருங்கிப்பழகினோம்.

இவர் ஆரம்பத்தில் இலங்கைப் போக்குவரத்துச்சபை பருத்தித் துறை டிப்போவில் வேலை செய்தாலும், மிகுதி நேரத்தை ஆசிரியர், எழுத்தாளர், நாடகத்துறை கலைஞர், கழகங்களின் விளையாட்டுப் போட்டிகளில் அறிவிப்பாளர், கவிஞர், கட்டுரையாளர் இப்படியாக பல முகங்கள் உண்டு.

சிறு வயதில் சந்நிதி கோயில் மண்ணில் தாய் சகோதரன் தங்கவேலாயுதம் அவர்களுடன் வாழ்ந்து சந்நிதியானுக்கு பூ பறிக்கும் தொண்டனாகவும், கோயிலடி யில் ஓரு நூல் நிலையத்தையும் அமைத்தார். 1974 தமிழாராய்ச்சி மாநாட்டின்போது வல்வெட்டித்துறையின் கப்பல் மாதிரி ஊர்வலம் யாழ்நகர் சென்றபோது அதிலும் விமர்சனங்களைச் செய்தவர்.

நாம் ஆவணக்காப்பகத்தை ஆரம்பித்தபோதும், கனடாவிலிருந்து செல்லும் போது, எமது ஆவணக்காப்பகத்திற்கு வந்து எமக்கு உற்சாகம் ஊட்டுவார். எமது ஊருக்கென ஆறுமுகம் பாலன்......! இவன் ஆற்றங்கரை வேலன்........! என்ற நூலை தான் 70 வருடங்கள் பூ பறித்ததன் காரணமோ 70 பக்கங்களுக்கு மேல் அந்த நூலை எமக்கு அழித்துள்ளார். அந்த நூல் என்றும் எமது ஆவணக்காப்பகத்தில் நிலைத்து நிற்கும். இம்முறையும் மிகவும் கரிசனையோடு வழியனுப்பி வைக்கும்போது நாமும் மறுவருடம் சந்திப்போம் என்றுகூறி விடைபெற்றோம். அவரின் இழப்புபற்றி அவரால் ஆரம்பிக்கப்பட்ட Valvettithurai.org இணையத்தில் அறிந்து மிகுந்த கவலை அடைந் தோம். இவரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி, பிள்ளைகள், சகோதரம், குடும்பத்தினருடன் நாமும் பங்கெடுக்கின்றோம்.

வல்வை வரலாற்று ஆவணக்காப்பகம்

ந.நகுலசிகாமணி, உமா.ந (கனடா)

நானும் தம்பியும் அதிரூபசிங்கம் மாஸ்டரிடரிடம் கல்வி கற்றவர்கள் - வேலுப்பிள்ளை மனோகரன்

கடந்த 6 ஆம் திகதி மாஸ்டரின் மறைவுச் செய்தியைப் பார்த்தவுடன் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

வல்வையில் சிவகுரு வித்தியாசாலையில் மூத்த படித்த இளைஞர்களால் இரவுப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது, நான் மாஸ்டரிடம் மாணவனாக இருந்தேன்.

இந்த இரவுப் பாடசாலையில் என்னைத் தொடர்ந்து எனது தம்பி பிரபாகரனும் மாஸ்டரிடம் மாணவனாக இருந்துள்ளார்.

நான் வல்வையில் இருந்த காலத்தில் இவர் மாஸ்டர் மட்டும் இல்லை. இலங்கை போக்குவரத்துச் சபையில் நடத்துனராக இருந்த இவர், செல்வச் சந்நிதி முருகன் கோயில் மூத்த பூத் தொண்டர், அறிவிப்பாளர், மல்யுத்த வீரர், நாடகக் குழு இயக்குனர், நடிகர், பட்டி மன்ற பேச்சாளர், எழுத்துலகில் ஆசிரியர்.. என இப்படி எந்த நிகழ்விலும் இவரின் பங்களிப்பு இருக்கும்.

மாஸ்டர் நடத்துனராக பணிபுரிந்த பேருந்தில் நான் பல தடவை பயணம் செய்திருக்கின்றேன். அப்பொழுது இவருடன் பேசும் பொழுது, நான் ஏதனும் கூறினால் ‘ஓ அப்படியோடா’ எனக் கேட்பார். அந்தக் குரல் இப்போதும் என் காதில் ஒலிக்கின்றது.

இவருடன் பயணம் செய்யும் பொழுது பயணத் தூரமும் தெரியாது. ஒரே கலகலப்பாக இருக்கும். ஒருவரிடமும் கடிந்து பேச மாட்டார். இவர் மறைந்தாலும் இவருடன் பழகியவர்கள் மனங்களில் என்றும் வாழ்வார்.

நான் புலம் பெயர்ந்து டென்மார்க்கில் வசித்து வந்த போதும், மாஸ்டர் ஸ்தாபகராக இருந்து நடாத்தும் வல்வெட்டித்துறை.ஒஆர்ஜி இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம், தினந்தோறும் ஊரில் நடைபெறும் நிகழ்வுகளையும், ஊர் வரலாறு, கோவில் நிகழ்வுகள் போன்றவற்றை புகைப் படங்கள் மூலம் பார்க்கும் போது எனக்கு ஊரில் இருப்பது போன்ற உணர்வே ஏற்படும்.

இவரின் மறைவால் இவர் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள். காலம் உள்ளவரை இவர் புகழ் நிலைத்திருக்கும்.

வேலுப்பிள்ளை மனோகரன்

(விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்)

 

விரும்பி அழைத்தாலும் விண்ணைத் தாண்டி வரமாட்டேன் - பா.தங்கத்தமிழன் 
 
இலக்கியத்து விழாவென்ன இன்னும்பல நிகழ்வென்ன 
அழையுங்கள், மாஸ்ரரை அழகாகப் பேசுவார்
 
இப்படித்தான் இவரைநாங்கள் இளவயதில் அறிந்துகொண்டோம் 
அப்படியோர் தமிழ்புயல்தான் அதிரூப சிங்கம்மாஸ்ரர்
 
என்னோடு எனைச்சூழ்ந்த கலைப்பிரிய இளசுகட்கு 
எந்நாளும் மறவாத இனியதோர் நண்பரானார் 
 
எம்மைவிட இவர்வயத்தில் ஈர்பத்தளவில் முதிர்ந்தாலும்
தம்முடைய நண்பர்போல்   தமஷாகப் பேசிடுவார் 
 
கையெழுத்துச் சஞ்சிகை நாம்நடாத்தி வந்தகாலத்தில் 
மையலுடன் இவரைநாடி பலதடவை சென்றிருப்போம்
 
போக்குவரத்துச் சபையினிலே பகற்பொழுதுவரை வேலைசெய்வார் - பின்பு
ஊக்கமுடன் மாணவர்க்குக் கல்விநேர வகுப்பெடுப்பார்
 
இத்தனை பணிச்சுமைகள் இவரிடத்தில் இருந்தாலும் 
மொத்தமாகச் சிலமணிகள் எமக்காக ஒதுக்கிவைப்பர்
 
வீடுதேடிச் சென்றவுடன் வழக்கம்போல் தேநீர்வரும்
விடைபெற்று எழும்போது மீண்டுமொரு தேர்நீர் வரும்
 
எதுக்குமாஸ்ரர் இரண்டுதேநீர்  வீண்சிரமம் இதுவென்றால் 
அதற்குமோர் பதில்தருவார் அதிலுமோர் சுவைகொண்டு
 
முன்பு தந்தது பேசுவதற்கு உற்சாகம் 
பின்பு வந்தது பேசிக்களைத்தற்கு உற்சாகம் 
 
வழமையான பேச்சிடையும் கலந்திடுவார் தமிழ்வாரி 
பழந்தமிழன் சுவையறிந்து இளநிலைப் பட்டதாரி (B.A)
 
கதைகவிதை கட்டுரைகள் எம்மோடு விவாதிக்க 
இதை அங்கிருந்தே ரசித்திடுவார் திருமதியார் பத்மாக்கா 
 
கலைஞர்கட்கித் துணையாக துணைவிமார் இருப்பதெல்லாம்
வல்வையர்கள் வழிவந்த நல்லதோர் வரமாகும்
 
வல்வைக்குப்  புகழ்சேர்க்கும் இளங்குமாரர் வரிசையிலே - இவர்
செல்வங்கள் ஆதவன், ஆசுகன் சிறப்புமிக்க தண்டயல்கள்
 
கப்பலுக்கு வருவதற்கு சிலநாட்கள் முன்பாக
கலைப்பணியின் நிமிர்த்தமாக   இவரைநாடி சென்றிருந்தேன் 
 
மடைதிறந்த பேச்சாளர் மௌனமாக அமர்ந்திருந்தார் 
விடைபெற்று வரும்பொழுது கரம்பிடித்து முகம்பார்த்தார் 
 
முகம்பார்த்து மௌனத்தால் முடிவுரை கூறிவிட்டார் 
களமாடி முடிந்ததென்று கைகுலுக்கி விடைகொடுத்தார்
 
இதுதாண்டா நமக்கிடையே இறுதியான சந்திப்பு 
மெய்தாண்டா தம்பியா இது மேல்நீதிமன்றத்தீர்ப்பு 
 
திரும்பிநீ வரும்போது இங்குநான் இருக்கமாட்டேன் 
விரும்பிநீ அழைத்தாலும் விண்ணைத்தாண்டி வரமாட்டேன் 
 
ஒலிவாங்கி இல்லாமல் உள்ளத்தால் கூறினாரே
தெளிவாகக் கேட்டிருந்தால் தொடர்கதையாய் இருந்திருப்பேன் 
 
ஐக்கிய அரபுநாட்டின் ஆழ்கடல் மீதினிலே - எம்முன்
ஜக்கியமானவ்ர்க்கு அஞ்சலி செலுத்துகின்றேன்
 
கலைத்தாயின் திருமகனே உம்ஆத்மா  சாந்திபெற 
தமிழ்த்தாயின் திருவடியை தினம்நினைத்து தொழதிடுவோம் 
 
தங்கள் ஆத்ம பிராத்தனையில் 
வல்வை பா.தங்கத்தமிழன் 
 
 
அஞ்சலிக்கிறது தமிழ் - கனடா வல்வை நலன் புரிச்சங்கம் &  ரொரொண்டோ புளூஸ்
 
 
வல்வையின் வரலாற்றுக்கு செழுமையூட்டிய அதிரூபசிங்கம் மாஸ்டர் - வல்வை ஒன்றியம் டென்மார்க்
 
வல்வையின் வரலாற்றுக்கு செழுமையூட்டிய அமரர். வ.ஆ. அதிரூபசிங்கம் மாஸ்டருக்கு.. 
 
சிலர் பிரிந்தாலும் உள்ளங்களில் இருந்து பிரிவதில்லை அதுபோல இருந்தாலும் பிரிந்தாலும் என்றும் உள்ளங்களில் வாழும் பேறு பெற்றவர் மாஸ்டர். 
 
வல்வையில் நடந்த இரவுப்பாடசாலையில் மாணவருக்கு அறிவு விளக்கேற்றிய ஆசான் இன்று வானத்தில் அணையா விளக்கானார். 
 
அறிவு விளக்கை கையில் ஏந்தி வல்வையின் இருள் திரையைக் கிழித்த இணையில்லாத போராளி..! 
 
உதயசூரியன் நாடகப் போட்டியில் தங்கப் பதக்கங்கள் சூடிய மாஸ்டர் வாழ்க்கையில் நடிக்கத்தெரியாத மனிதத் தங்கம்.. 
 
ஈழத்தின் அறிவிப்பு உலகம் தனக்கென விதியை வரைந்த காலத்திலே வல்வைக்கென ஒரு புதுத்தமிழ் தந்த ஒலிபெருக்கி.. 
 
பேருந்து நடத்துநராக இருந்து எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்துவிட்ட நல்லதோர் சமுதாய நடத்துநர்.. 
 
மதுபானத்தின் எதிரி, புகைத்தலின் பகைவன் என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய சமுதாய நடத்துநர்.. 
 
மல்யுத்தம், உடற் பயிற்சி முதல் பட்டதாரி பட்டம் பெறும்வரை அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவன். 
 
வயதானாலும் படிக்கலாம் பட்டம் பெறலாம் என்று பாடம் நடத்திய வாழ்க்கைப் பல்கலைக்கழகம். 
 
தன் பிள்ளைகளை சரியாக வளர்ப்பதில் வெற்றி கண்ட வல்வையின் முதன்மையான தந்தை என்று போற்றுதலுக்குரியவர்.. 
 
அன்பு மனைவியில் ஆறாத பாசம் கொண்டவர், குடும்பத்தின் மாறாத நேசம் கொண்டவர், ஊரில் உண்மை பற்றுக் கொண்டவர். 
 
எப்படியும் வாழலாமென்று ஆகிவிட்ட உலகில் இல்லை இப்படித்தான் வாழ வேண்டுமென தன் வாழ்வால் விதி எழுதிய தமிழ் பேனா.. 
 
வல்வை சனசமூக சேவா நிலையத்தில் அறிவு விளக்கேற்ற அயராது உயிர் நெய்யூற்றி உழைத்த மெழுகுவர்த்தி.. 
 
தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் விடுதலை உணர்வு மிக்க பக்கங்களில் நின்று சிறப்பூட்டிய சீரிய மனிதர். 
 
கொழும்பில் இருந்தாலும் மாதம் ஒரு முறை வன்னிக்கு போய் வருவதை வாழ்க்கையாக கொண்ட உணர்வாளர்.. 
 
மாவீரராகி போனோரெல்லாம் மாஸ்டர் வந்துவிட்டாரென வானில் மாலையுடன் நிற்கும் மகத்துவத்துடன் விடைபெற்றுள்ளார். 
 
இவர் இல்லாத வல்வையானது நிரப்புவதற்கு வெறுங் காற்றைத்தவிர வேறு ஆளில்லா வெற்றிடமாகியுள்ளது.. 
 
அவரே மீண்டும் வரவேண்டும், அதுவரை காத்துக்கிடக்கும் அந்த வெற்றிடம்.. 
 
போனவர் வருவதும் வந்தவர் போவதும் பூமியில் ஒன்றும் புதிதால்ல.. விடை கொடுப்போம். 
 
வல்வை தந்த வற்றாத ஜீவநதி வ.ஆ.அதிரூபசிங்கம் மாஸ்டர் ஆத்ம சாந்திக்காய் ஆண்டவனை பிரார்த்திப்போம்.. 
 
அவர் வாழ்க்கை இன்று முதல் புத்தகமானது படியுங்கள்.. அவருக்கு அதுவே சரியான அஞ்சலி. 
 
இன்றைய வல்வை இளைஞர்களுக்கு அவரே நூலகம்.. ஊறணியில் எரியும் தீயாலும் விழுங்க முடியாத அறிவு நூலகம்.. 
 
சந்நிதி முருகா உன் அருள் அவரை மீதி வழி நடத்தட்டும்.. கவனம் கை பிடித்து அழைத்துச் செல்.. 
 
யாமிருக்க பயம் ஏன்.. என்ற முருகா ஏற்றுக்கொள்.. 
 
வல்வை ஒன்றியம் டென்மார்க்

ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக் கழகம் 

வல்வை மாலுமிகள் சங்கம்  

கனடா  வல்வை  நலன்புரிச்  சங்க இரங்கல் கவிதை

1.  தமிழ் அதை 
   விரும்பிக் கற்றாய் - நீ
   அமிழ் ததால் 
   விரும்பப் பெற்றாய்.
 
2.  பல்கலைப் பள்ளி 
   நீ சென்றதில்லை - எனின்
   பயில்கலையில் உனை
   யாரும் வென்றதில்லை.
 
3.  உழைப்பால் நீ
   உயர்ந்த துண்டு - எனில் 
   அலலுப்பால் நீ
   சரிந்த தில்லை.
 
4.  காப்பாளனாய் நீ
   இருந்தால் - வண்டி
   கலகலப்பாய் தான் 
   இருக்கும்!
 
5  வெண் கட்டி 
   உன்கை இருப்பின் - பின்
   களை கட்டி
   வகுப் பிருக்கும்!
 
6  மேடைகளில் நீ
   நடித்ததுண்டு - எனின்
   மீதி வேளையில் 
   நடித்ததில்லை.
 
7  கட்டுரை கதைகளால்
   கவர்ந்த துண்டு - எனின் 
   கட்டுக் கதை நீ 
   அளந்த தில்லை.
 
8  சொல் சிலம்பு
   கலையதில் திகழ்ந்தாய் -நீ
   மல் சிலம்பு
   கலைகளும் பயின்றாய்.
 
9  கணினிப் பணிபுரி
   மகவுகள் பெற்றனை - அவர்
   அவனி எம் வல்வை
   அறிய வைத்தனர்.
 
10 பெற்ற மண்ணை நீ
   மதித்த துண்டு - அதை
   விட்டு அகல 
   நினைத்த தில்லை.
 
11. இனம் வாழ நீ
   நிதம் நீ உழைத்தாய் - நம்
   இனம் தாழ ஒரு
   மகள் ஈந்தாய்.
 
12. நடத்து நனாய் நீ
   இருந்த துண்டு - வீணாய் 
   காலம் கடத்துனனாய்
   நீ இருந்த தில்லை.
 
13 குடும்பத் தலைவனாய்
   இருந்த உனை - இறை 
   இடும்பை தந்து 
   கவர்ந்தது பிழை.
 
14 பந்தா இன்றிப் 
   பலரையும் அணைத்தாய் - பின்
   எந்தாய் ஏன்தான்
   உன்றனை அழைத்தாள்?
 
15. மனைவியை மகவினை 
   நீ அணைத்தாய் - எனின் 
   இடையில் பிரிய 
   இறை ஏன்  வகுத்தான்.
 
16. கந்தனுக்கு நீ
   பூ எடுத்தும் - அவன்
   உந்தன் உயிர்
   அதை எடுத்தான்.
 
17 பிறப்பவர் இறப்பது 
   இது நியதி - மிகச்
   சிறப்புடன் நின் நினைவு
   தொடர்வது உறுதி
 
கவியாக்கம்: கனக மனோகரன் (சட்டத்தரணி)
 
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ), வல்வை புளுஸ் வி.க. (ஐ.இ)
 
 
அதிரூபசிங்கம் மறைவு கண்ணீர் அஞ்சலி - குறள்வழி நின்று தந்தை மகனுக்கும் மகன்  தந்தைக்கும்..சோ.செ.தெய்வச்சந்திரன்
 
 
வல்வை நலன்புரிச் சங்கம் (பிரான்சு), வல்வை புளுஸ் வி.க. (பிரான்சு)
 
வல்வை மண்னின் பேச்சாளர், எழுத்தாளர், கலைஞர், கவிஞர், ஆசான், அறிவிப்பாளர், போசகர், நடத்துனர் எனப் பலதுறைகளிலும் தடம்பதித்த ஓர் அறிவுப் பெட்டகத்தை இன்று வல்வை மண் இழந்து நிற்கின்றது.
 
 
உங்கள் இழப்பு வல்வை மண்ணில் ஓர் நீண்ட இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடைய நாங்களும் பிராத்திக்கின்றோம்.
        
வல்வை நலன்புரிச்சங்கம்,
வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகம்
பிரான்சு  
 
குறள்மகன் வ.ஆ.அதிரூபசிங்கம்
 
வல்வையர் வாசமலரில் ஒரு இதழ்; உதிர்ந்தது
 
வல்வையரின் வாசம் சொல்ல
 
வாள் வெட்டித்துறை இணையம் தந்தவரே
 
வல்வையரின் இனியவர்கள்
 
இணைந்து வாழ விரும்பிய இதயமே
 
 
குறள்வழி நின்று
 
தந்தை மகனுக்கும் மகன் தந்தைக்கும்
 
வல்வையர் வாசம் சொல்ல வாழ்ந்தீர்
 
அலைகடல் மேல் வந்தவளின்
 
பாத வீதியில் வாழும் வாழ்வு
 
தலைவன் என்ற சொல் வல்வையர் மகுடம்
 
உன் கழக ஜம்பது வருட தலைமைக்கு
 
வல்வையரின் கின்னஸ் சாதனை
 
வாத்தியாரே என்று பாடிவிட்டார் ஒரு சிலர்
 
பாட நினைத்தோர் நூற்றுக்கணக்காணோர்
 
எதை பாடுவது எப்படி பாடுவது இதயம் கனக்கின்றது
 
நீங்கள் கற்ற யோகக் கலையில்
 
உடம்பின் முன்னும் பின்னும் கைகூப்பி
 
வணக்கம் சொல்லும் தகமை
 
வல்வை வாசத்திற்க்குள் நீங்கள் ஒருவர்;
 
வல்வையரின் வாசமும் பாசமும் உறுதியும் உரமும்
 
வல்வை வரலாற்றின் ஒரு பக்கம் உங்களுக்கும்…
 
 
புலம்பெயர்ந்த வல்வை வாசமுடையோர் சார்பாக
சோ.செ.தெய்வச்சந்திரன். இங்கிலாந்து

வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றம்

குழவிகள் கலா மன்றம்

வல்வை மூத்த பிரஜைகள் சங்கம்

 

சிவசண்முகம் ஐயர், பிரதமகுரு - செல்வச் சந்நிதி முருகன் கோயில்

ஆறுமுகப்பாலன் தூது சென்ற வீரபாகுத்தேவர் பாதச்சுவடும் சந்நிதி காலப் பூசனை புரிந்த சந்நிதி ஆற்றங்கரை ஓடைக்கரையருகே  வேதநாயகம் ஜயர் இராசவேல்மணி அம்மா அவர்களது மடத்தில் அன்பர் அதிரூபசிங்கம் அவரது சகோதரன் உடன் தாயாரின் அரவணைப்பில் சிறுவயது தொடக்கி இளம்பராயத்தை சந்நிதி சந்தப்பெருமான் கவர்ந்தான். 

அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் 

அக்காலத்தில் மருதர் கதிர்காமரது வம்ச பரம்பரையினருடன் சேரும் வாய்ப்புப் பெற்றார். புவியினில் புகழ் பூண்ட பூவரசம் மரத்தமர்ந்த பூரணன், வேலன் முருகன் தன்னை பூசிக்க மருதர் கதிர்காமரை தடுத்தாட் கொண்டு வல்லியாற்றருகே ஆலயம் அமைத்து பூசனை வழிபாடுகளை செய்ய ஏற்று ஆற்றப்படுத்தினார்.

கதிர்காமரின் பூசனைக்கு பூ தொண்டர் எனும் புதுமையுடன் சந்நிதியில் தொண்டர் குழாத்தை நிறுவி நித்திய நைமித்திய பூசனைகளைத் தொடர அருள்பாலித்தார். தொண்டர் வம்சமும் பெருமையுடன் பூ தொண்டுடன் ஆலய தேவையுடானாகிய பணிகளையும் தொடர அருள் புரிந்தார்.

அங்ஙனமாகிய பெருமையாகவும் வம்ச அடியவராகவும் ஆறுமுகம் அவர்கள் ஆதிரூபசிங்கம் எனும் ஆசிரியர் முருகப்பெருமானின் தொண்டு புரிந்து வந்தார்.  தமது தொழில் (இ.போ.ச + ஆசிரியர்) காலத்திலும் சந்நிதி வந்து தொண்டு புரிவதில் அதிக ஆர்வமாக மதித்து ஒழுகிய அன்பர். பூ எடுத்தல் நிமித்தமாக தென்மராட்சி வலிகாமம் முதலிய இடங்கட்கும் கால் நடையாக சென்று மீளிவதை பெருமையாகவே பேசுவார். 

இளம்வயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் தாம் சேர்ந்து கல்வி மற்றும் ஆலய தொண்டு செய்து பழகியதை பெருமையாக பேசுவார். 

தம்மிலும் இளையவர் தமது மைந்தரிலும் சிறுவராக இருந்தாலும் தாழ்மையாக மரியாதையாக அவர் பெயருடன் ஜயா என அன்பாக அழைப்பது அவரது பண்பு. "கீழோர் ஆயினும் தாழ உரை" தமது தேகம் முதுமை காரணமாக நலிந்தாலும் " உள்ளத்தில் வேலணை நினைத்தால் தன்னை தொண்டு புரிய உள்ளே நின்று இயங்குவான் " என பெருமைகள் பேசுவார். 

இளவயதில் அமரத்துவம் அடைந்த அண்ணா ஆ.பாலசுப்பிரமணியம் அவர்களுடன் நட்பு பூண்டு தொண்டு புரிந்ததை நினைவு கூர்வார்.

தமது விடாமுயற்சியினால் கல்வியை கற்பித்து தாமும் கற்று (கலைமானி) B.A பட்டமும் பெற்றார்.

தாம் வாழ்வில் அனுபூதியில் பெற்ற பேற்றினால் ஆறுமுகப்பாலன் இவன் ஆற்றங்கரை வேலன் எனும் தலைப்புக் கொண்ட அரிய படங்களுடன் கூடிய ஆவண சான்று படைப்பாக சந்நிதி வேலன் தான் அன்பன் உள்ளத்தில் இருந்து புத்தக வடிவாக பூ தொண்டர் பெருமையினை வெளிக்கொணர்ந்தார்.

பூ எடுத்தல் செண்டு கடதேல் மாலை கட்டுதல் செடி வேலைகள் பூசைக்குரிய தீபங்கள் தயார் படுத்தல் அதனுடன் "மடி""பூ" தேர்ந்து சேகரித்து தருதல் என்றெல்லாம் நடைபெறும்.

இவை மட்டுமல்லாது பல சமுக பொது சேவைகள் புரிந்து தமது புதல்வர்களையும் "தந்தை போல் மைந்தரும்" தொடர நிழல் தரும் பயனுள்ள மரங்கள் ஆற்றங்கரை அருகே நாட்டுவித்தார். இறை இன்பப்பேறு பெற்றார். அன்னாரது யாக்கை மறைவினால் துயரும் குடும்பத்தார் மற்றும் எல்லோர்க்கும் மன ஆறுதல் பெற அன்பர் ஒழுகிய ஒழுக்க வாழ்ந்த வாழ்வு ஆற்றிய அற பணியை நினைத்து துயரை கடந்து பெருமைகள் பேசி நிலையான முருகப்பெருமானின் திருவடி நிழலில் சேருகின்ற பேரின்ப வாழ்விற்கு ஆட்படுவோமாக. 

ஓம் சாந்தி             ஓம் சாந்தி                    ஓம் சாந்தி

சிவசண்முகம்ஜயர் - பிரதமகுரு - செல்வச் சந்நிதி முருகன் கோயில்

 

தெய்வேந்திர ஜயர் - பிரதம குரு, செல்வச்சந்நிதி முருகன் கோயில் 

அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் சிறுபராயம் முதல் முருகப்பெருமானது அருளினால் ஈர்க்கப்பட்டு கந்தபுராண காலத்தில் வீரபாகுதேவர் தூது சென்ற சமயம் இத்தலம் அமைந்துள்ள "கல்லோடை " பகுதிகளில் காலடி பதித்த சுவடும் வழிபாடும் இன்றும் போற்றத்தக்கது.

இச்சுவடு அமைந்துள்ள கல்லோடை பகுதிகளில் பெருமான் திருவருளினால் ஈர்க்கப்பட்டு வாழ்ந்த காலப்பகுதியில் கல்வி, ஆலயப்பணி, சமூகப்பணி என தனது இளமைக்காலத்தில் இருந்தே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்துவந்தார்.

அமரர் அதிரூபசிங்கம் அவர்கள் இங்கு வாழ்ந்த காலப்பகுதியில் எமது ஆலயப்பகுதியில் சனசமூகநிலையம் இல்லாதமையை உணர்ந்து எம்முடன் இணைந்து ஓர் சனசமூக நிலையம் அமைக்க முயற்சி செய்தி அதன் பலனாக பொன்னொளி ஐக்கிய இலவச வாசிகசாலை நிறுவுவதில் பெரும் பங்காற்றியிருந்தார். 

அமரர் வ.ஆ .அதிரூபசிங்கம் 

அதுமட்டுமன்றி இவ்வூர் மாணவர்களின் கல்வி நிலையினை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு கல்வியறிவினையும் இலவசமாக வழங்கியிருந்தார். இவ்வாறு வாழ்ந்துவரும் வேளையில் இலங்கை போக்குவரத்துசபை பருத்தித்துறை சாலையில் நடத்துனராக கடமையாற்றிக் கொண்டே தனது கல்விகற்கும் பணியையும் தொடர்ந்து வெளிவாரியாக கலைத்துறையில் பட்டம் பெற்று (B.A) இலங்கை போக்குவரத்துசபை பருத்தித்துறை சாலையில் அதிகாரியாகவும் பணியாற்றினார்.

அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் இல்லற பந்தத்தில் இணைந்து வல்வெட்டித்துறையில் வாழ்ந்தாலும் எமது ஆலய மகோற்சவம், கந்தசஷ்டி, மாதாந்த கார்த்திகை உற்சவங்கள் என அனைத்து  ஆலய நிகழ்வுகளிலும் பூத் தொண்டனாக பெருமானுக்கு சேவை செய்தமை எம் மனக்கண்முன் பசுமையான நினைவுகளாக இன்றும் நிற்கிறது.

அமரர் அவர்கள் முருகப் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தி , அன்பு தான் அனுபவித்த தெய்வீக திருவருள், முருகப் பெருமானின் பெருமைகள் என்பவற்றை உலகோர் அறியும் வண்ணமும் எதிர்கால சந்ததியினரும் தெரியும் வண்ணமும் எதிர்கால சந்ததியினருக்கு தெரியவும் வேண்டி " ஆறுமுக பாலன் ஆற்றங்கரை வேலன்" எனும் நூலினை இலவசமாக வெளியீட்டு முருகப் பெருமான் அருளில் திழைத்தார். அதுமட்டுமன்றி பெருமானது ஆலயப் பகுதியில் மகோற்சவ, கந்தசஷ்டி காலங்களில் பெருமளவிலான பக்தர்கள் ஆலய சுற்றாடலில் உள்ள மரங்களில் தங்கியிருப்பது வழமையாகும். இதனைக் கருத்திற் கொண்டு தனது புதல்வர்கள் மூலம் ஆலய சுற்றாடலில் நிழல் மரங்களை நாட்டி அதற்கான கூடுகளை அமைத்து தொடர்ந்து பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்னும் இயற்கையின் நியதிகளை எவராலும் வெல்ல முடியாது ஆனாலும் மானுடனாக பிறந்த ஒவ்வொருவரும் மானுட பிறவியின் நோக்கத்தை அடைந்து கொள்ளலாம். இவ்வகை இலக்கணங்களுக்கு அமைவாக வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார். அமரரின் பிரிவால் பெரிதும் துயருற்று இருக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் யாவரினதும் மனக்கவலைகள் மாறவும் அமரர் அன்பர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் ஆன்மா பரிபூரண சாந்தி பெற்றுய்யவும் எல்லாம் வல்ல செல்வச்சந்நிதி  வேலனின் பாதாரவிந்தங்களை பணிந்து பிராத்திக்கின்றேன் .

ஓம் சாந்தி              ஓம் சாந்தி                 ஓம் சாந்தி 

வி.தெய்வேந்திர ஜயர் (J.P)

பிரதமகுரு, ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் , தொண்டைமானாறு 

பேரானந்த பெருவாழ்வு எய்திய பூத் தொண்டர் - பாலசுப்ரமணிய ஐயர்

தான் பதித்த இடமெல்லாம் புகழ் பதித்து சேவையையும் தியாகத்தையும் தனதாக்கி எல்லோருடனும் அன்பாகவும்,பண்பாகவும் வாழ்ந்த திரு.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள், தனது சிறுவயது முதல் இறுதி நாள் வரை செல்வசந்நிதி ஆலயத்தில் பூத் தொண்டு செய்து சந்நிதியானின்  பக்தராக மட்டுமன்றி, ஆற்றங்கரை வேலனின் பக்தர்களையும் கவர்ந்த திரு.ஆறுமுகம் அதிரூபசிங்கம் இன்று மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்.

இலங்கை போக்குவரத்து சபையில் நடத்துனராக இருந்த இவர் அறிவிப்பாளர், மல்யுத்த வீரர், நாடக்குழு இயக்குனர், நடிகர், பட்டிமன்ற பேச்சாளர், எழுத்துலகில் ஆசிரியர் என பல்துறைசார் புலமையாளராக விளங்கியவர் .

பூத் தொண்டர்  அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம்

தொண்டைமானாறு பொன்னொளி ஐக்கிய இலவச வாசகசாலையின் ஆரம்ப அங்கத்தவராக இருந்ததுடன் இவ் வாசிகசாலையின் சார்பில் "சுமங்கலி", "சோக்கிரட்டீஸ்" ஆகிய இரு நாடகங்கள் குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் நாடகப் போட்டியில் பங்குபற்றி பரிசும் பெற்றது. 

எல்லோராலும் "மாஸ்ரர்" என அழைக்கப்பட்ட அமரர் அவர்கள் ஆற்றங்கரை வேலனின் பக்தி உந்தலிளால் "ஆற்றங்கரை வேலன்" என்ற நூலை வெளியிட்டார். இவர் மறைந்தாலும் இவருடன் பழகியவர்களின் மனங்களில் என்றும் வாழ்வார். என்னாரின் மறைவால் ஆறாத்துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு சந்நிதி யானின் மூத்த பூத் தொண்டர் என்ற வகையில் எம்மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து அருள்மிகு செல்வச் சந்நிதி வேலவப் பெருமானின் அர்ச்சிக்கப்பட்ட மலராக விளங்கி பேரானந்தப் பெருவாழ்வு பெறுவாராக.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

த.பாலசுப்ரமணிய ஐயர் 

பிரதமகுரு, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோயில் 

 

தொண்டைமானாறு பொன்னொளி சனசமூக நிலையத்தின் நினைவுகளில் அன்னார் அதிரூபசிங்கம்

அன்பு, பண்பு, பாசம், பொறுமை, அமைதி எல்லா நற்குணங்களையும் அமையப் பெற்றவர் அன்னார் ஆறுமுகம் அதிரூபசிங்கம் (மாஸ்ரர்) அவர்கள் 24-08-1938  இல் மலர்ந்து 06-07-2017 இல் இவ்வுலகை விட்டு உதிர்த்தாலும் அன்னார் இவ்வுலகில் வாழ்ந்த காலப்பகுதியில் அவருடைய சேவைகள் எண்ணிலடங்காதவை .

அந்த வகையில் ஸ்ரீ செல்வச் சந்நிதி கோவிலடியில் அமைந்திருக்கும் பொன்னொளி சனசமூக நிலையத்தின் ஆரம்ப காலத் தலைவராக தமது பொறுப்பினை ஏற்று இவ் நிலையத்தினூடாக தமது சேவையினை அன்னார் நீண்ட காலம் ஆற்றிவந்தார். 

மேலும் அன்னார் தலைவராக எமது நிலையத்திற்கான நிரந்தரக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சியில் முக்கிய பங்கினை வகிப்பதுடன் தமது உடல் உழைப்பினையும் மிகச் சிறப்பாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்னார் எமது சனசமூகத்தினூடாக சத்தியவான் சாவித்திரி என்ற நாடகத்தினை நடாத்துவதில் மிகத் துடிப்புடன் செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அன்னார் ஆற்றங்கரை வேலவனின் சிறந்த பக்தனாகவும், ஆன்மீகத்தொண்டு ஆற்றுவதில் ஆதிக ஈடுபாடுள்ளவராகவும் விளங்கினார். 

ஆத்துடன் ஆன்மிகம் தொடர்பான நூலினையும் வெளியிட்டுள்ளார்.

தோற்றம் உண்டேல் மறைவும் உண்டு

பிறப்பு பிறந்தவரை அழவைக்கும் 

இறப்பு பிறரை அழவைக்கும் 

இது இயற்கையின் நியதி, அவர் உடம்பு அழிந்தாலும் வாழ்ந்த முறை, அவர் பெயர், புகழ் என்றும் அழியாது. சந்நிதியானின் பாதாரவிந்தங்களில் முத்திப் பேறு பெற்ற ஐயா எல்லையில்லாப் பேரின்பத்தில் வாழ்க வாழ்கவென வேண்டி அமைவோமாக.

உங்கள் இழப்பு எமக்கும் 

பொன்னொளி சனசமூக நிலையத்தினர் 

தொண்டைமானாறு பொன்னொளி சனசமூக நிலையம்

தொண்டைமானாறு நண்பர்கள்

நாடகக் கலைஞருடனான சந்திப்பு - 75 ஆம் ஆண்டு அதிரூபசிங்கம் மாஸ்டர் வழங்கியிருந்த பேட்டி

கடந்த 6 ஆம் திகதி வல்வையில் இயற்கை எய்திய, வல்வெட்டித்துறையில் சகலராலும் அறியப்பட்ட அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்கள் 75 களில் மேடை நாடகங்களில் கொடி கட்டிப் பறந்தவர். அன்றைய காலங்களில் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் போட்டிகளில் பலத்த போட்டிகளின் மத்தியில் இவர் எழுதி இயக்கி நடித்த நாடகங்களுக்கு பதக்கங்கள் பெற்றவர்.

 
மகனே கண், படையா கொடையா, அந்தக் குழந்தை போன்ற நாடகங்களில் இன்றளவும் அன்று இப்போட்டிகளைப் பார்த்தவர்களால் பேசப்படும் நாடகங்களில் சிலவாகும்.
 
இந்தக் காலத்தில் (70 ஆம் ஆண்டு) வல்வையில் இருந்து வெளிவந்திருந்த "அருவி" கையெழுத்துச் சஞ்சிகை இவரைப் பேட்டி கண்டு "நாடகக் கலைஞருடனான சந்திப்பு" எனும் தலைப்பில் ஆக்கம் வெளியிட்டிருந்தது. 
 
ஆசிரியர் திரு.சு.சக்திவடிவேல் அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்டிருந்த இந்த சஞ்சிகையில், குறித்த பேட்டியைக் பெற்றவர் திரு.கண்ணன் ஆவார்.
 
குறித்த ஆக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  

 

 

 

60 களில் வல்வையில் சந்கூதியில் - முதலாவதாக இடமிருந்து வலம் 

அமரர் வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களின் பூதவுடல் 

காணொளி - அமரர் அதிரூபசிங்கம் அவர்களின் இறுதி ஊர்வலம் (12.07.17)


 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
Shanmugapalan (Australia) Posted Date: July 08, 2017 at 02:33 
My association with Athiroobasingam master goes back to 1960 when I was a 10 year old started "Poo Thondu" for Selva Sannithy Kovil. He was our guardian for younger boys at that time. We kept contact ever since- whether I was visiting Colombo to see my parents or attending Sannathy Kovil festivals later on. I vividly remember his acting talents including in the dramas he acted under the direction of Emperumam Master from Udupiddy. Last Time I met him was during the 2016 Selva Sannathy festival and spend some time with him at his house. A great man and believed his services to the community. May his soul rest in Peace. Many devotees will be missing his familiar figure In Sannathy.

சிவநேசன்.சி (இலங்கை) Posted Date: July 06, 2017 at 23:41 
வல்வையில் நன்கு அறியப்பட்டவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர்.சிறியோர் முதல் பெரியோர்வரை எல்ரோரிடமும் மிக ஈடுபாடு டன் பழகுபவர்.நிறைந்த அறிவும் ஆற்றலும் உடையவர்.இரண்டு கப்பல் தலைவர்களின் தந்தை எனப் பெருமை கொண்டவர்.
அவருடைய திடீர் மரணம் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.அவரின் ஆத்மா சாந்தி அடையப்பிரார்த்திக்றோம்


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - கனகலிங்கம் இந்திரலிங்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/03/2024 (திங்கட்கிழமை)
VEDA கார்த்திகை மாத அறிக்ககை
பிரசுரிக்கபட்ட திகதி: 17/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வெதுப்பகத்துக்கு சீல் வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 16/03/2024 (சனிக்கிழமை)
புகையிரத ஆசன முன்பதிவு Online இல் மட்டும்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
ரேவடி கடற்கரையோரம், மீன் சந்தைப் பகுதி சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சண்முகராசா குமாரதாஸ் (குமரன்)
பிரசுரிக்கபட்ட திகதி: 15/03/2024 (வெள்ளிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பு - அமரர் அருட்செல்வம் இராமநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2024 (புதன்கிழமை)
வல்வை பெண்கள் கரப்பந்து தொடர் - Valvai Black Tigers வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
முன்பள்ளிகளிற்கு வர்ணக்கழிவுக் கூடைகள் விநியோகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)
விளையாட்டுப் போட்டியில் பீரங்கி வண்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
கடற்கரை கபடி போட்டியில் சைனிங்ஸ் அணி வெற்றி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
மனநல மட்டத்தில் (MHQ) 2வது மிக உயர்ந்த தரவரிசையில் இலங்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
சிதம்பரக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
ஆங்கில கற்கை நெறி
பிரசுரிக்கபட்ட திகதி: 11/03/2024 (திங்கட்கிழமை)
தனிநபர்களின் பெயர்களில் முத்திரை வெளியிட வாய்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை வைத்தீஸ்வர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சந்நிதி கோயில் வளாகத்தில் உணவகத்துக்கு சீல் வைப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 10/03/2024 (ஞாயிற்றுக்கிழமை)
சிங்களமொழியில் முதல் தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இரு இலங்கையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
சன்னிதியான் அற்புதங்கள் நூல் வெளியீடு
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
கணபதி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கால்கோள் விழா
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
மண்டப முகாம் வல்வை விளையாட்டுக்கழக அறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
வல்வை சிவன் கோவிலிலும் மகா சிவராத்திரி
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
மண்டப முகாமில் வல்வை வி.கழகத்தால் நடாத்தப்பட்ட திருவிழா கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 09/03/2024 (சனிக்கிழமை)
செங்கடலில் ஹௌதி தாக்குதலில் 3 மாலுமிகள் பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 08/03/2024 (வெள்ளிக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Mar - 2024>>>
SunMonTueWedThuFriSat
     12
3
4
567
8
9
10
1112
13
141516
1718192021
22
23
24
25
2627
28
2930
31      
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai